இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Saturday, July 24, 2010

போபால் - 4


பி.பி. எண்ணெய்க் கசிவு

மெக்ஸிகோ வளைகுடாவில் ...

நடுக்கடலில் இருந்த பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய் கசிவு

பெட்ரோலிய நச்சினாலும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதாலும் கடல் வாழ் உயிரினங்களுக்கு பேராபத்து!

34,000 பறவைகள், 1200 வகை மீன்கள், 1400 மெல்லுடலிகள், 1,500 வகை நத்தைகள், 4 வகை கடல் ஆமைகள், 29 கடல் பாலூட்டி விலங்குகளின் வாழ்க்கை பரிதாபத்துக்குள்ளாகும் நிலையில் இருக்கிறது.

கடற்கரை மணல் வெளியில் சூரியக் குளியல் எடுத்தும், கடல் சறுக்கு விளையாடியும், படகுச் சவாரி செய்தும் விடுமுறையைக் கொண்டாட நினைத்த ஆயிரக்கணக்கானோர் கடலில் எண்ணெய் கசிந்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சுற்றுலாவை நம்பியிருந்த கடலோர விடுதிகளுக்கு பெரும் இழப்பு

கடலோர வீடுகளின் விலையும் வெகுவாகச் சரிந்துவிட்டது.

மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் போக முடியவில்லை.

பி.பி. நிறுவனம் எல்லாரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

கேட்டதற்கு அதிகமாகவே கொடுத்து ஈடுகட்ட முழுமனதுடன் ஒப்புக் கொண்டுள்ளது.

மனித உயிர்கள் இழப்பு : 11

போபாலில் இறந்தவர்கள் : 30,000க்கும் மேல்; இன்றும் நோயால் இறந்து கொண்டிருப்பவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல்

எண்ணெய் கசிவு நஷ்ட ஈடு : 20 பில்லியன்

போபால் விஷ வாயுக் கசிவு நஷ்ட ஈடு : 478 மில்லியன் டாலர். அதாவது மெக்ஸிகோ எண்ணெய் கசிவுக்குக் கொடுத்ததைவிட சுமார் 200 மடங்கு குறைவு.

அனைத்து நச்சைக் கழிவையும் தன் சொந்தச் செலவில் அகற்றுவதாக விபத்துக்குக் காரணமான பி.பி. வாக்குறுதி.

போபால் நச்சுக் கழிவை அகற்ற யூனியன் கார்பைடு திட்டவட்ட மறுப்பு

இந்தியா தானே அகற்ற ஏகமனதாக முடிவு..!

சாரே ஜஹான்சே அச்சா... இந்துஸ்தான் ஹமாரா பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.

பிரேக் முடிந்து நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது.

பெண் அறிவிப்பாளர் : லெட்ஸ் வெல்கம் அவர் நெக்ஸ்ட் எண்டர்டெய்னர்.

முக்காடு போட்ட ஒரு பெண்மணி அரங்குக்குள் நுழைகிறார்.

ஆண் (அவரைப் பார்த்து சிரிக்கிறார்) : எங்க ஊர்ல எல்லாம் மதில் எட்டிக் குதிச்சு தப்பு காரியம் செய்யப் போகும்போதுதான் இப்படி தலைல முக்காடு போட்டுப்போம்.

பெண் : எங்க ஊர்ல இதுதான் வழக்கம்.

ஆண் : எது மதில் எட்டிக் குதிச்சு போய் தப்புக் காரியம் செய்யறதா..?

அனைவரும் சிரிக்கிறார்கள். முக்காடு அணிந்த பெண் தர்ம சங்கடத்தில் நெளிகிறார்.

ஆண் : ஓ.கே. நாம நிகழ்ச்சிக்குப் போவோம். டிசம்பர் மூணாந் தேதியன்னிக்கு எங்க இருந்தீங்க? எப்படி இருந்திங்க..? விஷ வாயு கசிஞ்ச போது என்ன செஞ்சிட்டிருந்தீங்க?

நல்லா தூங்கிட்டிருந்தேன். திடீர்னு இருமல் அதிகமாச்சுது. எழுந்திரிச்சுப் பார்த்தேன். மங்கலான விளக்கொளியில அறை பூரா புகை பரவியிருந்தது தெரிஞ்சது. ஓடு ஓடுன்னு வெளியில எல்லாரும் கத்தற சத்தம் கேட்டுச்சு. என் கண்ணெல்லாம் எரிய ஆரம்பிச்சிது. மூச்சை இழுத்து விழும்போது ஏதோ தீயை உறிஞ்சறது மாதிரி ஒரே எரிச்சல். கைக்குழந்தை எரிச்சல் தாங்க முடியாம வீல்ன்னு அழ ஆரம்பிச்சிடுச்சு. வீட்டில இருந்த எல்லாருமே இருமிட்டிருந்தாங்க.

