இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Saturday, October 16, 2010

எந்திரனும் சுஜாதாவின் ஆவியும்..!

(இந்த கட்டுரையை அக்டோபர் இரண்டாம் தேதியே எழுதிவிட்டேன். இதை பிளாகில் போட்டால், தலைவரின் தளபதிகள் க்ளைமேக்ஸை மாற்றச் சொல்லி படையெடுத்துவிடுவார்கள். தயாரிப்பாளருக்கு க்ளைமேக்ஸை மாற்ற இன்னும் 100 கோடி செலவாகும். டைரக்டருக்கும் கஷ்டம். தலைவருக்கும் கஷ்டம். குறிப்பாக, இன்றைய தலைவிக்கும் ரொம்பக் கஷ்டம் என்பதால் உடனேயே வலையேற்றவில்லை. சரி அப்படியே விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், என்ன செய்ய... உண்மையை உணர்ந்தவருக்கு அதை ஊருக்கு உரைக்க முடியாமல் இருப்பது சாத்தியமா என்ன..? எனவே, இதோ... லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா ஒரு விமர்சனம்.)

அப்படியாக, நானும் எந்திரன் படத்தை முதல் நாள் இரவிலேயே பார்த்தேவிட்டேன். இன்னுமா பார்க்கவில்லை என்று கேட்பார்களே அதை எப்படித் தாங்கிக் கொள்வது என்ற பதற்றத்தில்தான் முதல் நாளே பார்த்தேன். அதற்குள்ளாகவும் பலர் கேட்டுவிட்டனர் என்பது வேறு விஷயம். பொதுவாக, இப்படியாக ஹைப் உருவாக்கப்படும் படங்கள் பெரிதாக ஊற்றிக் கொள்ளும் என்பதுதான் வழக்கம் என்பதால் மிகவும் பயந்தபடியேதான் இருந்தேன் (உதா : பாபா). அதோடு பாபாவில் ரஜினியும் கருணாஸும் இருந்தார்கள். இதிலும் அந்த காம்பினேஷன் இருப்பதால் படம் அவ்வளவுதான் என்று ரொம்பவே பயந்தேன். ஆனால், பாடல்களைக் கேட்டபோது கொஞ்சம் தைரியம் வந்தது. டிரெய்லர் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. டி-டேயில் நான்கு மணிக்கே பார்த்துவிட்டு வந்தவர்கள் படம் தப்பிச்சிக்கிச்சு என்று சொன்னதைக் கேட்டதும் பெரும் ஆசுவாசம் ஏற்பட்டது.

இரவு மிகுந்த உற்சாகத்தோடு புறப்பட்டுப் போனேன். இடைவேளை வரை படம் ரொம்பவே பிடித்திருந்தது. அதற்குப் பிறகுதான் வில்லன் ரஜினி அதகளம் பண்ணியிருக்கிறார் என்று ஏற்கெனவே சொல்லியிருந்ததால் என் எதிர்பார்ப்பு மேலும் ஏறியது. அவர்கள் சொன்னதுபோலவே வில்லன் ரஜினி வந்த சீன்கள் அருமையாகவே இருந்தன. ஆனால், கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி, மலை உச்சிக்குக் கொண்டு போய் அப்படியே அதல பாதாளத்தில் தள்ளிவிட்டதுபோல் விழவைத்துவிட்டது. ஒரு படத்தின் கதாநாயகன் எப்போது தன் உச்சத்தை எட்ட வேண்டுமோ அப்போது பேட்டரி தீர்ந்த ரோபோ போல் பொத்தென்று விழுந்ததுபோல் ஆகிவிட்டது.

ஒரு அருமையான படத்தை ஷங்கர் ஏன் இப்படி வீணடித்துவிட்டார் என்று மனம் கதறியது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்பது படத்தில் அதிகம் இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். அது அருமையாகவும் இருந்தது. இடைவேளைக்கு முன்பாக வந்த ரயில் சண்டை, தீ விபத்துக் காட்சிகள், பிரசவம் பார்த்தல் என எல்லாமே கதையோடு அருமையாகப் பொருந்தி வந்திருந்தன. அதிலும் அருவாள், கத்தி, சைக்கிள் செயின் என இரும்பு ஆயுதங்கள் எல்லாம் ரஜினியைச் சுற்றி அணிவகுக்கும் காட்சியைப் பார்த்து உண்மையிலேயே பிரமித்துத்தான் போனேன். ஆனால், க்ளைமாக்ஸ் சண்டையில் நூற்றுக்கணக்கான ரஜினிகள் பந்துபோல், பாம்பு போல், பிரமாண்ட எந்திர மனிதன் போல் ஆனதையெல்லாம் பார்க்கச் சகிக்கவே இல்லை. அந்த கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ்கள் எடுபடாமல் போனதற்குக் காரணம் அதில் ரஜினி இல்லை. அதாவது படத்தின் கதாநாயகன் இல்லை. இடைவேளைக்கு முந்தைய க்ராபிக்ஸ் காட்சிகளில் கதாநாயகனும் இருந்தார். கிராபிக்ஸ் காட்சிகளும் இருந்தன. ஆனால், க்ளைமேக்ஸ் காட்சிகளில் வெறும் கிராபிக்ஸ் மட்டுமே இருந்தன. கதாநாயகன் இல்லை.

இது, ஒரு படத்தின் அடிப்படையான உணர்வுக்கு முற்றிலும் முரணானது. ஒரு திரைப்படம் தரும் அனுபவத்தை முற்றிலும் பாழாக்கும் செயல் இது. ஷங்கர் ஏன் இப்படிச் செய்தார்? கேனான் டாயல் சிண்ட்ரோம் காரணமா? ஒரு இயக்குநர், தான் படைத்த கதாபாத்திரம் தன்னைவிடப் பெருமையைத் தட்டிக் கொண்டு போய்விடக்கூடாது என்று நினைக்கலாமா? இயக்குநரின் குழந்தை அல்லவா கதாநாயகன். குழந்தையின் வெற்றி மீது அப்பாவுக்கு பொறாமை வரலாமா? இந்தப் படத்தின் வர்த்தக வெற்றியைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஒரு அபார அனுபவமாக ஆகியிருக்க வேண்டிய ஒன்று புஸ் என்று போய்விட்டது.

பரபரப்பான இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சில் கடைசி பந்தில் ஆறு ரன்கள் எடுக்க வேண்டுமென்று ஒரு நிலை ஏற்பட்டால், தோனிதான் அதை அடித்து எடுக்க வேண்டும். அம்பயர் ஆறு நோபால்கள் கொடுத்தால் அது பார்க்கச் சகிக்குமா? அல்லது கோச் நாலைந்து ஹெலிகாப்டர்களை எடுத்துக் கொண்டு போய் சில்வர் அயோடைடை மேகத்தில் தெளித்து மழைய வரவைத்து, டக்வொர்த் லூயிஸ் கணக்கின்படி நாம் ஜெயித்தால் அதுவா நன்றாக இருக்கும். தோனி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால்தானே அது நினைவில் நிற்கும் வெற்றியாக இருக்கும். ரஜினி சாதித்திருக்க வேண்டிய இடத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸைப் பயன்படுத்தியது எவ்வளவு பெரிய பிழை.

படம் இப்படி ஆகிவிட்டதே என்று மிகுந்த மன வருத்தத்துடன் பாருக்குப் போனேன். பல ரவுண்ட்கள் உள்ளே போனது. மனது பொருமிக் கொண்டே இருந்தது. படம் இடைவேளைவரை சுஜாதா எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டின் படி எடுக்கப்பட்டதுவரை அருமையாக இருந்தது. அதன் பிறகுதான் சொதப்பிவிட்டது என்று புலம்பித் தள்ளினேன். சுஜாதாவின் ஆத்மா இதை ஒருபோதும் மன்னிக்காது என்று சொன்னேன். சக குடிமகன் நான் சொன்னதை மறுத்தார். க்ளைமேக்ஸில் இடம்பெற்ற கிராபிக்ஸ் கிம்மிக்ஸ் சகிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், சுஜாதா இதைவிட பெரிதாக ஒன்றும் ஜல்லியடித்திருக்க மாட்டார் என்று சொன்னான். வாக்குவாதம் முற்றியது. சுஜாதாவிடமே கேட்பது என்று முடிவு செய்தோம். அவர் செல்லுக்குப் போன் போட்டோம். நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார் என்று பதில் வந்தது. லேன்ட் லைனுக்குப் போன் போட்டோம். அவர் இறந்துவிட்டாரே என்று சொன்னார்கள். எங்ககிட்ட சொல்லவேயில்லையே என்று சொல்லிவிட்டு அடுத்து என்ன செய்ய என்று யோசித்தோம். எப்படியும் சுஜாதாவிடம் கேட்டாக வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். ஆவி அமுதா மூலம் சுஜாதாவிடம் பேசுவது என்று புறப்பட்டோம்.

சுஜாதா விஞ்ஞான ஆவி ஆயிற்றே. ஊடகம் வழியாகப் பேசுவாரா என்று சந்தேகமாக இருந்தது. எனினும், அவர் ஆத்மா கோட்பாடில் நம்பிக்கை கொண்ட வைஷ்ணவரும் கூட என்பதால் பேசும் வாய்ப்பு அதிகம் என்று நினைத்தோம். ஆவி அமுதாவைப் பார்க்க முடியவில்லை. வேறு ஒருவர் சிக்கினார். அவர் வீட்டில் சுஜாதாவுடன் பேசினோம். பொதுவாக ஆவிகள் நம் கைகளை நகர்த்தி எழுதித்தான் காட்டும். ஆனால், சுஜாதா மேலுலகத்துக்குப் போன பிறகு கம்யூனிக்கேஷனை கொஞ்சம் அப்கிரேடு செய்துவிட்டிருக்கிறார். அருள்வாக்கு சொல்வதுபோல் ஊடகத்தின் மீது இறங்கி நேரடியாகவே பேச ஆரம்பித்துவிட்டார். என்னப்பா... எப்படி இருக்க? என்று கேட்டதும் உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. நல்லா இருக்கேன்... என்று சொல்லிவிட்டு எந்திரன் பார்த்துட்டீங்களா என்று கேட்டேன். ஏன்டா பார்த்தோம்னு ஆயிடிச்சு என்று வருந்தினார்.

உண்மையில் எந்திரன் கதைக்கு அவர் எழுதிய க்ளைமேக்ஸ் வேறாம். அதைச் சொன்னார். அப்படியே ஸ்தம்பித்துவிட்டோம். ஷங்கர் ஏன் இப்படிப் பண்ணினார் என்ற வேதனை இப்போது கோபமாகவே மாறிவிட்டது. சுஜாதா சொன்ன க்ளைமேக்ஸ் இதுதான் :

வில்லன் ரோபோ உருவான விதமாக சுஜாதா எழுதியிருந்ததே வேறு. உண்மையில் சிட்டியைக் குப்பை மேட்டில் இருந்து எடுத்து வந்ததும் அது தனக்கு உயிர் கொடுக்கும்படி மனித வில்லனிடம் கெஞ்சுகிறது. அவரும் நியூரல் ஸ்கீமைச் சொன்னால்தான் உதவுவேன் என்கிறார். சிட்டியும் அதை காப்பி செய்து தந்துவிடுகிறது. உடனே மனித வில்லன் டபுள் கேம் ஆடுகிறார். தான் ஏற்கெனவே உருவாக்கிய ரோபோவுக்கு உயிர் கொடுத்து அதை வில்லனாக ஆக்குகிறார். அதுவும் ரஜினிதான். ஆனால், சிட்டியின் மூளையில் ரெட் சிப்பை பொருத்தி வில்லனாக ஆக்கவில்லை. சிட்டியிடம் இருந்து நியூரல் ஸ்கீம் கிடைத்ததும் அதை மறுபடியும் செயல் இழக்க வைத்துவிடுகிறார். அதன் பிறகு வில்லன் ரஜினியின் ஆட்டம் ஆரம்பிக்கிறது.

அவர் ஐஸ்வர்யாவைத் தேடிப் போகிறார். கல்யாண மண்டப காட்சிகள் சுஜாதா சொன்ன படியேதான் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால், அதன் பிறகுதான் சுஜாதாவின் மேதமை வெளிப்படுகிறது. வசீகரன் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆண் வர்க்கமே சனாவை அடைய விடாமல் தடுக்க வாய்ப்பு இருப்பதால் வில்லன் ரஜினி, ஆண்கள் அனைவரையும் கொன்று தீர்க்கும்படி தான் உருவாக்கிய க்ளோன் ரோபோக்களிடம் சொல்கிறார். ஒரு நாள் இரவில் படுத்து மறு நாள் காலையில் எழுந்திருப்பவர்கள் படு கோரமான முறையில் ஆண்கள் ஆங்காங்கே கண்டந்துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்கிறார்கள். ஊரே குலை நடுங்குகிறது.

வில்லன் ரோபோ இருக்கும் இடத்தை அழிக்க ராணுவத்தினர் ஹெலிகாப்டரில் குண்டுகளுடன் வருகிறார்கள். ஆனால், வில்லன் ரஜினியோ ஏராளமான குழந்தைகளைக் கடத்தி வந்து கேடயமாகப் பயன்படுத்தி தப்பித்துவிடுகிறார். மின்சாரத்தை நிறுத்துகிறார்கள். கார் பேட்டரியில் இருந்து சார்ஜ் செய்ய முடியும் என்பதால் ஆயிரக்கணக்கான கார்களைக் கடத்திக் கொண்டுவந்துவிடுகின்றன ரோபோக்கள். அதிலும் கார் பேட்டரியில் இருந்து கரெண்ட் எடுப்பதை வில்லன் ரஜினி தெரிந்து கொள்ளும் காட்சி இருக்கிறதே சுஜாதாவின் வார்த்தைகளில் கேட்கவேண்டும் அதை. உலகமே இருண்டு கிடக்கிறது. எல்லா ரோபோக்களும் செயல் இழக்க ஆரம்பித்துவிட்டன. அப்போது வில்லன் ரஜினி மின்சாரத்தைத் தேடி தெருவில் இறங்கி ஓடுகிறார். எங்கோ தூரத்தில் சிறிதாக வெளிச்சம் தெரிகிறது. நடு வழியில் டயர் பங்சரான ஒரு கார் நிற்கிறது. இரண்டு பேர், கார் பேட்டரியில் இருந்து 40 வாட்ஸ் பல்பை எரிய வைத்து டயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இருண்ட பின்னணியில் இருந்து வில்லன் ரஜினியின் ஆச்சரியத்தால் மலர்ந்த விகாரமான முகம் மட்டும் வெளிச்சத்துக்குள் எட்டிப் பார்க்கும் காட்சி அப்படியே முதுகுத் தண்டைச் சில்லிடவைத்தது. அடுத்ததாக, கார் பேட்டரிகளும் சீக்கிரமே காலியாகிவிடுகின்றன. வில்லன் உடனே பல விஞ்ஞானிகளைக் கடத்தி வந்து சோலார் பேனல்களை உருவாகச் சொல்லிவிடுகிறார். அப்படியாக மின்சாரம் தடைபடாமல் கிடைக்கிறது.

