இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Thursday, July 29, 2010

குறும்படம் - 5

ஒரு மன வளர்ச்சி குன்றிய குழந்தை நம் வீட்டில் பிறந்து விடுகிறதென்றால் அப்போது நாம் எதிர் கொள்ள நேரும் பிரச்சனைகள் என்பதுதான் கதையின் மையம்.



ஒரு பழங்காலத்து பெரிய வீடொன்றில் பல குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அந்த வீட்டின் உரிமையாளரின் மூன்றாவது குழந்தை மன வளர்ச்சி குன்றியதாகப் பிறந்து விடுகிறது. குழந்தைக்கு ஏழெட்டு வயதாகிறது. அவனால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவருக்குமே மிகவும் தொந்தரவாக இருக்கிறது. தினமும் காலையில் மாடியில் நின்று கொண்டு கீழே போகிற வருகிறவர்கள் மீது எச்சில் துப்புகிறான். யாராவது கோபப்பட்டு திட்டினால் அவர்கள் வீட்டின் முன்னால் சிறு நீர் கழித்துவிடுவான். அது மட்டும் இல்லாமல் குடித்தனக்காரர்கள் ஒவ்வொருவருடைய வீட்டு கதவையும் வெளிப்புறமாகத் தாழ்போட்டுவிடுவது, வீடுகளுக்குள் கல், மண் போன்றவற்றை போடுவது, வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டுபோய் கிணற்றில் போடுவது என்று அவனால் ஏற்படும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இரவு நேரங்களில் நாய்கள் ஊளையிட்டால் அவனும் பதிலுக்கு ஊளையிடத் தொடங்கிவிடுவான். இப்படியாக அவர்கள் பட நேரும் துன்பங்கள் அளவுக்கு மீறிப் போகவே அவனை மன நல காப்பகத்தில் விட்டுவிடுவதென்று முடிவு செய்கிறார்கள். ஆனால் அவனோ மனநல காப்பகத்தில் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறான். மனநலக் காப்பகத்தினர் அவனை வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போகிறார்கள்.



அவனது இம்சைகள் மேலும் தொடரவே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் அந்தக் குழந்தையின் வயதையொத்த சிறுவர்கள் வரை அனைவரும் அந்த மன வளர்ச்சி குன்றிய சிறூவனை விஷம் கொடுத்துக் கொன்று விடுவது என்று ஒரு குளிர் ஊடுருவும் இரவில் இறுகிய மனதுடன் முடிவெடுக்கிறார்கள்.



மொட்டைமாடியில் எல்லோரும் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். இதமாகத் தென்றல் வீசிக்கொண்டிருக்கிறது. நிலவொளி பூமியை தாயின் கருணையோடு தழுவிக் கொண்டிருக்கிறது. மன வளர்ச்சி குன்றிய குழந்தையோ பசியால் துடிக்கிறது.. அவனுடைய கை சூம்பிப் போய் இருக்கும் என்பதால் யாரவது ஊட்டினால் தான் அவனால் சாப்பிட முடியும். ஒவ்வொருவருடைய அருகிலும் போய் நின்று கெஞ்சுகிறது. நடுவில் இருக்கும் பாத்திரத்தில் பிசைந்து வைக்கப்பட்டிருக்கிறது விஷம் கலந்த உணவு. எடுத்து ஊட்டுவதற்கான தைரியம் யாருக்கும் இல்லை. அந்த இரவு அப்படியே கழிகிறது.



கொல்வதற்குப் பதிலாக அந்தக் குழந்தையை எங்காவது கண்காணாத இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு வருவதென்று முடிவு செய்கிறார்கள். பாம்பேக்குச் செல்லும் ரயில் ஒன்றில் அவனை ஏற்றி அனுப்பிவிடுவதெண்று முடிவுசெய்கிறார்கள். ஸ்டேசனுக்குப் புறப்படுகிறார்கள். காரில் முதல் ஆளாக ஓடிப்போய் ஏறிக் கொள்கிறான். அவனைப் பிரிவது குறித்த வருத்தமும் அவர்களுக்கு இருகிறது. அதே சமயம் அவனை அவர்களால் சகித்துக்

கொள்ளவும் முடியவில்லை. குழந்தைத்தனமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டிய அவனது விளையாட்டுகள் ஒவ்வொன்றாக அவர்களுக்கு நினைவுக்கு வருகிறது.