நாம எல்லாரும் ஆஸ்பத்திரிக்குப் போயாகணும்னு என் மாமியார் சொன்னாங்க. என் கைக்குழந்தையை இடுப்புல தூக்கிக்கிட்டேன். என்னோட சின்ன பொண்ணை கையைப் பிடித்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டேன். என் நாத்தனார் அவரோட ரெண்டு குழந்தையை கையைப் பிடிச்சு கூட்டிக்கிட்டு புறப்பட்டாங்க. என் மாமனார் தன்னோட ஐந்து வயது செல்லப் பேரனை தூக்கிகிட்டாரு.

ஆண் : குழந்தைகள்லாம் எங்கயோ எஸ்கர்ஷனுக்குப் போறதா நினைச்சு சந்தோஷப்பட்டிருக்கும். இல்லையா..?

நாங்க எல்லாரும் இரவு உடையிலயே புறப்பட்டோம். வேற எதையுமே எடுத்துக்கலை. வெளிய ஒரே குளிரா இருந்தது. ஆனா அதைப் பற்றியெலாம் கவலைப்படற நிலைல நாங்க இல்லை. தப்பிச்சு ஓடணும். அது ஒண்ணுதான் எங்களோட நோக்கமா இருந்தது.

தெருவில பார்த்தபோது, ஏதோ கலவரம் நடந்து முடிஞ்சது மாதிரி செருப்பும், போர்வையும் பையும் பொருட்களும் தாறுமாறாக் கிடந்தது. நிறைய பேர் உயிரைக் கையில பிடிச்சிட்டு ஓடிப் போயிருக்காங்க. மேகம் மாதிரி ஒரு புகை மண்டலம் எல்லா இடத்திலயும் பரவியிருந்தது. தெருவிளக்குகள் ரொம்பவும் மங்கிப் போய் தெரிஞ்சுது. கூட்டமா ஓடினதுல நிறைய பேர் குடும்பத்துல இருந்து பிரிஞ்சு போயிருந்தாங்க. அம்மாக்கள் குழந்தைகளைத் தேடி அலைஞ்சிட்டிருந்தங்க. குழந்தைங்க அம்மாக்களைத் தேடி அழுது கொண்டிருந்தன. எங்க குடும்பமும் பிரிஞ்சு போயிடிச்சிது. நாத்தனார் எங்கயோ வேற வழியில ஓடிட்டாங்க. வழி நெடுக நிறைய பேர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருந்தாங்க.

கொஞ்ச தூரம் ஓடியிருப்போம். அப்போ தூரத்துல ஒரு டிரக் போறது தெரிஞ்சுது. எங்க மாமனார் எங்க எல்லாரையும் ஏறச் சொன்னாரு. எங்களால ஏற முடியலை. ரொம்ப உயரமா இருந்தது. எங்க மாமியார் இதய நோயாளி வேற. அவரால நடக்கவே முடியலை. ஆஸ்பத்திரியோ ரொம்ப தூரத்துல இருந்துச்சு. என் கைக்குழந்தை மயங்கி போயிருந்தது. கன்னத்துல தட்டி தட்டி உசிர் இருக்கான்னு பார்த்தபடியே ஓடினேன். சின்ன பொண்ணு வாந்தி எடுத்துட்டே இருந்துச்சு. எப்படியும் ஆஸ்பத்திரிக்குப் போயிடணும் அந்த ஒரே ஒரு எண்ணம் மட்டும்தான் இருந்தது. இன்னும் கொஞ்சம் தூரம் ஓடினதும் எல்லாரும் கீழ விழ ஆரம்பிச்சிட்டோம். நான் நாலு மாச கர்ப்பமா இருந்தேன். விழுந்ததும் அந்த இடத்துலயே நடுத் தெருவிலயே கரு கலைஞ்சு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது. இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதுங்கற மாதிரி ஆகிடிச்சு. என் ரத்தத்துலலே விழுந்து புரண்டேன். வாந்தியும் பேதியும் ஆரம்பிச்சிடுச்சு. எல்லாம் ரத்தத்துல கலந்துச்சு.

கண்ணு மங்க ஆரம்பிச்சது. என்ன நடந்துச்சுன்னே எங்களுக்குப் புரியலை. அங்க இருந்து தப்பிச்சுப் போகலைன்னா செத்துருவோம் அப்படிங்கறது மட்டும் நல்லா புரிஞ்சது. ஏன்னா தரையில மயங்கி விழுந்ததா நாங்க நினைச்சவங்க உண்மையிலயே செத்துப் போனவங்கங்கறது மெதுவாத்தான் தெரிஞ்சது. அந்தப் பக்கமா போன வண்டிகள்ல ஆட்கள் ஏராளமா தொத்திட்டுப் போறது தெரிஞ்சது. நாம செத்தாலும் பரவாயில்ல குழந்தையை எப்படியும் காப்பாத்திடணும்னு பலத்தையெல்லாம் திரட்டி அந்த வண்டியை நோக்கி ஓடினேன். ஏத்தமா இருந்ததுனால வண்டி மெதுவா போயிட்டிருந்துச்சு. யாரோ கை கொடுத்து தூக்கி விட்டாங்க. எப்படியோ ஏறி அந்தக் கூட்டத்துக்குள்ள விழுந்தேன். ஆனா கூட்டம் அதிகமானதுனால வண்டி குடை சாய்ஞ்சிடுச்சு. வேற வழியில்லாம எல்லாரும் உயிரைக் கையில பிடிச்சிட்டு ஓட ஆரம்பிச்சோம். வழி நெடுக பிணங்களா இருந்துச்சு. வேற வழியில்லாம மிதிச்சு தள்ளிட்டு ஓடினோம்.