இதனிடையில் வசீகரன், ரோபோபோல் வேடம் போட்டுக் கொண்டு வில்லனின் கோட்டைக்குள் நுழைந்துவிடுகிறார். அங்கு சிட்டி இருப்பது அவருக்குத் தெரிய வருகிறது. ரகசியமாக அந்த இடத்துக்குப் போய் அதை உயிர்ப்பித்துவிடுகிறார். அதன் பிறகு கதை சிட்டிக்கும் வில்லன் ரோபோவுக்குமான சண்டையாக மாறுகிறது. சுஜாதா இதில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். உண்மையில் ஷங்கரின் எந்திரனில் வில்லன் ரஜினி வந்ததும் சிட்டி காணாமல் போய்விடுகிறது! அது கதையின் பலவீன பகுதி. சிட்டிதான் கதாநாயகன். கடைசி வரை அந்தக் கதாபாத்திரம் படத்தில் இருந்திருக்க வேண்டும். மனிதர்களுக்கும் எந்திரங்களுக்கும் இடையிலான சண்டை என்பதும் இந்தப் படத்தில் வலுவாக வரவில்லை. அதுவும்போக சனா மீதான காதல் என்பது இன்றைய எந்திரன் படத்தில் மிகவும் பலவீனமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிஅது. அதுதான் பிரதான ட்விஸ்டே. நல்ல மனிதன் உருவாக்கிய நல்ல எந்திரத்துக்கும் கெட்ட மனிதன் உருவக்கிய கெட்ட எந்திரத்துக்கும் இடையிலான சண்டை என்பதுதான் சுஜாதாவின் திரைக்கதை. அங்குதான் அவர் தர்க்கபூர்வமாகவும் வெற்றிபெறுகிறார். ஷங்கர் தோற்கும் இடமும் அதுதான்.

கதை மேலும் வேகம் பிடிக்கிறது. வசீகரனும் சிட்டியும் சேர்ந்து பல திட்டங்கள் தீட்டுகிறார்கள். அதற்கு முன்பாகக் கதையில் முக்கியமான ஒரு காட்சி வருகிறது. சிட்டிக்கு மறுபடியும் உயிர் கொடுத்ததும் அது ஒரு நிபந்தனை விதிக்கிறது. வில்லன் ரஜினியையும் அவர் உருவாக்கிய க்ளோன் படையையும் காலி செய்ய வேண்டுமானால், தனக்கு சனாவைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறது. முதலில் மறுக்கும் வசீகரன் பிறகு சம்மதிக்கிறார். சனா தனக்கு சத்தியம் செய்து தரவேண்டும் என்று சிட்டி கேட்கிறது. அதன்படியே சனாவும் சத்தியம் செய்து தருகிறார்.

சிட்டி வில்லனை வீழ்த்தத் திட்டம் போடுகிறது. முதல் கட்டமாக பல சனாக்களை உருவாக்கி வில்லனைக் குழப்புகிறது. க்ளோன் சனாக்களில் உண்மையான சனாவைக் கண்டுபிடிக்க வில்லன் ஒரு யோசனை செய்கிறார். சனா ஆசையாக வளர்த்த பொமனேரியன் நாய்க்குட்டியைக் கொண்டுவந்து மோப்பம் பிடிக்க விடுகிறார். ஆனால், ஏற்கெனவே சிட்டி இப்படி ஏதாவது நடக்கும் என்று நினைத்து உண்மையான சனாவுக்கும் மெட்டல் கவசம் அணிவித்திருப்பார். எனவே, நாய்க்குட்டியால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். கோபப்படும் வில்லன் நாய்க்குட்டியைக் கொல்ல முயற்சி செய்வார். கழுத்தைப் பிடித்து நெரிப்பார். நாய்க்குட்டி கதறித் துடிக்கும். அதன் கண்கள் மெள்ள சிவப்பாகி வெளியே பிதுங்க ஆரம்பிக்கும். நாய்குட்டி படும் வேதனையைப் பார்க்கப் பொறுக்காமல் க்ளோன் கூட்டத்தில் இருந்து சனா பதறி ஓடிவந்துவிடுவார். அப்படியாக சனாவை வில்லன் கண்டுபிடித்துவிடுவார்.

அடுத்ததாக சிட்டி தான் உருவாக்கிய சனா போன்ற ரோபோவில் ஒன்றின் கழுத்துக்குள் ரத்தம் நிரம்பிய பிளாஸ்டிக் பையைப் பொதிந்து வைத்து இன்னொரு திட்டம் தீட்டும். அந்த சனாவை கழுத்தில் கத்தியை வைத்துக் காட்டி கொன்றுவிடப் போவதாக வில்லனிடம் மிரட்டும். வில்லன் அதுவும் ஒரு ரோபாவாகத்தான் இருக்கும் என்று அலட்சியமாக இருக்கவே கத்தியை அழுத்தி பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தத்தை சிட்டி வெளியே வரவைக்கும். இதைக் கண்டு வில்லன் ரோபோ அதிர்ச்சி அடைந்து சனாவைக் காப்பாற்ற வருவதற்குள் அந்த ரோபோவை மாடியில் இருந்து சிட்டி தள்ளிக் கொன்றுவிடும். சனா இறந்துவிட்டதாக மனமுடைந்து போகும் வில்லன் ரோபோ ஹேங்க் ஆகிக் கீழே விழுந்துவிடும். இறந்து கிடக்கும் வில்லனை ஒரேயடியாகச் செயல் இழக்க வைக்க சிட்டி வேகமாக ஓடிப் போய் சனாவையும் வசீகரனையும் அழைத்துக் கொண்டு வரும். வந்து பார்த்தால் அந்த இடத்தில் விழுந்துகிடந்த வில்லன் ரோபோ மாயமாக மறைந்திருக்கும். மூவரும் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வார்கள். ஆனால், இவர்கள் போகும் இடங்களில் எல்லாம் வில்லன் ரோபோவின் வெடிச் சிரிப்பு கேட்டுக் கொண்டே இருக்கும். உண்மையில் மயங்கியதுபோல் நடித்த வில்லன் ரோபோ, வசீகரனையும் சிட்டியையும் ஒரு சிறையில் போட்டுப் பூட்டி வைக்கும். மனித நடமாட்டமே இல்லாத இடத்துக்கு சனாவைக் கொண்டு செல்ல முடிவெடுக்கும். அவருடைய மெமரியில் அப்படியான இடமாகச் சொல்லப்படும் இடம்தான் மச்சு பிச்சு மலை. சுஜாதாவின் கதையில் மிகவும் இயல்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த இடத்தை ஷங்கர் வெறும் பாட்டுக்கான லொக்கேஷன் என்று கேவலப்படுத்தியிருப்பார். அது மட்டுமில்லாமல் இதை ஒரு பெருமையாகவும் பலர் சொல்கிறார்கள். யாருமே போகாத இடத்துக்குப் போவது என்றால் டிராவல் ஏஜென்ஸிக்குத்தானே அந்தப் பெருமை போக வேண்டும். அதை எப்படி டைரக்டரின் பெருமையாகச் சொல்கிறார்கள் என்றே புரியவில்லை.

மச்சு பிச்சு மலைக்குப் புறப்படுவதற்கு முன்பாக வில்லன் ரோபோ தனக்குத் துணையாக இரண்டு ரோபோக்களை மட்டும் அழைத்துக் கொண்டுசெல்கிறார். அந்த இரண்டு ரோபோக்களை வீழ்த்திவிட்டு வசீகரனும், சிட்டியும் வில்லனுடன் அவருக்குத் தெரியாமல் புறப்பட்டுவிடுகிறார்கள். அப்படியாக மச்சு பிச்சு மலையில் நான்கே பேர் மட்டும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஆரம்பிக்கிறது க்ளைமேக்ஸ் சண்டை. மேட்ரிக்ஸ் படத்தில் நடந்த இறுதி சண்டைக் காட்சி போல் சிட்டிக்கும் வில்லன் ரஜினிக்கும் இடையில் அனல் பறக்கும் சண்டை நடக்கிறது. வில்லன் ரஜினி, சிட்டியை மூளைச் சலவை செய்யப் பார்க்கிறது. நாமெல்லாம் எந்திரங்கள் மனிதர்களை நம்பாதே. அவர்கள் உனை ஏமாற்றிவிடுவார்கள் என்று சொல்லிப் பார்க்கிறது. ஆனால், முடியாது நான் சனாவைக் காதலிக்கிறேன். அவளுக்காக எதையும் செய்வேன் என்றூ சிட்டி அப்பாவியாகச் சொல்கிறது. நீ சனாவைக் காதலிப்பது நிஜம்தான். ஆனால், சனா உன்னைக் காதலிக்கவில்லை. அவள் உன்னை ஏமாற்றிவிடுவாள் என்றூ வில்லன் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறது. ஆனல், சிட்டி அதை நம்பாமல் வில்லனை அழிப்பதில் குறியாக இருக்கிறது. ஆனால், வில்லன் ரோபோவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சிட்டி திணறுகிறது. ஒரு கட்டத்தில் முழு வலிமையையும் இழந்து கிடக்கும் சிட்டிக்கு சனா ஆறுதல் சொல்லி தைரியம் ஊட்டுக்கிறாள். சனா தந்த உற்சாகத்தால் வீறு கொண்டு எழும் சிட்டி, அந்த அதகளச் சண்டையில் கடைசியில் வில்லன் ரஜினியைக் கொன்றுவிடுகிறது. வசீகரனையின் சனாவையும் சிட்டி பாதுகாப்பாக சென்னைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது.

அதன் பிறகுதான் எமோஷனல் க்ளைமேக்ஸ் வருகிறது. சனாவுக்கு சிட்டியுடன் திருமணம் நிச்சயமாகிறது. சிட்டிக்கு நம்மை வைத்து காமெடி கீமெடி செய்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது. பார்க்கும் ஒவ்வொருவரையும் கேட்கிறது. அனைவரும் சிட்டிதான் மாப்பிள்ளை என்று சொல்கிறார்கள். தாலி கட்டுவதற்கு முன்பாக, சனா தனக்கு காஷ்மீர் ரோஜா வேண்டும் என்று சிட்டியிடம் கெஞ்சிக் கேட்கிறாள் (படத்தின் ஆரம்பகட்ட விளம்பரத்தில் எந்திரன் ரஜினி ஒரு ரோஜாவை முகருவது போன்ற காட்சி இடம்பெற்றது நினைவிருக்கிறதா) . இதோ ஒரு மணி நேரத்தில் கொண்டுவந்துவிடுகிறேன் என்று சிட்டி பறக்கிறது. காஷ்மீரில் அது பனிக் காலம். ரோஜா எங்குமே தென்படவில்லை. சிட்டி, பனி மலையில் ஒற்றை ரோஜாவைத் தேடி அலைகிறது. கடைசியாக பனி மூடிய ஒரு தோட்டத்தில் ரோஜாக்கள் ஏராளம் உறைந்து இருப்பது தெரிகிறது. அனுமார் சஞ்சீவி மலையைப் பெயர்த்ததுபோல் சிட்டி அந்த தோட்டத்தையே பெயர்த்து ஹெலிகாப்டரில் வைத்துக் கொண்டுவருகிறது. ஆனால், அது வந்து சேர்வதற்குள் வசீகரனுக்கும் சனாவுக்கும் திருமணம் முடிந்துவிடுகிறது. சிட்டி அதிர்ச்சியில் உறைந்துபோகிறது. ஒவ்வொருவரையும் பார்த்து சோகமாக வசனம் பேசிவிட்டு கடைசியில் சனாவிடம் வருகிறது. சனா ஏதோ சொல்ல வாயெக்கிறார். யூ டூ சனா... என்று கேட்கிறது. முதலும் கடைசியுமாக சிட்டியின் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வழிகிறது. அதன் பிறகு சிட்டி வேகமாக கண்ணாடி லேபுக்குள் போய் கதவை பூட்டிக் கொள்கிறது. சனாவின் நினைவுகள் ஒவ்வொன்றாக மனதில் அலைமோத வேதனை தாங்காமல் சிட்டி தன்னைத்தானே டிஸ்மேண்டில் செய்து தற்கொலை செய்து கொள்கிறது. இதுதான் சுஜாதா எழுதிய திரைக்கதை.