வெளியிடங்களுக்குப் போகும்போது குழந்தைகள் எங்காவது தொலைந்து போய்விட்டதென்றால் அப்பவின் பெயர், அம்மாவின் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண் இவற்றை சொல்ல வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருப்பார்கள். குழந்தைகள் அதை அடிக்கடி ஒரு விளையாட்டுபோல் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இந்தக் குழந்தயை எங்கு



கொண்டுபோய்விட்டலும் திரும்பி வந்துவிடுமோ என்ற கவலை ஏற்படத்தொடங்கும். அவனது அப்பா சொல்லுவார், சனியனைத் தலை முழுகினதும் வீட்டையே மாத்திடனும்.





கார் ஸ்டேஷனைச் சென்று சேருகிறது. சிறிது நேரத்தில் ரயில் வந்து நிற்கிறது. அவனை ஏறச் சொல்கிறார்கள். தனியாக ஏற மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். அப்பா அம்மாவும் பிற குழந்தைகளும் கூடவே ஏறிக்கொள்கிறார்கள். பிற குழந்தைகள் அவனுடன் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறார்கள். அவன் ஒரு இடத்தில் போய் ஒளிந்து கொள்கிறான். ஒவ்வொருவராக மெல்ல டிரெய்னிலிருந்து இறங்குகிறார்கள். ரயில் புறப்படும் நேரம் வருகிறது. அப்பா மெதுவாக இறங்குகிறார். அவனது அம்மாவுக்கு இறங்க மனம் வர மாட்டேன் என்கிறது. அப்பாவோ வலுக்கட்டாயமாக அவளையும் இறக்கிவிடுகிறார். ரயில் மெள்ள புறப்படுகிறது. அது வரை விளையாடி கொண்டிருந்தவன் ஒளிந்திருந்த இடத்திலிருந்து வெளியே வருகிறான். ரயில் புறப்படுவது தெரிகிறது. அப்பா அம்மா என்று அழுதபடியே ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக தேடிக் கொண்டு போகிறான். தான் ஏமாற்றப் பட்டுவிட்டது மெல்லப் புரிய ஆரம்பிக்கிறது. ஜன்னல் கம்பியில் முகத்தை புதைத்து ஸ்டேஷனை எட்டி எட்டிப் பார்க்கிறான். அவனுக்கு அழுகை பொத்துக் கொண்டு வருகிறது. அவனது பிஞ்சுக் கரங்கள் ஜன்னல் வழியாக வெளியே நீண்டு தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய இறைவனிடம் முறையிடுவது போல் காற்றில் யாசிக்கிறது. மெள்ள ரயில் திருப்பத்தில் மறந்து போகிறது.



அடுத்த ஷ்டேஷனில் டி.டி.ஆர். ஏறுகிறார். டிக்கெட் எங்கே என்று கேட்கிறார். அவன் இல்லை என்கிறான். உங்கூட யார் வந்திருக்காங்க, அப்பா அம்மா பேரு என்ன என்று கேட்கிறார். அவன் டாய்லெட் அருகில் உட்கார்ந்திருக்கும் ஊனமுற்ற சிறுவன் அருகில் போய் உட்கார்ந்து கொள்கிறான். அவர் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் போய்விடுகிறார். அந்த சிறுவன் அவனைப் பார்த்து ஸ்னேகமாக சிரிக்கிறான். உங்க அப்பா, அம்மா பேரு உனக்கு தெரியாதா என்று கேட்கிறான். மனவளர்ச்சி குன்றியவன் அப்பா பெயர், அம்மா பெயர், வீட்டு முகவரி, எல்லாவற்றயும் தனது மழலை மொழியில் சொல்கிறான். கை தட்டி சிரிக்கிறான். ஊனமுற்ற சிறுவன் உடனே டி.டி.ஆரைக் கூப்பிடுகிறான். அவர் அருகில் வந்ததும் எதுவுமே தெரியாதது போல் நடிக்கிறான். அவர் போனதும் மீண்டும் கைதட்டி சிரிக்கிறான். ஊனமுற்ற சிறுவன் அவனை ஆறுதலாக வருடியபடியே உங்க அப்பா அம்மாவ உனக்கு பிடிக்கலியா... என்று கேட்கிறான். பொங்கிவரும் அழுகையை அடக்கியபடியே அவங்களுக்குதான் என்னையப் பிடிக்கல என்கிறான்.

ரயில் பெருங்குரலெழுப்பியபடியே ஒரு குகைக்குள் செல்கிறது. ரயிலுக்குள் மெல்ல இருள் பரவுகிறது.

2 comments:

  1. நல்ல குறும்படம். நீங்கள் விவரித்த விதம் படம் பார்த்ததைப் போலவே இருந்தது.

    சுட்டி தந்த ஹரனுக்கு நன்றி

    ReplyDelete