அப்படியே ஒரு குழில விழுந்தோம். கண் முழிச்சுப் பார்த்தபோது பொழுது விடிஞ்சிருந்தது. விஷ வாயுக் கசிவை தடுத்து நிறுத்தியாச்சு. நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்குத் திரும்பலாம்னு ஸ்பீக்கர்ல அறிவிக்கறதைக் கேட்டோம். நாலைஞ்சு பேர் குழில கிடந்த எங்களைத் தூக்கி பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க. தண்ணி கொடுத்தாங்க. உடம்பைக் கழுவிக்கிட்டோம். புது டிரஸ் கொடுத்தாங்க அதை போட்டுக்கிட்டோம். டீ போட்டுக் கொடுத்தாங்க. ஆனா குடிக்க முடியலை. அப்பயும் எங்க தொண்டை எரிஞ்சிட்டுத்தான் இருந்தது. கழுத்தைப் பிடிச்சி யாரோ நெரிக்கற மாதிரி மூச்சு முட்டிக்கிட்டுத்தான் இருந்தது.

வீட்டுக்குத் திரும்பினோம். வீட்டுல இருந்த எல்லா பொருள்லயும் நீலம் பாரிச்சிருந்தது. எதையும் சாப்பிடலை. கொடுங்க கனவு போல இருந்த இரவு முடிஞ்சிடுச்சு. ஆனா, அதைத் தொடர்ந்து புறக்கணிப்பின் விடியல் ஆரம்பிச்சிருந்தது. வேதனையின் சூரியன் எங்கள் வாழ்வில் அஸ்தமிக்கவே இல்லை. அனலாய்த் தகிக்கிறது... கானல் கடல் எங்கள் முன் அலையடித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் இந்தியராகப் பிறந்திருக்கவே கூடாது.

அரங்கில் பெரும் மவுனம் நிலவுகிறது. முக்காடு போட்ட பெண் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்.

ஆண் : ஓ.கே. நல்லா சொன்னீங்க உங்க கதையை. டியர் வியூவர்ஸ் மறுபடியும் சொல்றோம். இந்த நிகழ்ச்சியோட உண்மையான ஜட்ஜஸ் நீங்கதான். போபால் சம்பவத்துக்கு யார் காரணம் ஆப்ஷன் ஏ : யூனியன் கார்பைடு. ஆப்ஷன் பி இந்திய ஆளுங்கட்சி. ஆப்ஷன் சி இந்திய எதிர்கட்சி. ஆப்ஷன் டி : இந்திய மக்கள். உங்க பதிலை எங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்க. பரிசு உங்கள் வீடு தேடி வரும். ஓ.கே. நாம இப்ப சின்ன பிரேக் எடுத்துப்போம். நிவாரணங்கள் தொடர்பான நிறைய விஷயங்கள் அடுத்த செக்மண்ட்ல இருக்கு. அதனால எங்கயும் போயிடாதீங்க.

பாருங்க ...

பெண் : பாருங்க...

ஆணும் பெண்ணும் சேர்ந்து : பார்த்துக்கிட்டே இருங்க.

பிரேக் முடிந்து ஷோ ஆரம்பிக்கிறது.

ஆண் : இந்தியத் தலைவர்களோட பங்களிப்பு இல்லைன்னா இந்த சாதனையைச் செஞ்சிருக்க முடியாதுன்னு ஆரம்பத்துல சொன்னீங்களே அதைக் கொஞ்சம் விரிவாச் சொல்ல முடியுமா..?

ஆண்டர்சன் : ஓ ஷ்யுர். உண்மையில ஒரு நதியோட போக்கைத் தீர்மானிப்பது கரைகள்தான்னு சொல்வாங்க. அதுமாதிரி எங்களோட செயல்பாடுகளைத் தீர்மானிக்கறது எங்களை விமர்சனபூர்வமா கண்காணிக்கறவங்கதான். அந்தவகையில அமெரிக்காவுல எங்களோட நடவடிக்கைகளை அங்க இருக்கற அதிகாரவர்க்கத்தினர், எதிர்கட்சிகள், பத்திரிகைகள் அப்படின்னு நிறைய பேர் கட்டுப்படுத்துவாங்க. இந்தியால ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் எங்களுக்கு ரொம்ப ஆதரவா தோளோடு தோள் கொடுத்து நின்னாங்க. அதனாலதான் எங்களல நாங்க விரும்பின மாதிரி இருக்க முடிஞ்சது. இதுல அவங்களோட முக்கியமான பங்குன்னு பார்த்தா அந்த சம்பவத்துக்குப் பிறகு அவங்க நடந்துக்கிட்ட விதம் இருக்கே அதுதான் ரொம்பப் பிரமாதம். அதுக்கு முன்னால கம்யூனிஸ்ட் கட்சிங்க என்னவோ கூட்டம் போடுவானுங்க. உண்டியல் பிரிப்பானுங்க. பட்டினியாக் கெடக்கறவங்களைக் கூப்பிட்டு உண்ணாவிரதம் நடத்துவானுங்க. அவங்க சொல்றதை யாருமே காதுல போட்டுக்கவே மாட்டாங்க. விஷயம் என்னன்னா நிறைய பேருக்கு இந்த ஃபேக்டரி எவ்வளவு சக்தி வாய்ந்தது... அது வெடிச்சா என்ன ஆகும்னு எதுவும் தெரியாது. அதனால, எங்களை எதிர்த்து அப்போ நடந்த விஷயங்களுக்கு எந்த வலுவும் கிடையாது. நாங்க அதையெல்லாம் ரொம்ப ஈஸியா சமாளிச்சிட்டோம். ஆனா, இந்த சம்பவம் நடந்ததுக்குப் பிறகு இந்த அரசுகள் செய்த உதவி இருக்கே அதுதாங்க கிரேட்.