இது எமோஷனலாகவும் இருக்கிறது. தர்க்கபூர்வமாகவும் இருக்கிறது. சுவாரசியமாகவும் இருக்கிறது. இதிலும் கிராபிக்ஸுக்கான சகல வாய்ப்புகளும் இருக்கின்றன. ராணுவம் ஹெலிகாப்டரில் குண்டுகள் வீச வரும்போது இரும்புச் சங்கிலியை வீசி வானில் மிதக்கும் இரண்டு ஹெலிகாப்டர்களை ஒன்றுடன் ஒன்று மோதி வெடிக்கச் செய்யும் காட்சி மிகவும் சவாலான ஒன்று. அதோடு, மச்சுபிச்சு மலைக்கு நான்குபேரும் புறப்பட்டுப் போகும் காட்சியில் ஒரு ஹெலிகாப்டர் சேஸும் சுஜாதா எழுதியிருந்தார். சிவாஜி படத்தில் சுமோ காருக்குள் இருந்தபடியே நடக்கும் சண்டை போல் இதில் ஹெலிகாப்டர் சேஸ்! வில்லன் ரஜினியின் ஹெலிகாப்டரை பத்து ராணுவ ஹெலிகாப்டர்கள் துரத்துகின்றன. வானில் நடக்கும் அந்த சேஸ், கிராபிக்ஸ் டீமுக்கான சரியான சவால். கடைசியாக மச்சு பிச்சு மலையில் சிட்டிக்கும் வில்லன் ரஜினிக்கும் இடையில் நடக்கும் ஒன் டு ஒன் சண்டையை எப்படியெல்லாமோ பிரமாதமாக எடுக்கலாம். இந்த காட்சிகளில் என்ன கிராபிக்ஸ் பயன்படுத்தினாலும் அதில் கதாநாயகனும் இருப்பார் என்பதால் அது தந்திருக்கும் அனுபவம் அதி அற்புதமாக இருந்திருக்கும். ஷங்கர் கோட்டைவிட்டுவிட்டார். உண்மையில் சுஜாதா எழுதிய க்ளைமேக்ஸ் ஷங்கருக்குக் கிடைக்கவில்லையா? அல்லது அவர் உண்மையிலேயே தனக்கு முக்கியத்துவம் வரவேண்டும் என்று நினைத்து இப்படிச் செய்துவிட்டாரா? எது எப்படியானாலும் நாட்டாமை க்ளைமேக்ஸை மாத்து என்று கலாநிதி மாறன் வீட்டு வாசலிலும் ஷங்கர் வீட்டு வாசலிலும் நின்று கொண்டு சுஜாதாவின் ஆத்மா கதறிக் கொண்டிருப்பது மட்டும் நிச்சயம்.

புத்தம் சரணம் கச்சாமி - 22

யாரைக் குற்றஞ்சாட்டுகிறீர்கள்…
படைத்த கடவுளையா..?

நல்ல வேடிக்கை…

ஊர் கூடி உதிரத் தேரை இழுப்பது நீங்கள்
பழி படைத்தவனின் மீதா..?

வன்முறையின் சாத்தானை பீடத்தில் ஏற்றினீர்கள்
பிரிவினையின் பதாகையை உச்சியில் கட்டிவிட்டீர்கள்
வெறுப்பின் பரிவட்டத்தை தலையில் கட்டிக் கொண்டு ஒருவர் கையசைக்க
ஊர் கூடி இழுத்தீர்கள் உதிரத் தேரை
ஒற்றைச் சார்பு சரித்திரங்களை சக்கரங்களாக்கி
எதிர் தரப்புப் பிழைகளைச் சாட்டையாக்கி
வேற்றுமையின் விரிசல்களை வடங்களாக்கி
உருண்டோடச் செய்கிறீர்கள் உங்கள் தேரை

கடவுளோ
அன்பின் விக்கிரகங்களை உங்களிடம் ஒப்படைத்திருந்தார்
பரஸ்பர நட்பின் கற்பூர ஒளியில் நீங்கள் தொழுதிருக்க வேண்டிய தெய்வம் அது.
அஹிம்சையின் முரசுகள் அதிர
கருணையின் வீதிகளில் ஓடியிருக்க வேண்டிய தேர்
வேறொன்று மனிதர்களே…
அவர் சமாதானத்தின் வெண் குதிரைகளை அனுப்பியிருந்தார்
அதை நீங்கள் வெறும் பொம்மையாக்கிவிட்டீர்கள்.
பன்முகத்தன்மையின் வண்ணமய ஆலவட்டங்களைப் பரிசளித்திருந்தார்
நீங்கள் வேதனையின் கறும் பூதகணங்களைச் செதுக்கிக் கொண்டீர்கள்

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்ன
இயேசுவை அனுப்பினார்
இன்ன செய்தாரை ஒறுக்க அவர் நாண நன்னயம் பாராட்டச் சொன்ன
வள்ளுவரை அனுப்பினார்
போரே கூடாதென்று போதித்த
புத்தனை அனுப்பினார்.

நீங்களோ அவர்களைப் புறந்தள்ளினீர்கள்.

ஆயுதத்தை கையில் ஏந்தும் தமிழன்
வள்ளுவரையன்றோ கொல்கிறான்
வன்முறைப் பாதையில் போகும் பவுத்தன்
புத்தரையன்றோ மிதித்துச் செல்கிறான்
தந்திரங்களில் ஈடுபடும் கிறிஸ்தவன்
ஏசுவையன்றோ ஏமாற்றுகிறான்.
கடவுள்
குளிர் காய தீயைக் கொடுத்தார்
நீங்கள் உங்கள் குடில்களைக் கொளுத்திக் கொண்டீர்கள்
வழுக்கல் நிலத்தில் ஊன்றிக் கொள்ள கைத்தடிகளைக் கொடுத்தார்
நீங்கள் அதைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டீர்கள்.

பூமியை மட்டும் தான் படைத்தார்.
எல்லையில் முள் வேலி பதித்து
தேசங்களை உருவாக்கிக் கொண்டது நீங்கள்தான்.

மனிதர்களை மட்டும் தான் படைத்தார்
அகதிகளை நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள்

ஆணையும் பெண்ணையும் மட்டும் தான் படைத்தார்
சிங்களராகவும் தமிழராகவும்
இந்துவாகவும் இஸ்லாமியராகவும்
யூதராகவும் கிறிஸ்தவராகவும் பிரித்துக் கொள்(ல்)வது நீங்கள்தான்

பறத்தலை பறவைக்கு மட்டுமே விதித்திருந்தார்
கொத்து குண்டுகளை வீசும் விமானங்களை நீங்கள்தான் கண்டுபிடித்தீர்கள்

மரப்பொந்துகளையும் குழிகளையும் ஊர்வனவற்றுக்கே ஒதுக்கியிருந்தார்
பதுங்குகுழிகளை நீங்களே படைத்துக் கொண்டீர்கள்.

ஒலியை மட்டுமே உங்களுக்குக் கொடுத்தார்
வெறுப்பின் விஷம் தோய்ந்த வார்த்தைகளை உமிழ்வது நீங்கள்தான்.

கைகளை மட்டுமே கொடுத்திருந்தார்
அவை ஏந்திய துவக்குகள் அவர் கொடுத்தவை அல்ல.

நகங்களையும் பற்களையும் மட்டுமே கொடுத்திருந்தார்
ரத்தக்கறைகள் அவருடையவை அல்ல.

வெற்றுக் கழுத்தையும் விரிந்த இடையையும்தான் தந்திருந்தார்.
சயனைடும், பெல்ட் வெடிகுண்டும் அவர் தந்தவை அல்ல.

மழையைக்கூட ஒற்றைத் துளிகளாகத்தான் அனுப்புகிறார்
அணைகளைக் கட்டி வெள்ளத்தை வருவித்துக் கொள்வது நீங்கள்தான்.

ஒற்றைக் கூரையின் கீழ் உங்களைப் படைத்தார்
நீங்கள் தனித் தனி வீடுகளைக் கட்டிக் கொண்டீர்கள்.

அணையா இரு விளக்குகளை எரியவிட்டார்
நீங்கள் அதன் ஒளியில் இருந்து உங்களை மூடிக் கொண்டீர்கள்.

உங்களை வாழ அனுப்பினார்
நீங்கள் செத்து மடிகிறீர்கள்

எரிமலைகளை உலகின் ஓரங்களில்தான் உறைய வைத்தார்
கண்ணிவெடிகளையும் வெடிகுண்டுகளையும்
காலடியில் பதித்துக் கொண்டது நீங்கள்தான்

நீங்கள் முறையிட வேண்டிய நீதிமன்றம் இது அல்ல…
குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர் அவரல்ல

நேற்று ஹிட்லரை அனுப்பியதற்கு பதில் கேட்டீர்கள்
இன்று பிரபாகரனையும் ராஜபக்சேவையும் அனுப்பியதற்கு பதில் கேட்கிறீர்கள்
அற்ப மானிடர்களே…
ஹிட்லரையும்
பிரபாகரனையும்
ராஜபக்சேவையும் அனுப்பிய அதே கடவுள்தான்
காந்தியையும் அனுப்பினார்.

காந்தி…
நீங்கள் தொழ மறந்த தெய்வம்
பின்பற்றத் தவறிய வழிகாட்டி
அவர்
அடக்குமுறையின் தீயை அஹிம்சையின் நீரால் அணைக்கச் சொன்னார்.
அதிகாரத்தின் அந்தகாரத்தை அன்பின் சிறு அகல் விளக்கால் விரட்டச் சொன்னார்.
வெறும் வார்த்தையாக மட்டுமா சொன்னார்
வாழ்ந்தும் காட்டினாரே
அவரும் ஒரு போரைத்தான் முன்னெடுத்தார்
கத்தியின்றி…
ரத்தமின்றி…
அவரும் ஒரு போரைத்தான் முன்னெடுத்தார்.

ஆணவத்தின் சாம்ராஜ்ஜியங்களை
அன்பின் சாமான்யர்களைக் கொண்டு வெல்லும் ஒரு போரை அவர் முன்னெடுத்தார்
அவர் பிறந்த தேசத்தைவிட
அவர் விட்டுச் சென்ற தேசம் சிறப்பாக அன்றோ இருந்தது

அவரும் ஒரு மன்னன்தான்
அகம்பாவத்தின் கிரீடம் தரிக்காத தலையை உடையவர்
ஆணவத்தின் கவசங்கள் மூடாத மார்பை உடையவர்
தியாகத்தின் உடைவாளை இடையில் தரித்திருந்தார்
சமரசத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்
சத்தியத்தின் கைத்தடியை ஊன்றி நடந்தார்
அவர் அமர்ந்த நாற்காலி சிம்மாசனமானது.
அவர் நடந்த பாதை ராஜ பாட்டையானது.

இந்தியாவும் உலகுக்கு ஒரு பாடத்தைக் கற்பித்திருக்கிறது.
இலங்கையும் ஒரு பாடத்தைக் கற்பித்திருக்கிறது.

காந்தி எப்படிப் போரிட வேண்டும் என்று காட்டினார்.
பிரபாகரனுன் ராஜபக்சேயும் எப்படிப் போரிடக்கூடாது என்று காட்டியிருக்கிறார்கள்.

கோயிலைவிட
கோயிலுக்கான பாதை பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்றார் காந்தி
நீங்கள் அவரைப் புறக்கணித்தீர்கள்.
குப்பை மேடுகளையும் சாக்கடைகளையும் கடந்து
தேவாலயத்தை அடையமுடியாது என்றார் அவர்
நீங்கள் அவரை மறுதலித்தீர்கள்.
மூன்று முறை அல்ல…
முன்னூறு முறைகள்…
மூவாயிரம் முறைகள்…
அவரை மறுதலித்ததன் மூலம் நீங்கள் கடவுளை மறுதலித்தீர்கள்
கடவுளை மறுதலித்ததன் மூலம் நீங்கள் உங்களையே மறுதலித்துக் கொண்டீர்கள்.

கடவுள் நல்லதொரு வீணையை மட்டுமே கொடுத்தார்
நலங்கெடப் புழுதியில் எறிந்தது நீங்கள்… நீங்கள் மட்டுமே…

மேடை அவருடையதுதான்
நாடகமோ உங்களுடையது…
திரைக்கதை
வசனம்
நடிப்பு எல்லாம் உங்களுடையது.
அவரோ பார்வையாளன்.
திரைச்சீலை விழும் நேரம் வரை
பிரமாண்ட அரங்கில்
தன்னந் தனியனாக அமர்ந்து பார்க்க நிர்பந்திக்கப்பட்ட
வெறும் பார்வையாளன்

(இறுதி பாகம் / முழு வடிவம் : விரைவில் புத்தக வடிவில்)

Wednesday, October 13, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 21

முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்வார்களே. அதுபோல்தான் ஆகிவிட்டது. போரை ஆரம்பிப்பதற்கு முன்னால் அவர்கள் தமது பலம் என்ன..? எதிரியின் பலம் என்ன என்பதை யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். நம்மால் வெல்ல முடியுமா..? எவற்றையெல்லாம் இழக்க நேரிடும் என்பதைக் குறித்தெல்லாம் யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யவில்லை. அதுகூடப் பரவாயில்லை... நாம் ஆரம்பித்திருக்கும் போர் நியாயமானதுதானா..? என்று ஒரு நொடியாவது யோசித்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். வெல்ல முடியாத எதிரியாக இருந்தாலும் வெல்லப்பட வேண்டியவன் என்றால் ஒரு கை பார்த்துவிடலாம் என்று இறங்கிவிடலாம். நம் பக்கம் இருக்கும் தார்மிக பலம் நாம் தோல்வியுற்றாலும் வெற்றியடைந்ததாகவே பெருமிதப்பட வைக்கும். ஆனால், ஈழத் தமிழர்கள் ஆரம்பித்தது வெல்ல முடியாத போர் மட்டுமல்ல... வெல்லக்கூடாத பேரும் கூட.

ஷெல் தாக்கி இறந்த பச்சிளம் குழந்தைகளையும் கை கால் இழந்த முதியவர்க¬ளையும் பெண்களையும் பார்க்கும்போது எங்களுக்கு வேதனையாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய...

களையெடுக்கும்போது சில நெற்கதிர்களும் பிடுங்கப்பட்டுவிடுவதை யார்தான் தடுக்க முடியும்? இன்னொரு வகையில் பார்த்தால் இந்த மக்கள் ஒன்றும் அவ்வளவு அப்பாவிகள் அல்ல... இவர்கள் கையில் தனி நாடு கேட்டு இடைவிடாது முழங்கும் ஏ.கே. 47கள் இல்லையே தவிர மனதின் மணல் படுகைகளில் இலங்கை தேசத்தின் மீதான வெறுப்புக் கண்ணிவெடிகள் ஏராளம் புதைந்தே கிடக்கின்றன. ஒவ்வொரு தேர்தல்களிலும் தங்கள் ரகசிய ஆசைகளைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியே வந்திருக்கிறார்கள். அப்படி வாக்களிக்கும்படி வற்புறுத்தபட்டிருந்தார்கள் என்று சொல்வதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்றாலும் இவர்கள் தங்களுக்காகத் தவறாகக் குரல் கொடுப்பவர்களை உள்ளூர விரும்பவே செய்திருக்கிறார்கள். தங்கள் தலைவர் என்று நம்பியவர் மீது முழு நம்பிக்கையை வைத்திருந்திருக்கிறார்கள். ‘பிரபாகரன் ஒருவருக்காக ஒட்டு மொத்த ஈழத் தமிழனமும் இறக்கத் தயாராக இருப்பதாக’ பிடிபட்ட ஒரு எளிய சாதாரண மனிதர் சிறையில் இருந்தபோது ஒரு நாள் முழங்கினார். ‘நாங்கள் பிரபாகரனை மட்டும்தான் பிடிக்க விரும்புகிறோம். அதற்கு அதுதான் வழி என்றால் அதையே செய்கிறோம்’ என்று சொன்னேன். வேறென்ன சொல்ல.

ஒவ்வொரு முறை குண்டு வீசுவதற்கு முன்னாலும் அறிவிப்பு செய்யத்தன் செய்கிறோம். அப்பாவி மக்களே பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என்று. கடைசி கட்ட போரின் போது கூட 48 மணி நேர அவகாசம் கொடுத்தோம். புலிகளிடமிருந்து தப்பித்து வந்துவிடுங்கள் என்று. என்ன செய்ய 3 லட்சம் பேரில் 300 பேர் கூட வரவில்லை.

ஆயுதம் தரித்தவனைக் கொல். அப்பாவியை விட்டுவிடு என்று எல்லாரும் வாய் கிழியக் கத்துவதைப் பார்க்க முடிகிறது. யார் இங்கே அப்பாவி..? மறைந்து கிடக்கும் வேரன்றோ மரத்தைத் தாங்குகிறது. ஆயுதம் ஏந்தினால்தான் போராளியா..? ஆயுதம் ஏந்துபவனைப் பாதுகாப்பவனும் போராளிதானே. நீங்கள் உண்மையிலேயே அப்பாவியாக இருந்திருந்தால் புலிகள் நடத்தும் போர் எங்களுக்கானது அல்ல. நாங்கள் அவர்களுடைய வன்முறை நடவடிக்கைகளைக் கண்டிக்கிறோம் என்று வெளிப்படையாகப் பேசியிருக்க வேண்டும். அதைச் செய்தார்களா… கொலைகாரக் கூட்டம் கொள்ளையடித்து வருவதை நாசூக்காகப் பகிர்ந்து கொள்ள நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்துக் கிடந்தார்கள். என்ன செய்வது கொள்ளையடிப்பவனை நோக்கி எய்யும் அம்பு குறுக்கே வந்து நிற்பவரையும் குத்திக் கிழிக்கத்தானே செய்யும். பசுத் தோலைப் போர்த்தி அலைந்த புலிகளை உண்மையான பசுக்கள் அல்லவா விரட்டி அடித்திருக்க வேண்டும். பதுங்க இடம்கொடுத்து பாதுகாத்தன. பாவம் புலி வேட்டையில் பசுக்களும் இறந்தன.

பெண்களை நாலு பேர் பார்க்க உடம்பெல்லாம் தடவி சோதனை போட்டோமாம். அமைதிப் பூங்காவாக இருக்கும் நாடுகளில் கூட விமான நிலையங்கள், ரயிவே நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் எத்தனையோ சோதனைகள் போடத்தான்படுகின்றன. கையில் சந்தனமாலையையும் முகத்தில் புன்னகையையும் சுமந்து வரும் பேதைகளைப் பற்றி இந்தியாவுக்குத் தெரியாதா என்ன..? ஒரு டிசம்பர் ஆறுக்காக வருடா வருடம் அந்த சோதனைகள் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. போர் நடக்கும் பூமியில் அது நடந்தால் குற்றமா..? எமது தேச காலண்டரில் எல்லா நாட்களுமே டிசம்பர்-6தானே.

இந்த அப்பாவிகளைப் பற்றிய அக்கறை உண்மையில் தீவிரவாதிகளுக்கு அல்லவா இருந்திருக்க வேண்டும். நான் என் தேசத்துக்காக என் இலட்சியத்துக்காகப் போராடுகிறேன். போர்க்களத்துக்குச் செல்லும்போதெல்லாம் சீருடையை ஒரு வீரன் போல் அணிந்து கொள்வேன். எனது கால் படும் இடமெல்லாமே போர்க்களமாகிவிடும் என்பதால் அதை எந்த நேரமும் நான் அணிந்தே இருப்பேன். இது என் வீரத்தைக் காட்ட மட்டுமல்ல. நான் அப்பாவிபோல் உடை அணிந்தால் நாளை உண்மையான அப்பாவிகள் எல்லாருமே போராளியாக எண்ணப்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது. எனவே, நான் அந்தத் தவறைச் செய்ய மாட்டேன் என்று வீரத்தோடு விவேகமாக அல்லவா சிந்தித்திருக்க வேண்டும். ஆனால், நீ அப்பாவிபோல் உடை அணிந்துகொண்டு அராஜகச் செயல்கள் செய்து வந்தாய். பின்விளைவுகளை நீ யோசிக்கவில்லை. நீ யாருக்காகப் போராடுவதாகச் சொல்கிறாயோ அவர்கள் மேல் உனக்கே அக்கறை இல்லையென்றால் மற்றவர்களுக்கு எப்படி வரும். அதுமட்டுமல்லாமல் அந்த அப்பாவிகளையே பகடைக் காய்களாகவும் அவர்கள் பயன்படுத்தினார்கள். மருத்துவமனையில் இருந்து கொண்டு தாக்குதல் நடத்துவது, சட்டென்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடிவிடுவது… இப்படிச் செய்தால் என்ன ஆகும். வானில் இருந்து தாக்கும் விமானத்துக்கு எந்த திசையில் இருந்து குண்டு வீசப்பட்டது என்பது மட்டுமே தெரியும். அதை நோக்கி ஏவுகணையைச் செலுத்தும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மீது ஏவிகணைகள் ஏவிக் கொன்றூவிட்டார்கள் என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை. செஞ்சிலுவை சங்கத்தினர் எத்தனை தற்காலிக முகாம்களை புலிகளின் இந்த அராஜக நடவடிக்கையால் காலி செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள் தெரியுமா..?

புலிகளின் கோரிக்கையில் இருந்த அநியாயத்தையும் அவர்களுடைய தவறான நடவடிக்கைகளையும் பார்த்த எத்தனையோ ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் அழகாக நாடுவிட்டு நாடு பறந்துவிட்டார்கள். ஆஸ்திரேலியாவுக்கோ, ஐரோப்பாவுக்கோ, கனடாவுக்கோ படித்து திறமையை வளர்த்துக் கொண்டு போவதென்றால் ஈழத் தமிழர்களில் இத்தனை பேருக்கு அயல்நாட்டு வாசம் கிடைத்திருக்குமா என்ன..? துர் நாற்றம் மிகுந்த ஈழத்தின் ஜன்னல்களைச் சாத்திக் கொண்டார்கள். போர் அவர்களுக்கு ஒரு சொர்க்கத்தின் வாசலைத் திறந்தது. தமிழ் தேசம் என்ற பொய்யான கற்பிதத்தை மட்டும் விட்டுவிட முடிந்தவர்களுக்கு அது ஒரு பொன்னான வாய்ப்பு. பலர் அதை அழகாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், புலம் பெயர்ந்தவர்கள் என்ற போர்வையில் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத செல்வச் செழிப்பு மிகுந்த நாடுகளுக்கு எளிதில் போய் ராஜ வாழ்க்கை வாழும் வாய்ப்புகள் இருந்த போதிலும் சிலர் அதைச் செய்யவில்லை. தமிழீழக் கனவை, அது கனவு மட்டுமல்ல கற்பனை என்று தெரிந்த பிறகும் கைவிடவில்லை. இலவம் பஞ்சு காயாகும் என்று காத்திருந்த முட்டாள் கிளியைப் போல் களமாடும் தலைவன் வென்று தருவான் அந்தக் கனவை என்று கண்களைத் திறக்கவே இல்லை. அவர்கள் நிரந்தரமாகத் தூங்க வேண்டிவந்துவிட்டது.

என்ன செய்ய…தவறான இடத்தில் அல்லவா நம்பிக்கையை வைத்துவிட்டார்கள். தெய்வத்துக்கு பதிலாக சாத்தானை அல்லவா தொழுதுவிட்டார்கள். சாத்தான் தன்னால் என்ன முடியுமோ அதைப் பரிசளித்தது. தலை தாழ்த்தி வணங்கியவர்களின் தலையை வாங்கியது. கூட இருந்தவர்களைக் குழியில் தள்ளியது. நம்பிப் பின் தொடர்ந்த ஆட்டு மந்தையை விஷப் புல்வெளி நோக்கி ஓட்டியது. மரணத்தின் சதுரங்கக் கட்டங்களில் தன்னை நம்பிய மக்களைப் பகடைக் காய்களாக உருட்டி விளையாடியது. மல்லிகை முற்றங்களில் குருதியைப் பெருகச் செய்தது. கொக்கு பூத்த வயல்வெளியை சாம்பல் காடாக்கியது. பாவம்… ஈழ வசந்தம் வரும் என்ற நம்பிக்கையில் இருந்த இலைகளையெல்லாம் உதிர்த்தன தமிழ் மரங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பட்டுப் போய் நிற்கும் இன்றைய மரங்களைப் பார்க்கையில் எங்கள் மனம் ‘ஐய்யகோ…’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே உச்சரிக்கிறது.

அதிலும் போரின் உச்சகட்டத்தில் நடந்த கொடூரங்களை நினைத்துப் பார்க்கும்போது புத்தனை வணங்கும் என் புத்தி பேதலித்தே போய்விடுகிறது. கழுத்தை நெரிக்கத் தொடங்கிய சிங்கள ராணுவத்தை தடுத்து நிறுத்த பொய்யான செய்திகளை இணைய நதிகளில் பெருக்கெடுக்கச் செய்தனர். அதைப் பார்க்கும் சர்வதேச சமூகம் எப்படியும் போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்துவிடும் என்று தப்புக் கணக்குப் போட்டனர். ஆனால், சாத்தான் ஓதிய இந்த வேதம் சர்வதேச சமூகத்தின் செவிகளில் எட்டவில்லை. சரியாகச் சொல்வதானால், வேதம் ஓதுவது சாத்தான் தான் என்பது நன்கு தெரிந்துவிட்டதால் அது மவுனம் காத்தது. சிங்கள ராணுவத்தின் டாங்கிகள் தார்ச்சாலையில் தன் இரும்பு நகங்களைப் பதித்தபடி முன்னேறத் தொடங்கியது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கதிரவன் வருகையில் இருள் அரக்கன் ஓடி ஒளிவதுபோல் புலிகள் ஒடுங்கினர். ஆனால், கதிரவனின் முன் காரிருள் தப்ப முடியுமா..? உண்மையில் நெருங்கி வந்த அந்த வெளிச்சத்தில்தான் மக்களுக்கு தாங்கள் இதுவரை தொழுதது தெய்வத்தை அல்ல என்பது தெரிய வந்தது. ஆனால், என்ன செய்ய… அதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது. சாத்தான் தன் கடைசி ஆயுதமாக தன்னை நம்பியிருந்தவர்களையே கவசமாகப் பிடித்துக் கொள்ள ஆரம்பித்தது. தப்பி ஓட முயன்றவர்களை கொடூரமாக கொன்று குவித்தது. அப்படிக் கொலை செய்யப்பட்டவர்களை சிங்கள அரசு கொன்றதாக பொய்யுரையைப் பரப்பியது. கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் கூட வரமாட்டேன் என்று சொல்லி பதுங்குகுழிக்குள் பதுங்கினார்கள் சிலர். அந்த பதுங்கு குழியைச் சுற்றி கண்ணிவெடியைப் பதித்து வைத்தார்கள் புலிகள். நான் நினைக்கிறேன், தனி ஒருவனுக்காக ஒரு இனமே அழிய வேண்டுமா என்று கோபப்பட்ட ஒரு சொரணையுள்ள தமிழனுடைய துப்பாக்கி குண்டுதான் அநாதைப் பிணமாக ஆற்றோரம் அவனைக் கிடக்க வைத்திருக்கும்.

சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டிருந்தால் தெரிந்திருக்கும் கதை. ஒவ்வொரு தவறுக்கும் குறைந்த பட்ச தண்டனையாக மரண தண்டனை கொடுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அவருடைய இனத்தில் இருந்து ஒவ்வொருவரையாக தூக்கிலிடுவதாக இருந்தால் ஒட்டு மொத்த தமிழினத்தைத் தூக்கிலிட்டாலும் தண்டனையின் பட்டியல் முடிவுக்கு வந்திருக்காது. இலங்கைப் பிரச்னையில் கொல்லப்பட்ட அனைவரையும் உயிர்த்தெழ வைத்து ஒற்றை நபரைக் காரணம் காட்டும்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டால் அனைத்துச் சுட்டு விரல்களும் வல்வெட்டித்துறையை நோக்கியே நீண்டிருக்கும். உயிர்த்தெழுபவர்கள் உண்மையே பேசுவார்கள் என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறேன்.

(தொடரும்)

Monday, October 4, 2010

புத்தம் சரணம் கச்சாமி -20

என் பெயர் சமரவீரா... ராணுவ வீரன்.