என்னவெல்லாம் பண்ணினாங்க... வரிசையா சொல்லுங்களேன்.

இந்த நம்பவம் நடந்தபோது நான் என் வீட்டுல இருந்த பார்ல திராட்சை மது குடிச்சிட்டிருந்தேன். போபால்ல கேஸ் லீக் ஆயிடிச்சுன்னு சொன்னாங்க. சோ வாட். அது அடிக்கடி நடக்கற விஷயம்தான அப்படின்னு கேட்டேன். இல்லை. இது ரொம்பப் பெரிய அளவுல லீக் ஆகிடிச்சு. ஆயிரக்கணக்குல செத்துட்டாங்க. நீங்க உடனே புறப்பட்டு வாங்க. அப்படின்னு சொன்னாங்க. சரின்னு கிளாஸ்ல ஊத்தினதை அப்படியே ஒரு முழுங்கு முழுங்கிட்டு ஃபிளைட் பிடிச்சு இந்தியா வந்து சேர்ந்தேன். உடனே இந்திய அரசு என்னை கைது பண்ணிடிச்சு.

ஆண் : உங்களைக் கைது பண்ணிச்சா..?

சிங்ஜி : அப்படி எங்க மனசு நோகறமாதிரி எதுவும் பேசாதீங்க. நாங்க உங்களுக்கு வெறும் பாதுகாப்பு கொடுத்தோம். அவ்வளவுதான். ஹவ் டேர் வி அரெஸ்ட் யு சார்..?

ஆண்டர்சன் : ஓ.கே. ஒருவகையில அதை பந்தோபஸ்துன்னும் சொல்லலாம். ஆனா என்னைக் கைது பண்ணனும்னுதான் எல்லாரும் சொன்னாங்க. அந்த நேரத்துலதான் எஜமான விசுவாசம்னா என்ன அப்படிங்கறதை நான் பார்க்க முடிஞ்சது. அப்போதைய முதலமைச்சர், உள்துறை அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி அப்படின்னு ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் உத்தரவுகள் பறக்குது. எனக்கு எந்த அசம்பாவிதமும் நடந்துடக்கூடாது அப்படின்னு. நான் போபால் ஃபேக்டரி இருக்கற இடத்துக்குப் போறேன்னு சொன்னேன். வேண்டாம்னு ஜனாதிபதி என்னை தன்னோட மாளிகைக்கு அழைச்சுட்டிப் போயி தலைவாழை இலை போட்டு வடை பாயாசத்தோட ஒரு விருந்து கொடுத்தாரு. இந்தியர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள் அப்படின்னு சொல்றது சும்மா ஒண்ணுமில்லை. சாப்பிட்டு முடிச்சு பீடாவெல்லாம் போட்டுட்டு வந்தேன். வெளிய ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு பன்ணியிருந்தாங்க. இந்திய அரசு எப்ப விசாரணைக்குக் கூப்பிட்டாலும் நான் வந்து பதில் சொல்லத் தயார்ன்னு சொன்னேன். புஷ்பக விமானம் மாதிரி ஒரு சொகுசு விமானம் இந்திய ஏற்பாடு பண்ணிக் கொடுத்துச்சு. ஜம்னு ஏறி உட்கார்ந்தேன். அது ஜிவ்வுன்னு மேல ஏறும்போது என் காலுக்குக் கீழ இருந்த இந்தியாவை கடைசியா ஒரு தடவை பார்த்தேன். வழியனுப்ப வந்த அதிகாரிகள் கண்ணுல அப்படியே ஆனந்தக் கண்ணீர். என்ன பத்திரமா அனுப்பி வெச்ச அந்தக் காட்சியை என்னால வாழ்நாள்ல மறக்கவே முடியாது.

அத்வானிஜி : யு டிசர்வ்ட் இட் சார்.

ஆண்டர்சன் : அந்த விசுவாசம் இன்னிக்கு வரைக்கும் தொடருது. இதோ கடைசியா ஒரு தீர்ப்பு கொடுத்திருக்காங்க. அதுல என் பேரே குற்றவாளிங்க பட்டியல்ல இல்லை பாருங்க. இதுக்கு முன்னால 1996-ல் ஒரு தீர்ப்பு வந்துச்சு. அதுலயும் இப்படித்தான். டிரைவர் தாறுமாறா வண்டியை ஓட்டி பலரைக் கொன்னா அதுக்காக வண்டியோட உரிமையாளரைக் கைது பண்ண முடியுமான்னு லாஜிக்கா ஒரு கேள்வியைக் கேட்டாரு பாருங்க.

அது நியாயமான கேள்விதான..? அதுல உங்களுக்கு எந்த ஃபேவரும் செஞ்சதாத் தெரியலையே..?

என்ன தம்பி... நீங்களும் இப்படிக் கேக்கறீங்களே... பிரேக் இல்லாத வண்டியைக் கொடுத்து ஓட்டச் சொன்னா யார் மேல குத்தம். அதுவும் போக வேகமோ தாறுமாறா போறமாதிரி ஏத்தி வெச்சிருந்தோம். அப்போ, உரிமையாளர் மேலதான குத்தம்.

அது சரிதான்.

தம்பி நீ இன்னும் வளரணும் தம்பி. உங்க அரசாங்கம்தான் அந்தமாதிரி கேள்வியெல்லாம் வராம பார்த்துக்கிட்டது. இதுக்கெல்லாம் நான் எப்படி கைம்மாறு செய்யப் போறேனோ. எனக்கு மறு பிறவியில நம்பிக்கை கிடையாது. இருந்தா அது சம்பந்தமா ஏதாவது சொல்லலாம்.

அத்வானிஜி : இந்த ஜென்மத்துலயே நீங்க எங்களுக்கு எவ்வளவோ செஞ்சிருக்கீங்க. அதுக்கு நாங்கதான் உங்களுக்கு நன்றிகடன்பட்டிருக்கோம்.

ஆண்டர்சன் : நிச்சயமா சொல்றேன். இந்தமாதிரியான விசுவாசம்தான் என்னை எப்பவுமே திகைக்க வைக்குது. போபால் சம்பவம் நடந்ததுமே இன்னொரு முக்கியமான நிகழ்ச்சி நடந்தது. நிறைய பேர் சாக ஆரம்பிச்சிடாங்கன்னதும் மருத்துவர்கள் எங்களுக்கு ஃபோன் போட்டு அந்த பூச்சிக் கொல்லியோட வேதியல் மூலக்கூறுகளைப் பத்திக் கேட்டாங்க.

எதுக்கு..?

அப்பத்தான அது உடம்புல என்ன பாதிப்பை ஏற்படுத்தும் அதை எப்படி தடுக்கறதுன்னு தெரிஞ்சிக்க முடியும். ஆனா நாங்க என்ன பண்ணினோம். அதைச் சொல்ல முடியாது. வர்த்தக ரகசியம் அப்படின்னு சொல்லிட்டோம்.

ஏன் சார்..?

ஆமா. பின்ன அந்த விஷயம் தெரிஞ்சா போட்டி கம்பெனிங்க அதே மாதிரி தயாரிச்சு எங்களை வியாபாரத்துல தோற்கடிச்சிடுவாங்களே... நமக்கு ஒரு நல்லதுன்னா நாலு பேர் சாகறதுல தப்பே கிடையாது இல்லியா..?

சரியாச் சொன்னீங்க. ஒருவேளை அந்த பூச்சிக் கொல்லியோட மூலக்கூறை தெளிவா சொல்லியிருந்தா நிறைய பேரைக் காப்பாத்தியிருக்க முடியும் இல்லையா..?

ஆமா நிச்சயமா… ஆனா, அதை உங்க மருத்துவர்கள் நாங்க சொல்லாமலேயே கண்டுபிடிக்கவும் செஞ்சிட்டாங்க..?

மாற்று மருந்தை கண்டு பிடிச்சிட்டாங்களா..?

ஆமா... செத்தவங்களோட உடம்பை போஸ்ட்மார்டம் பண்ணி, என்ன கொடுத்தா விஷத்தை முறிக்க முடியும்னு அருமையா கண்டுபிடிச்சிட்டாங்க. ஆனா இங்கதான் உங்க அரசாங்கம் எங்களுக்கு ஒரு பெரிய உதவி செஞ்சாங்க. அதை வாழ்நாள்ல ஒருபோதும் மறக்க முடியாது. மருத்துவர்கள் கண்டுபிடிச்ச அந்த தயோசல்பேட்டை பாதிக்கப்பட்டவங்களுக்குக் கொடுக்கக்கூடாதுன்னு ஒரு உத்தரவு போட்டாங்க பாருங்க. அதை இப்ப நினைச்சாலும் புல்லரிக்குது.

விஷ முறிவு மருந்து கொடுத்துக் காப்பாத்தக் கூடாதுன்னு சொன்னாங்களா..? ஏன்..?