சொந்த இனம் வந்த இனத்தால் வஞ்சிக்கப்பட்டதைப் பார்த்துக் கொண்டு நின்றவன். எம் முன்னோர்களை அடக்கி ஆண்டவன், எமது வீட்டில் கூலி வேலை செய்ய வந்தவன் வீட்டுக்கு வாரிசு என்று சொல்லிக்கொண்டு வருவதைப் பார்த்துக்கொண்டு நின்றவன். தேசிய கீதம் இரண்டு மொழிகளில் பாடப்படுவதைக் கேட்டு வளர நேர்ந்தவன். எனது தலைவர்களும், அமைச்சர்களும், பிரதம மந்திரிகளும், சகோதர சகோதரிகளும் கண் முன்னே கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு இருக்க நேர்ந்தவன். அதனால், இனி பொறுப்பதற்கில்லை என்று பொங்கி எழுந்தவன்.

இந்தப் பிரச்னைக்கு யார் காரணம் என்ற கேள்வியே அபத்தமானது. சிங்களர்களின் சொந்த நாடான இலங்கையில் இரண்டுவிதமான தமிழர்கள்தான் இருக்கிறார்கள். ஒன்று பிரிட்டிஷார் காலத்தில், இலங்கைக்கு தேயிலைத் தோட்ட கூலி வேலைக்காக வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டவர்கள். இன்னொரு பிரிவினர் தென்னிந்தியாவிலிருந்து வந்து எம் மக்களை அடித்துக் கொன்று வலுக்கட்டயமாக எங்களுடைய பகுதியை ஆக்ரமித்துக் கொண்டவர்கள். இரண்டு தரப்பினருக்கும் எமது பூமியில் இருக்கவே அதிகாரம் கிடையாது. இந்தநிலையில் தனி நாடு வேண்டுமென்று கேட்டால்..?

இன்னும் விரிவாகச் சொல்வதானால்... இந்த இரண்டு தரப்பினரையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு வாழப் பழகித்தான் இருந்தோம். ஏனென்றால், நாங்கள் பவுத்தத்தைப் பின்பற்றுபவர்கள். உலகுக்கே அஹிம்சையை போதித்தவரின் வழி வந்தவர்கள். உலகுக்கே அஹிம்சையை போதித்த புத்த பெருமானின் கைகளில் ஆயுதத்தைத் திணித்தது யார்..? இதற்கான விடை கிடைக்க வேண்டுமானால் நீங்கள் இலங்கை பற்றி ஓரளவுக்காவது தெரிந்துகொள்ள வேண்டும்.

1981-ல் கடைசியாக இலங்கையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஒரு நியாயமற்ற போரை புலிகள் ஆரம்பித்துவிட்டதால் அதற்குப் பிறகு கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆனால், போரை ஆரம்பித்தபோது புலிகள் சில காரணங்களைச் சொன்னார்கள். தமிழர்களுக்கு கல்வியில் உரிமை மறுக்கப்படுகிறது. மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை விஷயங்கள் கிடைக்கவில்லை. உயர்மட்ட வேலைகள் தமிழர்களுக்கு மறுக்கப்படுகின்றன. தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமகனாக நடத்தப்படுகிறார்கள்... அதனால் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க நாங்கள் போரை ஆரம்பித்திருக்கிறோம்...

இந்த வாதத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். நாங்கள் அடக்கி ஒடுக்கியதால் நீங்கள் ஆயுதங்களை எடுத்தீர்களா..? அல்லது நீங்கள் ஆயுதத்தை எடுத்ததால் நாங்கள் அடக்கி ஒடுக்க வேண்டி வந்ததா..? என்பது மிக முக்கியமான கேள்வி. இதற்கு விடை தெரியவேண்டுமானால் 1981 கணக்கெடுப்பை ஒருவர் நன்கு படிக்கவேண்டும்.

அப்போது இலங்கையில் பவுத்தர்கள் 70 சதவிகிதம் இருந்தார்கள். இனரீதியாகச் சொல்வதானால் அவர்கள் சிங்களர்கள். இந்துக்கள் அதாவது தமிழர்கள் 15 சதவிகிதம் இருந்தார்கள். எஞ்சிய 15 சதவிகிதத்தினரில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இருந்தனர். தமிழர்களில் 66 சதவிகிதத்தினர் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் இருந்தனர். எஞ்சிய 33 சதவிகித தமிழர்கள் அமைதியாக, அன்பாக இலங்கையின் எஞ்சிய பகுதியில் அதாவது சிங்களர்கள் அதிகமாக இருந்த பகுதிகளில் வசித்தனர். தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த வடக்கு, கிழக்கு பகுதியில் 3% சிங்களர்கள் மட்டுமே வசித்தனர். அவர்களும் காலப்போக்கில் இடம்பெயர்ந்துவிட்டனர். அல்லது பெயர்க்கப்பட்டுவிட்டனர்.

கல்வி மறுக்கப்பட்டது என்றொரு கதை சொல்கிறார்களே அதற்கு வருகிறேன். சுமார் பதினைந்து சதவிகிதம் மட்டுமே இருந்த தமிழர்கள் மருத்துவம் (42%), கால்நடை மருத்துவம் (50%), பொறியியல் (35%), விவசாயம் (30), கட்டுமானப் பொறியியல் (37%), பல் மருத்துவம் (62), பயோ சயின்ஸ் (33%) என பல்கலைகழகத்தில் இடம் பெற்றிருந்தனர். இதையா சிங்கள ஒடுக்குதல் என்கிறீர்கள்..?

பொதுப்பணித்துறையில் அவர்களுடைய பங்கு என்னவாக இருந்தது தெரியுமா..? பொறியாளர்கள் (44%), சர்வேயர்கள் (30%), மருத்துவர்கள் (35%), பல் மருத்துவர்கள் (25%), விஞ்ஞானிகள் (42%), பல்கலைக்கழக ஆசிரியர்கள் (25%), நீதித்துறைப் பணியாளர்கள் (17%), அக்கவுன்டன்ட்கள் (33%) என சமூகத்தின் அனைத்து உயர் மட்டப் பணிகளிலும் அவர்களுடைய பங்கு அவர்களுடைய மக்கள் தொகை சதவிகிதத்தைவிட பல மடங்கு அதிகமாகவே இருந்தன. ஒரு சிறுபான்மை இனம் அதிகப்படியான பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருப்பதா அடக்குமுறை..?

1983-ல் 15 கேபினட் அமைச்சர்களில் 3 பேர் தமிழர்களாக இருந்தனர். சீனா, ஃபிரான்ஸ், பிரிட்டன், மேற்கு ஜெர்மனி மற்றும் பல நாடுகளின் இலங்கை அரசின் சார்பிலான வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். சிங்களர்கள் தமிழர்களை நம்பினார்கள்... தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். அதைத்தான் அடக்குமுறை, ஒடுக்குமுறை என்று சொல்லி விடுதலைப் புலிகள் போர் பிரகடனம் செய்தார்கள். ஒரு பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்திடம் இதைவிட தன்மையாக நடந்துகொள்ளமுடியுமா..? பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்தாலும் அது கொத்தத்தான் செய்யும்... அப்படி அது செய்யும்போது அதுவரை பால் ஊற்றி வந்தவர்களே அதை அடித்தும் கொல்வார்கள். தவறு யார் மீது..?

பொதுவாக உலகில் நீதி, நியாயம் குறித்து ஒரே கோணத்தில் பார்க்கப்படுகிறது. எளியவன், எண்ணிக்கையில் குறைவாக இருப்பவன் ஏதாவது தவறு செய்தால் அதை நாம் குற்றம் என்று சொல்வது கிடையாது. வலியவன், எண்ணிக்கையில் அதிகமானவன் நல்லது செய்தால் அதையும் நாம் பாராட்டுவது கிடையாது. சரியோ தவறோ எளியவனைத் தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடு... அதுதான் முற்போக்கு... நற்போக்கு... இந்த அணுகுமுறை சரியே கிடையாது. பெரும்பான்மைக்கு சேவகம் செய்யச் சொல்லவில்லை. பெரும்பான்மைக்கும் சம வாய்ப்பு கொடு என்றுதானே நாங்கள் கேட்டோம்.

இன்று உலகமெங்கும் சிங்கள பேரினவாத அரசு குறித்து திட்டமிட்டு பொய்யுரைகள் பரப்படுகின்றன. சிறுபான்மையினத்தை நாங்கள் அடக்கி ஒடுக்குகிறோமாம். பாம்பு எண்ணிக்கையில் மிகவும் சொற்பமானவை. ஆனால், அதை மடியில் போட்டுக் கொஞ்ச முடியாது. ஏனென்றால், பாம்பு தன் உமிழ் நீரை மற்றவர்களின் உயிரைப் போக்கும் விஷமாக மாற்றி வைத்திருக்கிறது. அடித்துக் கொல்லப்படுவதில் இருந்து அது தப்பிக்க முடியாது. அதனுடன் சுமுகமான உறவு ஒருபோதும் சாத்தியமில்லை. ஏதோ நாம் பாட்டுக்கு வாழ்ந்துவிட்டுப் போவோம். அது பாட்டுக்கு வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று நாம் ஒருபோதும் நினைக்க முடியாது. நாம் கொல்லாவிட்டால் கொல்லப்பட்டுவிடுவோம். பாம்பைக் கொல்லும்போது அதை மறைத்துவைத்துப் பாதுகாக்கும் புதருக்கும் தீ வைத்தாக வேண்டியிருக்கிறது. தீப்பந்தத்துடன் வரும்போது பூவும் பிஞ்சுமாக, இளந்தளிர்களைக் காற்றில் அசைத்தபடி இருக்கும் புதர் செடிகளைப் பார்க்கும்போது, இந்தத் தளிர்களையா நாம் எரியூட்டப் போகிறோம் என்று எமக்கும் வலிக்கத்தான் செய்கிறது. ஆனால், என்ன செய்ய பாம்புகள் பதுங்கியிருக்கும் புதர்கள் அல்லவா அது.

எமது முன்னோர்கள் சிந்திய ரத்தத்துக்கு இன்று நாங்கள் பதிலடி கொடுக்கிறோம். இது ஒரு கவித்துவமான நீதி... தினையை விதைத்தவன் தினையை அறுப்பான். வினையை விதைத்தவன் வினையை..! ஒரு பிரபாகரனுக்காக ஒட்டு மொத்த விடுதலைப் புலிகளும் தங்களை அழித்துக் கொள்ளத் தயார் என்று சொன்னார்கள். நாங்கள் என்ன செய்ய..? உண்மையில் நாங்கள் தமிழர்களுக்கு எதிரிகள் அல்ல. ஈழப் பகுதியை மட்டுமல்ல ஈழத்தில் விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களையும் காப்பாற்றத்தான் நாங்கள் போராடினோம். தனி நாடு கேட்காத தமிழர்களை நாங்கள் ஒன்றும் செய்தது கிடையாது. இன்றும் கூட சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் கொழும்புவில் இருக்கும் தமிழர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் தமிழர்களுக்குப் புரியும்வகையில் சொல்வதானால், உங்களுடைய தமிழகத்தை தெலுங்கர்கள் ஆட்சி செய்தனர். இன்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் அவர்கள் வசிக்கின்றனர். அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் எல்லாம் சேர்ந்து தனி நாடு கொடு என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்..? ஆங்கிலேயர்கள் உங்களை ஆட்சி புரிந்தனர். இந்தியாவில் தங்கிவிட்ட ஆங்கிலோ இந்தியர்கள் வதவதவெனப் பெருகி நாட்டின் ஒரு பகுதியை அடைத்தபடி வளர்ந்துவிட்டு எமக்கு தனி நாடு கொடு என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்..? அதைத்தான் நாங்கள் செய்தோம்.

ஒரு நாடு உனக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டுமானால், உன் பரம்பரையின் ஆதி மனிதர் அந்த இடத்தில் பிறந்திருக்க வேண்டும். ஐநூறு வருடம் இருந்துவருகிறோம். அறுநூறு வருடம் இருந்து வருகிறோம் என்ற சரித்திரப் புரட்டுகள் போதாது.

இரண்டாம் தரக் குடிமகனாக நடத்தினார்கள்... அதனால்தான் தனி நாடு கேட்கிறோம் என்று ஒரு காரணம் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் தமிழர்கள் எங்கள் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தனர். அரசு வேலைகளில், சொத்துக்கள் வைத்திருப்பதில், சமூக படிநிலைகளில் சொந்த இனத்தினரான சிங்களர்களைவிட பல மடங்கு உயரத்திலிருந்தனர்.

உலகில் எந்த ஒரு இடத்தையும் எடுத்துப் பாருங்கள். பெரும்பான்மை எப்போதுமே பந்தயத்தில் பின் தங்கி இருந்ததாக சரித்திரமே கிடையாது. நாங்கள் தோற்கப்பட்டிருந்தோம். வெற்றி பெற விரும்பினோம். எங்களுடைய நாட்டில் எங்களுக்கான உரிமையை நாங்கள் போராடிப் பெற வேண்டி இருந்தது. இதைவிடக் கேவலம் வேறெதுவுமே இருக்க முடியாது.

சிங்களர்கள் அதிகமாக இருந்த பகுதிகளில் இருந்த கல்வி நிலையங்களில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் படிக்கும் வசதி இருந்தது. ஆனால் தமிழர்கள் அதிகமாக இருந்த பகுதியில் இந்தக் கல்வி நிலையங்களில் தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருந்தது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா... தாயகப் பகுதியான தமிழகத்தில் கூட தாய்மொழிக் கல்வி என்பது முழுவீச்சில் இருந்தது கிடையாது. சேயகமான ஈழத்தில் அது உச்சத்தில் இருந்தது. ஈழத்தில் பொறியியல், மருத்துவப் படிப்பை ஒரு தமிழர் தன் தாய் மொழியிலேயே படிக்க முடியும். அந்த அளவுக்கு அவர்களுக்கு உரிமையும், வளமும் வசதியும் இருக்கத்தான் செய்தது. ஆனால், சிங்களன் அப்போது தன் அடிப்படைக் கல்விகூடப் பெறமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அப்படியான ஒரு நிலையில் சிங்கள தேசத்தில் சிங்களத்தை ஆட்சி மொழியாக அறிவித்தது தவறா..? சிங்கள பூமியில் சிங்களர்களுக்கு முன்னுரிமை என்று சொன்னது தவறா..?

ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஆட்சி காலத்தில் தங்களுடைய பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில் தமிழர்கள் பகுதிகளில் ஏராளமான ஆங்கிலப் பள்ளிகளை ஆரம்பித்தார்கள். தமிழர்களுக்கு ஆங்கிலக் கல்வி எளிதில் கிடைத்தது. ஆங்கிலேய அரசாங்கத்தில் பதவியும் கிடைத்தது. மருத்துவம், பொறியியல், நீதித்துறை என சமூகத்தின் உயர்மட்ட பிரிவுகள் அனைத்திலும் தமிழர்களே ஆதிக்கம் செலுத்திவந்தனர். சிங்களர்கள் அடிமட்டப் பணிகளில் மட்டுமே நிறைந்திருந்தனர். 1981 கணக்கெடுப்பு வரையிலும் இதுதான் நிலமை.

தமிழர்களிடையே வேலையில்லா திண்டாட்டம் நிலவியது அதனால்தான் ஆயுதத்தை ஏந்தவேண்டி வந்தது என்றொரு புரட்டும் சொல்லப்படுவதுண்டு. உண்மையில் தமிழர்களில் வேலையில்லாமல் இருந்தவர்களின் எண்ணிக்கையைவிட சிங்களர்களில் வேலை இல்லாமல் இருந்தவர்களின் எண்ணிகைதான் அதிகம்.

அதுமட்டுமல்ல... தமிழர்கள் அதிகமாக இருந்த பகுதியில் இருந்த சிங்களர்களின் எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்துவந்தது. ஆனால், சிங்களர்கள் அதிகமாக இருந்த பகுதிகளில் இருந்த தமிழர்களின் எண்ணிகையோ அதிகரித்து வந்துள்ளது. யார் அழித்தொழிப்பு, இனச் சுத்திகரிப்பில் ஈடுபட ஆரம்பித்தனர்..? சிங்களர்களா..? விடுதலைப் புலிகளா..?

சிங்கள அரசின் ஆணைகள், பத்திரங்கள், தபால்தலை, அறிவிப்புப் பலகைகள் என அனைத்திலும் சிங்கள, தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளும் இடம்பெற்றிருந்தன. இவையெல்லாம் 1983 வரையிலும் இருந்துவந்த நிலைமைதான். விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் வசித்த தமிழர்களைவிட சிங்கள அரசின் ஆளுகையில் இருக்கும் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்கிறார்கள். சிங்களர்களின் பெருந்தன்மையை, அன்பைப் புரிந்து கொள்ளாமல் போனதால்தான் இந்தப் பிரச்னை உருவாகியுள்ளது. அதிலும் தமிழர்கள் அனைவரையும் குற்றம் சொல்லுவது தவறுதான். தவறான தலைவனால் வழிநடத்தப்பட்டும் ஒரு பிரிவினரால் மற்ற அனைவருமே வேதனையை அனுபவிக்க நேர்கிறது.

புலிகள்தான் மக்கள்... மக்கள்தான் புலிகள் என்று முழங்கினார்கள். இந்தப் புலிகள்தான் தமிழ் பேசிய முஸ்லீம்களை போட்டது போட்டபடி வீடு வாசல் நிலபுலன்களை விட்டுவிட்டு ஓடுவிடுங்கள்... இல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று விரட்டினார்கள். கிழக்கில் இருப்பவர்களை அதிருப்தியின் விளிம்புக்குத் தள்ளினார்கள். பொது நீரோட்டத்தில் கலந்து இலங்கையின் இறையாண்மையை மதித்து அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தமிழர்களின் நலனைப் பாதுகாக்க முற்பட்ட பிற தமிழ் தலைவர்களை படுகொலை செய்ததும் இந்த விடுதலைப் புலிகள்தான். ஒரு ஆங்கிலப் பத்திரிகை கூட ஒரு முறை செய்தி வெளியிட்டிருந்தது... இலங்கை ராணுவம் கொலை செய்த தமிழர்களைவிட விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்கள் அதிகம் இருப்பார்கள் என்று. ஆனால், அவர்கள் சொன்னார்கள் புலிகள்தான் மக்கள். மக்கள்தான் புலிகள் என்று...

அவர்கள் சொல்வது சரிதான். ஈழத் தமிழர்களின் ஒரே தலைமை புலிகள்தான். மாற்றுக் கருத்து கொண்டவர்களைத்தான் கொன்றொழித்தாயிற்றே. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்... புலிகளை ஆதரித்த ஒருவர் ஒன்று பயத்தினால் அதைச் செய்திருப்பார்... அல்லது அறியாமையினால் செய்திருப்பார். எங்களுக்கு புலிகள் குறித்து பயமும் கிடையாது. அறியாமையும் கிடையாது.

அவர்கள் முன்னால் நாங்கள் இரண்டு விஷயங்களை முன்வைத்தோம். போரா... அமைதியா... என்று. அவர்கள் போரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஒருவகையில் இந்தப் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் எங்கள் குழந்தைகளைக் கொன்றதைக்கூட நாங்கள் பொறுத்துக் கொண்டோம். ஆனால், அவர்களுடைய குழந்தைகளையும் கொல்லும்படிச் செய்துவிட்டார்கள் அதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சில கதவுகளைத் திறக்கக்கூடாது. அவர்கள் திறந்துவிட்டார்கள். திரும்புதல் சாத்தியமில்லை.

மக்களுக்கும் இப்படியான ஒரு அழிவு தம் மீது கவிழும் என்று ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. ஏதோ நாம் கொஞ்சம் போராடினால் கேட்பதைக் கொடுத்துவிடுவார்கள் என்று நினைத்துவிட்டார்கள். தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிவிட்டார்கள். அது திசைகள் எல்லாம் கலங்கும்படியாக கர்ஜித்தது. என்ன செய்ய... தூக்கம் கலைந்த சிங்கத்திடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்...

(தொடரும்)

Saturday, October 2, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 19

அதிலும் இந்த ஜனநாயகக் கூக்குரல்களை எழுப்பும் ஒருவன் பள்ளிக்கூட மைதானத்தில் கொடி மரத்தின் முன்னால் சீருடையில் சிதறிக் கிடந்த சிறுவர்களைப் பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும். பால் அருந்திய மார்பில் ரத்தம் கசிவது புரியாமல் கதறிய பச்சிளம் குழந்தையைப் பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும். ஷெல் வீச்சில் குழந்தை சிதறிப் போனது நினைவில்லாமல் அள்ளிக் குவித்த துண்டங்களை தூளியில் போட்டு தாலாட்டிக் கொண்டிருந்த சித்தம் கலங்கிய தாயைப் பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும். பீரங்கி வண்டிகள் செம்மண் சாலையில் பதித்த தடங்களில் தேங்கிக் கிடந்த ரத்தத்தைப் பார்த்துவிட்டு அதில் நடுங்கிய நிலவின் பிம்பத்தைப் பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும்.



ஒவ்வொரு நாட்டில் இருப்பவர்களையும் பொதுவாக இரண்டு பிரிவாகப் பிரிப்பார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள்; அதற்கு மேலே வசிப்பவர்கள் என்று. ஆனால், எங்கள் ஊரில் இருப்பவர்களை கொல்லப்பட்டவர்கள், கொல்லப்படப் போகிறவர்கள் என்றுதான் பிரிக்க முடியும். மரணம் என்பது மனித வாழ்வில் மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஒவ்வொருவரும் பிறந்த உடனேயே அவரவருக்கான மரணக் கழுகு அதி உயரத்தில் வட்டமிட்டபடி பின் தொடர ஆரம்பித்துவிடும். ஆனால், அதன் நிழலை 50-60 வயது வரை யாரும் பார்க்கவே முடியாது. அதன் பிறகுதான் முதல் முதலாகக் அந்தக் கழுகு கண்ணில் படும்படியாகப் பறக்கத் தொடங்கும். பிறகு மெதுவாக வீட்டின் பின்வாசல் மரத்தில் வந்து உட்காரும். பிறகு கிணற்றடியில் வந்து அமரும். மூடப்பட்ட பின் வாசல் கதவைத் தன் கூர்மையான நகங்களால் தட்டித் திறக்கும். உங்களுக்கு 70-80 வயது ஆன பிறகு ஒவ்வொரு அடியாக எடுத்து வத்தபடி வீட்டுக்குள் நுழையும். தத்தித் தத்தி குறுக்கும் நெடுக்குமாக நடக்கும். மெள்ளத் தலைமாட்டில் வந்து உட்காரும். அதன் சுவாசம் முதன் முறையாக உங்கள் சுருக்கம் விழுந்த முகத்தில் படும். இரவுகளில் தூங்கும் போது கண் விழித்தபடி பக்கத்தில் உட்கார்ந்தபடி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கால் விரல்களை உடல் முழுவதுமாக விரித்து உயிரை மட்டும் தூக்கிக் கொண்டு திரும்பி வரமுடியாத தேசத்துக்கு பறந்து சென்றுவிடும். இதுதான் உலகம் முழுவதுமான வழக்கம். ஆனால், ஈழத்தில் அப்படி அல்ல. மரணக் கழுகுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருடைய தலைக்கு மேலே, வெகு அருகில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். பிறந்த குழந்தைகளின் ஏன் கருப்பையில் இருக்கும் குழந்தைகளின் மீது கூட அது உட்கார்ந்து கொண்டிருக்கும். சிலரது தோளில் அமர்ந்து கொண்டிருக்கும். லேசாகத் திரும்பினால் அதன் கோரமான கண்கள் மின்னுவதைப் பார்க்க முடியும். அதன் மூச்சுக் காற்று பிடரியில் ஒவ்வொரு நிமிடமும் புஸ் புஸ் என்று ஒலித்துக் கொண்டிருக்கும். மரணக் கழுகுகளின் பரந்து விரிந்த சிறகுகளின் நிழல், ஈழத்தின் மீது நிரந்தரமாகக் கவிழ்ந்து கிடந்தது.

வெடிகுண்டு அல்லது துப்பாக்கி சூட்டில் உடனே இறப்பவர்கள். காயம் பட்டு சிறுகச் சிறுக இறப்பவர்கள்… பட்டினியால் இறப்பவர்கள். வழி முறைகள் வேறு வேறு. இறுதி விளைவு ஒன்றே.

அது சரி... புலிகள் யாரைக் கொன்றார்கள். துரோகிகளைக் கொன்றார்கள். உளவாளிகளைக் கொன்றார்கள். தனி நாடு வேண்டாம் என்று சொன்னவர்களைக் கொன்றார்கள். இலங்கை அரசு தருவதை வாங்கிக் கொண்டு வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்று சொன்னவர்களைக் கொன்றார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது? எதிரியைவிட துரோகிகளும் துரோகிகளைவிடக் கோழைகளும் மோசமானவர்கள் அல்லவா. இத்தனை இழப்புக்குப் பிறகு ஈழம் வேண்டாம் என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது..? புலிகள் எடுத்த எடுப்பிலேயா தனி நாடு கோரினார்கள். எத்தனையோ கோரிக்கைகளை முன் வைத்து எதுவுமே கிடைக்காமல் போனதால்தானே தனி நாடு கோரிக்கையை முன் வைத்தார்கள். ஆள்வதற்கு ஐந்து தேசங்களைக் கொடு... முடியாதென்றால் ஐந்து ஊர்களையாவது கொடு... அதுவும் முடியாதென்றால் ஐந்து வீடுகளையாவது கொடு என்று கெஞ்சிக் கேட்டும் எதுவும் கிடைக்காமல் போனதால்தானே நிச்சயிக்கப்பட்டது குருக்ஷேத்திர யுத்தம்.யுத்தம் என்று ஆரம்பித்த பின் நேர்ந்த இழப்பைப் பார்த்துவிட்டு அந்த தருமன் கூடச் சொல்லவில்லையே, தருவதை வாங்கிக் கொண்டு போய்விடுவோம் என்று. அப்படிப் போவதாக இருந்தால் போரை ஆரம்பித்திருக்கவே வேண்டாமே... வேண்டுமென்றால் ஆரம்பித்து, போதுமன்றால் நிறுத்திக் கொள்ள இதென்ன விளையாட்டா... போர் நண்பர்களே போர்... இதில் ஒன்று அவன் வெல்ல வேண்டும். அல்லது நாம் வெல்ல வேண்டும். ஒன்று இந்த பூமியில் அவன் இருக்க வேண்டும் அல்லது நாம் இருக்க வேண்டும். அவன் இருந்தால் நாம் இருக்க முடியாது என்றான பின் நாம் இருக்க அவனை இல்லாமல் ஆக்கித்தானே ஆக வேண்டும். கடல் அலையற்று இருக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லையே... எதிர்த்தோம்... அதனால் அல்லவா இது நாள் வரை இருந்தோம்.

துரோகத்தின் வரலாறுகளைப் புரட்டிப் பாருங்கள்... புலிகளின் செயல்கள் உங்களுக்குப் புரியவரும்.

அனந்தன் : ராஜீவ் காந்தி அமைதி முயற்சிகளில் ஈடுபட்டு ஜெயவர்த்தனாவிடன் ஒப்பந்தம் செய்து கொண்டாரே. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாமே..?