ஏனா? எங்களைக் காப்பாத்தறதுக்குத்தான். அந்த மருந்தைக் கொடுத்திருந்தா பூச்சிக் கொல்லி மருந்துல சயனைட் இருந்தது உறுதியாகிடும். நாங்கதான் எங்க பூச்சிக் கொல்லி ரொம்பவும் சாதுவானது. எந்த பெரிய பாதிப்பும் வராதுன்னு சொல்லிட்டிருக்கோமே. அதுல விஷம் இருந்தது உறுதியாயிடிச்சின்னா எங்களுக்கு எக்கச்சக்கம் நஷ்டைஈடு கொடுக்க வேண்டிவந்திருக்குமே. அதனாலதான் அந்த மருந்தைக் கொடுக்கக்கூடாதுன்னு மருத்துவர்களை விட்டே சொல்ல வெச்சாங்க உங்க அரசியல்வாதிங்க.

ரியலி நைஸ். நான் நீங்க ஏதோ பெருந்தன்மையிலதான் இது ஒரு டீம் எஃபர்ட்ன்னு சொல்றீங்கன்னு நினைச்சேன். இப்பத்தான் புரியுது. நீங்க ஒரு எளிய உண்மையைத்தான் சொல்லியிருக்கீங்க.

நிச்சயமா..? அவங்களோட சாதனை உண்மையிலயே மகத்தானதுதான். இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுங்க. விஷ வாயு படலம் நடந்து முடிஞ்சதும் நஷ்ட ஈடு கேட்கும் படலம் ஆரம்பிச்சது. இந்திய அரசு 3.2 பில்லியன் நஷ்ட ஈடு கேட்டுச்சு. ரொம்பவும் நியாயமான ஒண்ணுதான். இப்ப மெக்ஸிகோல எண்ணெய் கசிவு நடந்தபோது நாங்க கேட்டோமோ 20 பில்லியன் அது மாதிரி அன்னிக்கு ரேட்ல அது நியாயமான ஒரு தொகைதான். இன்னும் சொல்லப் போனா அது கொஞ்சம் குறைச்சல்ன்னு கூடச் சொல்லலாம். ஆனா, நாங்க 478 மில்லியன் தர்றேன்னு சொன்னோம். இந்திய அரசியல்வாதிங்க ரொம்ப சந்தோஷம்னு அதை வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டாங்க. ஐ மீன் பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுக்க வாங்கி வெச்சுக்கிட்டாங்க.

3.2 கேட்டதுக்கு 478 கொடுத்தீங்களா... ரொம்பப் பெருந்தன்மையோடதான் நடந்துக்கிட்டிருக்கீங்க.

இல்லை தம்பி. அவங்க கேட்டது பில்லியன். நாங்க கொடுத்தது மில்லியன்.

எனக்கு இந்த மில்லியன் பில்லியன் கணக்கே புரியாது கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.

தாராளமா... இந்திய அரசு 3000 ரூபா கேட்டுச்சு. நாங்க 3 ரூபா கொடுத்து, தோள்ல தட்டிக் கொடுத்து போயிட்டு வாங்கன்னு சொன்னோம். அவங்களும் அதை வாங்கிட்டு ஒரு சலாம் வேற வெச்சிட்டுப் போனாங்க.

பிரமாதம். இப்ப நீங்க சொல்றதையெல்லாம் பார்த்தா இந்திய அரசோட பங்குதான் அதிகமா இருக்கும் போலயிருக்கே.

நிச்சயமா. இப்ப கூட பாருங்க. எல்லா நச்சுக் கழிவை நாங்களே அகற்றிக்கறோம்னு சொல்லிட்டாங்க. நஷ்ட ஈடு இன்னும் அதிகமா தர்றோம்னு சொல்லியிருக்காங்க. மன்மோகன் சிங்ஜி என்ன தன் பாக்கெட்ல இருந்தா கொடுக்கப் போறாரு. காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரையிருக்கும் பாரதத் தாயின் தவப்புதல்வர்கள் அல்லவா போபால் மைந்தர்களுக்குக் கொடுக்கப் போறாங்க.

மன்மோகன் சிங் ஜியைப் பார்த்து : சார் உங்களை என்னமோ நினைச்சேன். பெரிய ஆள் சார் நீங்க. அமைதியா பொம்மை மாதிரி இருந்துட்டு என்னவெல்லாம் அடிச்சு தூள் கிளப்பறீங்க.

என் கைல என்னங்க இருக்கு. மேடம் சொல்றாங்க. நான் பண்ணறேன்.

ஆண் : என்னே ஒரு பணிவு... என்னே ஒருபணிவு... ஓ.கே. ஒரு காலர் லைன்ல இருக்காரு... சொல்லுங்க சார்.

குரல் : நான் நாமக்கல்லுல இருந்து கூமுட்டை பேசறேன்...

ஆண் : என்னது கூமுட்டையா..?

குரல் : ஆமாங்க.

ஆண் : ரொம்ப வித்தியாசமான பேரா இருக்கே..?

குரல் : ரொம்பப் பொருத்தமான பேருன்னும் நிறைய பேரு சொல்லுவாங்க.

ஆண் : அப்படிங்களா... ரொம்ப சந்தோஷம். என்ன கேட்கப் போறீங்க..?

குரல் : எனக்கு கில்லி படத்துல இருந்து இலைய தலபதியோட அப்படிப் போடு... போடு...ங்கற பாட்டு போடுங்களேன்.

ஆண் (லேசாக அதிர்ந்து) : அப்படிப் போடு சாங்கா..? சார்... நீங்க வேற ஷோவுக்கு போட வேண்டிய நம்பரை போட்டுடீங்கன்னு நினைக்கறேன். இது பாட்டுப் போடற ஷோ இல்லை. போபால்ல நடந்த சம்பவம் பற்றியும் அதுல கஷ்டப்பட்டவங்க பத்தியுமான நிகழ்ச்சி.

குரல் : அதனால என்னங்க. சும்மா போட்டு விடுங்க. அங்க கஷ்டப்படறவங்க இலைய தலபதியோட இந்தப் பாட்டைப் பார்த்ததும் உற்சாகமா எந்திரிச்சு ஆட ஆரம்பிச்சிடுவாங்க.

ஆண் : ரொம்ப நல்ல யோசனைதான். நானும் கூட இந்த ஷோவுக்கு நடுவுல ரெண்டு குத்துப் பாட்டைப் போடலாம்னுதான் பார்க்கறேன். விடமாட்டேங்கறாங்க. சரி நாம் இனிமே வாசகர்களோட இந்த கோரிக்கைகளை மனசுல வெச்சு அடுத்து இது மாதிரி நடத்தற ஷோவை கொஞ்சம் அதிரடியா நடத்தறோம். உங்களோட ஆலோசனைக்கு ரொம்ப நன்றி.

அத்வானிஜி : இந்த காலரோட யோசனை நல்லாத்தான் இருக்கு. நீங்க இந்த சிச்சுவேஷனுக்கு பொருத்தமா ஏதாவது பாட்டு போடலாம்.

பின்னணி இசையமைப்பாளர், போனால் போகட்டும் போடா பாடலைப் போடுகிறார்.

கூட்டம் ஸ்தம்பித்துப் போய் கேட்கிறது. ஆண்டர்சனும், அத்வானிஜியும், மன்மோகன் சிங்ஜியும் மெய் மறந்து ரசிக்கிறார்கள்.

போனால் போகட்டும் போடா...

இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா..?

போனால் போகட்டும் போடா...

வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது.

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது..?

வாழ்க்கை என்பது வியாபாரம்

அதில் ஜனனம் என்பது வரவாகும்

மரணம் என்பது செலவாகும்

போனால் போகட்டும் போடா..!

ஆண்டர்சன் உணர்ச்சிவசப்பட்டு இசையமைப்பாளரைக் கட்டிப் பிடித்து முத்த மழை பொழிகிறார்.

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது..? அருமை. கவிதை கவிதை... நீங்களே எழுதினதா..? அதைவிட அந்த ராகம் இருக்கே அப்படியே உயிரை என்னமோ பண்ணுது.

தேங்க்யு சார். கவிரயரசு கண்ணதாசன்னு எங்க ஊர்ல பெரிய கவிஞர் எழுதினது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி சார்தான் இசை.

பின்னிட்டீங்க போங்க. போபால் சம்பவத்தை மனசுல வெச்சு எவ்வளவு பிரமாதமா எழுதியிருக்காரு.

இல்லை சார். இது அதுக்கு முன்னாலயே எழுதினது.

என்னது முன்னாலயே எழுதினதா..? அவர் வெறும் கவிஞர் மட்டும் தான்னு நினைச்சேன். தீர்க்கதரிசியும் கூடவா..? பிரமாதம். இந்தியர்கள்ன்னா இந்தியர்கள்தான்.

பெண் : அடுத்ததா இன்னொரு காலர் லைன்ல இருக்காரு.

குரல் : ஹலோ

பெண் : சொல்லுங்க சார்... எங்க இருந்து பேசறீங்க.

குரல் : போன்ல இருந்துதான்

பெண் : அது தெரியுது. எந்த ஊர்ல இருந்து.

குரல் : சொந்த ஊர்ல இருந்து

பெண் : இது என்னடா வம்பாப் போச்சு. சொந்த ஊர்னா..?

குரல் : எங்க அப்பா அம்மாவும் நானும் பொறந்த ஊருங்க. இதுகூடத் தெரியாதா..?

பெண் : ஆஹா... இப்பவே கண்ணைக் கட்டுதே... அப்படி எந்த ஊர்லதான் பொறந்து வளர்ந்தீங்க.

குரல் : நான் பொறந்துட்டேன் மேடம். ஆனா வளரவே இல்லைங்க.

பெண் : ஏன்...

குரல் : நான் மொத்தமே மூணு அடிதான்.

பெண் : அதெல்லாம் ஒரு பெரிய குறையே இல்லை. அது சரி நீங்க என்ன சொல்லப் போறீங்க.

குரல் : நீங்க கட்டியிருக்கற புடவை ரொம்ப நல்ல இருக்கு மேடம்.

பெண் (பூரித்துப் போய்) : தேங்யூ தேங்யூ...