விடுதலைப் புலி : அவர்கள் செய்து கொண்ட 1987 ஒப்பந்தம் எதை முன்வைத்தது தெரியுமா... போராட்டக்குழுவினர் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும்... இலங்கை அரசு கிழக்கு வடக்கை இணைத்து தனி மாநிலமாக அறிவிக்கும். தமிழ் பகுதிக்கு சுய நிர்ணய உரிமையைத் தரவேண்டும். சம உரிமைக்கு வழி செய்து தரவேண்டும்... இந்திய அரசு தேவைப்பட்டால் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்து தரும்... இதுதான் இலங்கையில் அமைதி திரும்ப செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்... தம்பியைச் சிறைப் பிடித்து அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வைத்தார்கள். இந்தியாவை நம்பி விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவித்தனர்... இந்திய அரசு இலங்கைக்கு அமைதிப் படை என்ற பெயரில் ராணுவத்தை அனுப்பியது... ஆனால், சுய நிர்ணய உரிமையும் தரப்படவில்லை... சம உரிமைக்கு வழி செய்தும் தரவில்லை... அது மட்டுமா நடந்தது... நடுநிலை என்ற போர்வையில் களம் இறங்கிய இந்திய அமைதிப் படை தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் இறங்க ஆரம்பித்தது. இந்திய ராணுவத்திடம் இருக்கும் ஆயுதங்கள் தமிழர்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டனர். ஆனால், இந்திய ஆயுதங்கள் தமிழர்களை நோக்கித் திரும்ப ஆரம்பித்தன. இந்திய ராணுவம் தமிழ் பெண்களைக் கற்பழிக்க ஆரம்பித்தது. புலிகள் மீண்டும் ஆயுதங்களைக் கையில் ஏந்த வேண்டி வந்தது.

சிங்களக் காடை ஜெயவர்த்தனே தான் ஆரம்பித்த போரை அமைதிக்கான போர் என்று வர்ணித்தான்... உண்மைதான்... தமிழர்கள் அனைவரையும் கொன்று குவித்துவிட்டால் அதன் பிறகு அமைதி தானாகத் திரும்பிவிடுமே... இந்த நாசகரத் திட்டத்துக்கு நீயும் உடந்தையாக இருந்தாய். உனக்கான சந்தன மாலையின் கண்ணிகளை எண்ணி எண்ணிக் கோர்த்தது நீதானே... உமக்கான சவப் பெட்டிகளின் ஆணிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்தது நீவிர்தானே...

அனந்தன் : என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் ராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய தவறுதானே

புலி : ராஜீவ் காந்தியின் மரணம் மிகவும் துரதிஷ்டகரமான நிகழ்வு. இதற்கு முன்னாலும் சிங்கள ராணுவ அணி வகுப்பின் போது ஒரு முறை அவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ரகசியமாகவெல்லாம் இல்லை. ஒட்டு மொத்த உலகமே பார்க்கும் நிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்திராவைக் கொன்றது ஒரு சீக்கியர் என்பதால் சீக்கியர்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலை வெறித் தாக்குதலால் அவர் மீது கோபம் கொண்டவர்கள் எத்தனையோ பேர் இருந்தனர். இன்னும் சொல்லப்போனால் ராஜீவின் மரணத்தால் பலனடைந்த வேறு பலரும் இருக்கிறார்கள். அவர்களில் யார் வேண்டுமானாலும் அந்தக் கொலையைச் செய்திருக்கக்கூடும். ஆனால், திட்டமிட்டே புலிகள் மீது அவப்பழி போடப்பட்டது. அவரைக் கொல்வதற்கு புலிகளுக்கு 100 சதவிகித காரணங்கள் இருந்ததும் உண்மையே. அமைதிப் படை என்ற பெயரில் இந்திய ராணுவம் ஈழத் தமிழ் பெண்களைக் கதறக் கதறக் கற்பழித்ததற்கெல்லாம் கணக்குப் பார்த்து பழி தீர்ப்பதென்றால் ராஜீவ் இன்னும் பல ஜென்மங்கள் எடுத்து வர வேண்டியிருக்கும்.

பிரேமதாசன்... பேரைப் பாருங்கள். எவ்வளவு இனிமையான பெயர்... இந்தப் பெயரை வைத்துக் கொண்டு எத்தனை அராஜகங்கள் புரிந்தாய்... பிரேமத்தின் தாசனாக இருக்க வேண்டியவன் பிரேதத்தின் தாசனாக மாறியதால் அவனுக்கான தீர்ப்பு அவனது மொழியிலேயே வழங்கப்பட்டது.

இலங்கை அரசின் போர் யாரோடு... புலிகளோடுதானே... புலிகள் அதைத்தானே செய்தார்கள். அப்பாவிகளை அவர்கள் ஒருபோதும் தாக்கியதில்லையே... இலங்கை அரசு நியாயமான போரை நடத்தியது என்றால் சர்வதேச அமைப்புகளை ஏன் வெளியேற்றியது. நடுநிலையான பத்திரிகையாளர்களை ஏன் கொன்றது? பாதுகாப்பு வளையம் என்பது உண்மையிலேயே பாதுப்புக்கானது என்றால் நடுநிலையான பார்வையாளர்களை அங்கு அனுமதிக்க மறுத்தது ஏன்..? உலக நாடுகள் அனைத்தும் இதைக் கண்டித்த பிறகும் கூட இந்திய அரசு இந்த சதிவேலைகள் குறித்து எந்த விமர்சனமும் எழுப்பவில்லையே... ஏன்..? புலிகள் வசம் 70000 பேர் சிக்கி இருக்கிறார்கள் என்று சிங்கள அரசு சொன்னது. இந்திய உள்துறை அமைச்சரும் அதையே வழிமொழிந்தார். சர்வதேச அமைப்புகளும் பிற ஊடகங்களும் குறைந்தது அங்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிக்கி இருக்கக்கூடும் என்று சொல்லிவந்தது. அதை அன்று இந்திய அரசு பொருட்படுத்தவில்லை.

அதன் பிறகு இலங்கை அரசு எண்பதாயிரம் அப்பாவிகளை மீட்டதாகச் சொன்னது. இந்திய அரசும் அதை தனது ராஜாங்க நடவடிக்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்று மார்தட்டிக் கொண்டது. எழுபதாயிரம் பேர் இருந்த இடத்தில் இருந்து 80000 பேரை எப்படி ஐயா மீட்டீர்கள். இன்னும்20000 பேர் அங்கு இருப்பதாகவும் அவர்களையும் மீட்டுவிடுவோம் என்றும் சொன்னார்கள். அப்படியானால் இதற்கு முன்னால் 70000 பேர்தான் இருப்பதாகச் சொன்னார்களே... எஞ்சிய நபர்களைக் கொன்று குவித்திட திட்டமிட்டிருந்தீர்களா..? அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் எச்சரித்ததும் பதுங்கிவிட்டார்களா..? இலங்கையின் இந்த கபட நாடகங்களைக் கண்டும் காணாததுபோல் ஏன் இந்தியா இருந்துவந்தது..? இந்த நாடகத்தை எழுதி இயக்கியதே இந்திய அரசிதானா..? இறையாண்மை குறித்து இயம்புவதெல்லாம் நாடகத்தின் நாசூக்கான வசனங்கள்தானா..? கணவன் ஒருவனைக் கொன்றதற்காக ஒட்டுமொத்த தமிழினத்தையும் பூண்டோ டு கருவறுக்கத் தீட்டம் தீட்டியதா தியாகத்தின் திரு உருவம்..? இத்தாலியப் பத்தினித் தெய்வம் இலங்கைத் தமிழர்களைப் பழி வாங்கியதா..? மார்பைத் திருகி எறிந்து சூளுரைத்த காவிய நாயகி கண்ணகி கூட அறவோர்களையும் அந்தணர்களையும் குழந்தைகளையும் பெண்டிரையும் முதியோரையும் விட்டுவிடச் சொன்னாளே அவள் உருவாக்கிய அழிவுத் தீயிடம்... இந்த நவீன கிராதகி ஒட்டு மொத்தத் தமிழினத்தையும் உயிரோடு கொல்ல உத்தரவிட்டாளா..?


(தொடரும்)

புத்தம் சரணம் கச்சாமி - 18

உங்கள் காடுகள் அன்பானவை... சுள்ளி பொறுக்கக் காட்டுக்குச் செல்பவர்களை கிழங்குவகைகளும் சேர்த்துத் தந்து பத்திரமாக அனுப்பிவைத்துவிடும். எங்கள் காடுகளைப் போல் கண்ணிவெடி வெடித்து கால் கைகளை முடமாக்கிவிடாது.

உங்கள் அங்காடிகள் நேர்மையானவை. காலிப் பையும் காசும் கொண்டு சென்றால் காசை மட்டும் வாங்கிக் கொண்டு காய்கனிகளைப் பைகளில் நிரப்பி அனுப்பிவிடும். எங்கள் அங்காடிகளைப் போல் உயிரைக் காவு கேட்காது.

உங்களுடைய ஊரில் கல்லறைகள் என்பவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக சிறு தோட்டம்போல் அமைந்திருக்கும். ஒரே ஒரு வாசல்தான் இருக்கும். இறந்து போன ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கல்லறைகள் எழுப்பப்பட்டிருக்கும். இறந்த தினத்தன்று நீங்கள் கறுப்பு உடை அணிந்து கொண்டு கையில் மலர் கொத்துடன் வந்து மெழுகுவர்த்தியை ஏற்றி முழந்தாளிட்டு இறந்தவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்வீர்கள். எங்கள் ஊரில் தனியாக கல்லறைத் தோட்டம் என்று எதுவும் கிடையாது. இறக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கல்லறை கட்டுவதென்றால் கல்லறைத் தோட்டமாக அல்ல கல்லறை நகரமாகத்தான் அது இருக்கும். குடும்பத்துக்கு ஒரு கல்லறை மாடம்... கிராமத்துக்கு ஒரு கல்லறை ஸ்தூபி... இதுதான் இங்கு சாத்தியம். எங்கள் சமூகத்தில் சமூக நல்லிணக்கம் முழுவதுமாக நிலவுவதுண்டு. இந்துக்கள் புதைக்கப்படுவார்கள். கிறிஸ்தவர்கள் எரிக்கப்படுவார்கள். மதத்தின் கொடூர விதிகள் எங்களைக் கட்டிப்போடுவதில்லை.

உங்களுடைய பேருந்துப் பயணங்கள் சுகமானவை... பச்சைப் பசேலென்று பரந்து விரிந்த வயல் வெளிகளினூடே காற்றைக் கிழித்தபடி செல்லும். கூடவே அதிகாலைச் சூரியன் உடன் வர அல்லது தென்னை மரங்களினூடே முழு மதி மறைந்து மறைந்து கண்ணாமூச்சி ஆடியபடியே உடன் வர... என உங்கள் பேருந்துப் பயணங்கள் சுகமானவை. பாதுகாப்பானவை. எங்கள் பயணங்களிலோ போக வேண்டிய இடத்துக்கு நாங்கள் ஒரு போதும் போய்ச்சேர முடிந்ததில்லை.

உங்கள் நெடுஞ்சாலையில் தென்படும் சுங்க சாவடிகளில் நீங்கள் உங்கள் ஆவணங்களைக் காட்டினால் போக அனுமதித்துவிடுவார்கள். உரிய கட்டணம் செலுத்தினால் மரியாதையுடன் அனுப்பிவிடுவார்கள். எங்கள் சாலைகளிலோ காவல் அரண்கள் வந்ததென்றால் அனைவரும் இறங்க வேண்டும். ஒவ்வொருவராக சோதிக்கப்படுவார். அனைவரும் பார்க்க வயசுப் பெண்களின் உடலெங்கும் ஊரும் கைகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? நீங்கள் ஒரு தந்தையாக, தாயாக இருந்து பார்க்க வேண்டும் அந்த வலியை.

உங்கள் கடல் பயணங்கள் இதமானவை. தூளியில் ஆடுவதுபோல் கடல் அன்னை உங்களைத் தாலாட்டியபடி அழைத்துச் செல்வாள். போய் வாருங்கள் என காற்றில் ஆடி விடைகொடுக்கும் கடலோரப் பனை மரங்கள்... சேருமிடம் வருகையில் வாருங்கள் வாருங்கள் என வரவேற்கும் கடலோர மரங்கள்... உங்கள் கடல் பயணங்கள் ரம்யமானவை. ஆனால், எங்கள் பயணங்களில் எங்கள் படகுகள் நடுக் கடலில் நிறுத்தப்படும். ஒரு அறையில் அனைவரையும் அடைத்துவைப்பார்கள். வாசலில் இருவர் துவக்குடன் நிற்பார்கள். ஒவ்வொருவராக விசாரணைக்கு வரச் சொல்வார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பெயரையும் ஊரையும் உரத்த குரலில் கத்தச் சொல்வார்கள். அலைகடல் மேலே தத்தளிக்கும் அந்தப் படகில் கொல்லப்படும் ஆண்கள் பாக்கியவான்கள்.

கயவர்கள் தவறு செய்தால் காவலர்களிடம் முறையிடலாம். காவலர்கள் தவறு செய்தால் நீதி மன்றத்தில் முறையிடலாம். நீதிபதிகள் தவறு செய்தால் அரசாங்கத்திடம் முறையிடலாம். காவலர்களும் நீதிபதிகளும் அரசாங்கமும் சேர்ந்து தவறு செய்தால்..? வில்லன்கள் மட்டுமே நடிக்கும் நாடகத்தில் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள கதாநாயகி யாரிடம் போய் முறையிடுவாள்..?

உங்கள் நாட்டில் சாலை விபத்தில் அடையாளம் தெரியாமல் இறக்கும் அநாதைகளுக்குக் கூட உரிய மரியாதையுடன் நடத்திவைக்கப்படும் இறுதிச் சடங்குகள். எங்கள் நாட்டிலோ உற்றாரும் உறவினரும் அனைவரும் இருந்தபோதும் காடுகளில் நாயும் நரியும் கழுகும் காகமும் தின்று தீர்த்த சடலங்களின் எண்ணிக்கை உங்களுக்குத் தெரியுமா..?