ஆண் : ஏன் இப்படி எமோஷனலாற. புடவைதான நல்லா இருக்கு சொன்னாரு.

பெண் (லேசாகக் கோபித்தபடியே) : பொடவை நல்லாயிருக்குன்னா பொடவை கட்டின நானும் நல்லாயிருக்கேன். நான் கட்டினதுனால இந்தப் பொடவை நல்ல இருக்கு அப்படின்னெல்லாம்தான் அர்த்தம்.

ஆண் : நீயா ஏன் வீணா கற்பனை பண்ணிக்கற. சரி சார் மேட்டருக்கு வாங்க.

குரல் : சார், போபால் சம்பவத்துக்கு முழு காரணமும் நம்ம ஆளுங்கதான் சார். நம்மளோட பெருமையை இன்னொருத்தரோட பங்கிட்டுக்கறதுல எனக்கு சம்மதமே இல்லை சார்.

ஆண் : சரியாச் சொன்னீங்க.

குரல் : அதாவது சார்... ஒரு கிராமத்துல ஒரு வீட்டுக்குள்ல ஒரு திருடன் புகுந்துடறான். அந்த வீட்டுல இருக்கற பொருட்கள் எல்லாத்தையும் கொள்ளையடிச்சிட்டு அந்த வீட்டுக்குத் தீயும் வெச்சிடறான். ஆனா, அவன் தப்பிக்கறதுக்கு முன்னால ஊர்க்காரங்க அவனைப் பிடிச்சிடறாங்க. உடனே பஞ்சாயத்து கூட்டறாங்க. பஞ்சாயத்து தலைவர் வந்து, பாவம்ப்பா... அவரு திருடன் இல்லை. நம்ம ஊருக்கு வந்த விருந்தாளி. அவரை நாம ஒண்ணும் செய்யப்டாது. அப்பறம் அவங்க ஊர்ல இருந்து இந்தமாதிரி வேற யாரும் வராம போயிடுவாங்க அப்படின்னு சொல்லி வழிச்செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பிடறாரு. வீடு எரிஞ்சு போச்சே அதுக்கு என்ன பதில்ன்னு எல்லாரும் கேட்டதும், எரிஞ்ச வீடு யாரோடது. நம்ம சகோதரனோட வீடு இல்லையா... அதனால ஒரு வீட்டுக்காரங்க செங்கல் கொண்டுவரட்டும். இன்னொரு வீட்டுக்காரங்க சிமெண்ட் கொண்டு வரட்டும். இன்னொருத்தர் மண்ணு கொண்டு வரட்டும். நாம எல்லாருமா சேர்ந்து நம்ம கைக்காசைப் போட்டு வீடுகட்டிக் கொடுத்துடுவோம் அப்படின்னு சொல்றாரு... இந்த தீர்ப்பை என்னன்னு சொல்லுவீங்க. இதுவல்லவோ நீதி... இவரல்லவோ தர்மப் பிரபுன்னு சொல்லுவோம் இல்லையா..? அப்படிப் பார்க்கும்போது இந்தியாதானங்க இந்த விஷயத்துல முதல் இடத்துல இருக்காங்க. இந்த பிரச்னைக்கான முழு பெருமையும் நம்ம ஆளுங்களுக்குத் தான கொடுக்கணும். அதை விட்டுட்டு எல்லா பெருமையையும் அமெரிக்காக்காரனுக்கே கொடுத்தா அதுல என்னங்க நியாயம் இருக்கு..?

சார் உங்களோட உணர்வைப் புரிஞ்சிக்கறேன். ஆனா நீங்க சொல்றதை முழுசா ஏத்துக்க முடியலையே.

ஆண்டர்சன் (குறுக்கிட்டு) . அதாவது போபால் சம்பவம் ஒரு அழகான பூத்தையல் கோலம் மாதிரிங்க. அந்த கோலத்துக்கு எது காரணம்? ஊசியா..? நூலா..? அந்தத் துணியான்னு கேட்டா என்ன பதில் சொல்ல முடியும். ஊசி தனியா இருந்தா கோலம் வந்திருக்குமா..? நூல் தனியா இருந்தான் கோலம் வந்திருக்குமா..? ஊசியும் நூலும் சேர்ந்திருந்து துணி இல்லாம இருந்தா மட்டும் கோலம் வந்திருக்குமா..? மூணுமேதான் காரணம் இல்லையா..? அதுமாதிரிதான். இதுவும்.

ஆண் : அழகா சொல்லிட்டீங்க சார். இப்ப உங்க சந்தேகம் தீர்ந்திருக்கும் அப்படின்னு நினைக்கறேன். ஓ.கே. நாம அடுத்த கண்டெஸ்டண்டைக் கூப்பிடுவோம். அதுக்கு முன்னால சின்ன கமர்ஷியல் பிரேக். நாங்களே சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு. நீங்க சொல்லுங்க சார்...

ஆண்டர்சன் : பாருங்க

சிங்ஜி : பாருங்க...

அத்வானிஜி : பார்த்துக்கிட்டே இருங்க.

(தொடரும்)

No comments:

Post a Comment