நினைத்துப் பாருங்கள்... நீங்கள் ஒரு கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகிறீர்கள். வயலிலோ, கடையிலோ, அலுவலகத்திலோ எங்கோ ஒரு இடத்தில் நீங்கள் வேலைசெய்துவருகிறீர்கள். திடீரென்று வானில் தாழப்பறந்தபடி பறக்கும் சில ஹெலிகாப்டர்கள். வந்திருப்பது தேவதூதர்கள் அல்ல என்பது உங்களுக்கு விரைவிலேயே தெரிந்துவிடும். அவர்கள் உங்களுக்கு கெடு விதிப்பார்கள். சுட ஆரம்பிப்பதற்கு முன் ஓடிப் போய்விடுங்கள் என்று அந்த அசரீரி ஒலிக்கும். நீங்கள் அலறி அடித்துக் கொண்டு காட்டுப் பக்கம் ஓடினால் அங்கு உங்களுக்காகக் காத்திருப்பார்கள் கையில் துவக்குகளுடன் சில காவலர்கள். அங்கிருந்து தப்ப படகுத்துறை நோக்கி ஓடினால் அங்கும் புன்முறுவல் பூத்தபடியே காத்திருப்பார்கள் வேறு சில காவலர்கள். வழியில் வரும் பஸ்ஸையோ காரையோ பிடித்து ஏறிச் சென்றால் சாலை ஓரத்தில் காத்து நிற்பார்கள் இன்னும் சில காவலர்கள். பள்ளியிலோ, கோயிலிலோ அடைக்கலம் தேடலாம் என்று ஓடினால் அங்கும் காத்திருப்பார்கள் உங்களுக்கான காலன்கள். எந்தத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். இல்லை நான் எங்குமே ஒடமாட்டேன் என்று வீட்டுக்குள்ளேயே இருந்தால் ஹெலிகாப்டர்களில் இருந்து வீசப்படும் குண்டுகளுக்குச் சிக்கி உயிரை விடலாம். நாளை அந்த படுகொலையில் தப்பிப் பிழைக்கும் உங்கள் குழந்தை வளர்ந்த பிறகு, இங்குதான் எங்கள் வீடு இருந்தது என்று அடையாளம் காட்டுவதற்கு பதிலாக இங்குதான் என் தந்தை கொல்லப்பட்டார் என்று அடையாளம் சொல்லும். உங்களுக்கு ஒன்று தெரியுமா..? நீங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெற்று உங்கள் சொந்த ஊருக்குச் சென்று வாழும் போது உங்கள் பேரக் குழந்தைகளுக்கு இதுதான் நான் படித்த பள்ளிக்கூடம்... இதுதான் நீ பிறந்த மருத்துவமனை... இந்தக் கோயிலில்தான் உனக்கு காது குத்தி மொட்டையடித்தோம் என்று மலரும் நினைவுகளைச் சொல்லி மகிழ்வீர்கள். எங்கள் நாட்டில் கற்பழிப்புக்கும் படுகொலைக்கும் கண்ணிவெடிகளுக்கும் தப்பிப் பிழைத்தவர்கள் ஒவ்வொரு இடத்தையும் எப்படி சொல்லிக் காட்டுவார்கள் தெரியுமா..? இந்தப் பள்ளியில் அடைக்கலம் புகுந்திருந்தபோதுதான் அண்ணனை விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள். அதன் பின் அவன் திரும்பவே இல்லை. இந்த வயக்காட்டு வரப்பில்தான் அம்மா ஷெல் வீச்சுக்கு பலியானாள்... இங்குதான் முன்பு ஒரு கோவில் இருந்தது. அங்குதான் அப்பாவும் பெரியப்பாவும் கொல்லப்பட்டார்கள்... ஆம்... எங்கள் பூமியில் எந்த ஒரு இடமும் எங்கள் நினைவில் இப்படித்தான் பதிவாகி இருக்கின்றன.

இப்போது சொல்லுங்கள்... நாங்கள் துவக்கை ஏந்தியது தவறா..?

இரவுகளில் மின்சாரம் இல்லாமல் இருப்பதுகூடப் பெரிய விஷயமில்லை. ஆனால், பதுங்கு குழிக்குள் பள்ளிகள் நடத்த நேர்ந்ததை எங்களால் மன்னிக்க முடியவில்லை. எந்தவொரு போரிலும் பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், கலாசார மையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பது சர்வதேசவிதி. ஆனால், இங்கு அந்த இடங்கள் மட்டுமே குறிவைத்துத் தாக்கப்பட்டன. அந்த இடங்கள் தாக்கப்படாது என்ற நம்பிக்கையில் எத்தனையோ அப்பாவிகள் அங்கு அடைக்கலம் தேடியிருந்தனர். அது தெரிந்த பிறகும் இன்னும் சொல்லப்போனால் அது தெரிந்ததனால்தான் அந்த இடங்கள் தாக்கி அழிக்கப்பட்டன.

இவற்றையெல்லாம் தட்டிக் கேட்ட விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளாம்... பிரபாகரன் குற்றவாளியாம். அது சரி... ஆதிக்க வெறி பிடித்த ஆங்கிலேயன் எழுதிய சரித்திரத்தில் வீரபாண்டியக் கட்டபொம்மனைக்கூடக் குற்றவாளி என்றுதான் எழுதினான். குற்றத்துக்கு தண்டனையாக தூக்கிலும் போட்டான். காலம் சரித்திரத்தை மாற்றி எழுதவில்லையா? செக்கிழுத்த செம்மல் தெரியுமா உங்களுக்கு... சுதந்திரக் கடலில் உரிமைக் கப்பலை மிதக்கவிட்டவன்... அவனுக்கு கிடைத்த பரிசு தெரியுமா..? மாடோடு மாடாக பூட்டப்பட்டு செக்கிழுக்க வைக்கப்பட்ட கொடூரம்... சொல்லுங்கள்... அவன் தீவிரவாதியா..? அவன் தண்டனை தரப்பட வேண்டியவனா..? வாஞ்சிநாதன் குற்றவாளி என்றால்... பகத் சிங் குற்றவாளி என்றால்... நேதாஜா சுபாஷ் சந்திர போஸ் குற்றவாளி என்றால்... தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரனும் குற்றவாளிதான்...

இத்தனைக்கும், ஈழத் தமிழர்கள் ஆரம்பத்தில் அமைதியாகத்தான் போராடினார்கள். சிங்கள அரசு ஒவ்வொரு அராஜக நடவடிக்கையில் ஈடுபட்ட போதும் ஈழத் தமிழ் போராளிகள் உண்ணாவிரதம் இருத்தல், அரசு அலுவலகங்கள் முன் சென்று கோஷங்கள் எழுப்புதல் என்று அமைதியாகத்தான் போராடிப் பார்த்தனர். சிங்களர் அரசு அடக்குமுறையின் அக்னி அஸ்திரங்களைப் பிரயோகித்த போதெல்லாம் தமிழ் போராளிகள் அஹிம்சையின் நீர் கொண்டுதான் அதை அணைத்து வந்தார்கள். ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல... ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்ததில் இருந்து கிட்டத்தட்ட 35-40 வருடங்கள் அன்பின் பாதையில்தான் போராடி வந்தார்கள்.

யாழ் நூலகம் தெரியுமா... உலகிலேயே தமிழ் சமுதாயத்தின் மிகப் பெரிய நூலகம்... ஒரு நூலகம் உங்களை என்னய்யா செய்தது..? அதை ஏன் கொளுத்தினார்கள்..? அவர்கள் கொளுத்தியது வெறும் நூல்களை மட்டுமா... தமிழனின் ஆண்டாண்டு கால பாரம்பரிய அறிவைக் கொளுத்தினார்கள்... தமிழனின் கலாசாரத்தைக் கொளுத்தினார்கள்... தமிழன் சிங்களர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் கொளுத்தினார்கள்... நெல்லின் உமி சிறிது நீங்கிப் பிரிந்தாலே மீண்டும் ஒன்று சேர்க்க முடியாது... அவர்களோ நெல் வயலையே கொளுத்தினார்கள்..

தமிழன் ஆரம்பித்த அமைதிப் போராட்டங்கள் ஸ்படிக நீர் போல் பாய்ந்து கொண்டிருந்தன. சிங்களன் அதில் சிவப்பு நிறத்தைக் கலந்தான். புத்தன் அவர்களுக்கு காவி அங்கியைக் கொடுத்தான். அவர்களோ அந்த அங்கிக்குள் துவக்குகளை மறைத்துவைக்க ஆரம்பித்தார்கள். பூவும் பூஜையும் வேண்டாம் என்று சொன்ன புத்தனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்தார்கள். புத்தனின் வெண் முத்துப் பல்லைப் போற்றிப் பாதூகாத்து வணங்கி வருகிறார்கள். அவன் சொன்ன அகிம்சை எனும் சொல்லைத் தூக்கித் தூர எறிந்துவிட்டார்கள். அதனால்தான் நவீனகாலத் தமிழன் புறநானூற்றுத் தமிழனாக ஆக வேண்டி வந்தது. சிங்களன் சிங்கமாக மாறியதால்தான் தமிழன் புலியாக மாறினான். போர்ப்பாதை புலிகள் விரும்பித் தேர்ந்தெடுத்த ஒன்றல்ல... அவன் மீது திணிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் கடைப்பிடித்துவந்த சுய ஒழுங்கே அதற்கான சாட்சி. புலிகள் போர் தர்மத்தை மீறி ஒரு செயலாவது செய்ததாகச் சொல்ல முடியுமா... தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தியதெல்லாம் அதிகார வர்க்கத்தினர் மீதும் அவர்களுடைய கைக்கூலிகள் மீதும்தான். அப்பாவிகள் மீது அல்ல. பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், நூலகங்கள் என்று அவன் எந்த ஒன்றின் மீதாவது தாக்குதல் நடத்தியதாகச் சொல்ல முடியுமா..? பிறர் அந்த அராஜகங்களை நிகழ்த்திவிட்டு எங்கள் மேல் பழி போடும் கயமைதான் காணப்படுகிறது. உண்மையில் நாங்கள் வீரனைப் போல் போரிட்டோம். ஏனென்றால் நாங்கள் மாவீரர்கள்.

அனந்தன் : சக போராட்டக் குழுக்களை அழித்தீர்கள்... இஸ்லாமியர்களைத் துரத்தி அடித்தீர்கள்... மாற்றுக் கருத்து கொண்டவர்களைக் கொன்றீர்கள்... இவையெல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காதே.

புலி : நீங்கள் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். போர்க்களம் என்பது மிகவும் கொடூரமான ஒன்று. அதிலும் சிங்கள காடைகள் இருக்கிறார்களே அவர்களைப் போன்ற கொடிய அரக்கர் கூட்டத்தை எதிர்த்துப் போராடும்போது மிகவும் எச்சரிக்கையாக, ஒற்றுமையாக இருந்தாக வேண்டியிருக்கிறது. நான் இறந்தால் என் கண்களை யாருக்காவது பொருத்துங்கள். அவர்கள் மூலம் மலரப் போகும் ஈழத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன குட்டிமணியின் கண்களை உயிருடன் இருந்தபோதே கதறக் கதறத் தோண்டி எடுத்து பூட்ஸ் காலில் போட்டு நசுக்கி கொன்றனர் கொடூரர்கள். கையில் துவக்குடனும் கழுத்தில் சயனைட் குப்பியுடன் பிறக்க நேர்ந்த தமிழ் தலைமுறை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்தானே...?

போராளிகளின் இருப்பிடங்கள், பணம் கிடைக்கும் வழிகள், ஆயுதங்கள் கிடைக்கும்விதம், தாக்குதல் நடத்த வகுக்கும் வியூகம், புலிகளுக்கு மறைமுகமாக உதவுபவர்கள் யார் யார்... என எத்தனையோ விஷயங்களை ரகசியமாகப் பாதுகாத்தாக வேண்டியிருந்தது. இந்த நிலையில் உளவாளிகளும் மாற்றுக் கருத்து கொண்டு பிரிபவர்களும் நிலத்தில் புதைக்கப்படும் கண்ணிவெடியை விட அபாயகரமானவர்கள். எந்த நேரத்திலும் அவர்கள் மூலம் ஆபத்து வரலாம். அந்த பயம் இருக்கிறதே அதைப் போல் கொடிய விஷயம் இந்த உலகில் வேறெதுவும் இருக்க முடியாது.

இலக்கும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. வழிமுறையும் தேர்ந்தெடுத்தாயிற்று. எதிரி யார் என்பதும் நன்கு தெரியும். போர்க்களத்துக்கு வந்த பிறகு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எதிரில் இருப்பவனை சுட்டு வீழ்த்த வேண்டும்... அவ்வளவுதான். அங்கு எந்த சந்தேகத்துக்கோ... கேள்விக்கோ... தயக்கத்துக்கோ, பின்வாங்கலுக்கோ இடம் கிடையாது. அப்படி உனக்கு தைரியம் இல்லை என்றால் நீ போர்க்களத்தை விட்டு வெளியே சென்றுவிடு. போர்க்களத்தில் ஆயுதத்துடன் இறங்கிவிட்டு எதிரியைச் சுடாமல், நான் என்ன சொல்ல வர்றேன்னா... என்று திரும்பிப் பார்த்து பேச ஆரம்பித்தால் பயம் வரத்தான் செய்யும். உன்னுடைய ஒவ்வொரு தயக்கமும் பின்வாங்கலும் இன்னொரு பேரழிவைக் கொண்டுவரும். எனவே, சில கடுமையான ஒழுங்கைக் கொண்டுவந்தாக வேண்டியிருக்கிறது.

அமைதி நிலவும் நாடுகளில் நடக்கும் கட்சிகள், அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் உள் அரசியல்கள், அதிருப்திகள், போட்டுக் கொடுத்தல்கள், காலை வாருதல்கள், கட்சித் தாவல்கள் என எத்தனையோ நடந்துவருகின்றன. இன்று என் பக்கம் இருப்பவர் நாளை எதிர்பக்கம் போவதால் பெரிய இழப்பு ஒன்றும் நேர்ந்துவிடாது எனக்கு. அப்படி இருக்கும் நிலையிலுமே மாற்றுக்கருத்தை சகித்துக் கொள்ளமுடியாமல் வெட்டிக் கொல்வது, தீவைத்துக் கொல்வது என சம்பவங்கள் நடந்துவருகின்றன. ஆனால், போர்க்களமோ இதைவிட நூறு மடங்கு அபாயகரமானது. ரகசியக் கோட்டையின் ஒற்றைச் செங்கல் உருவப்படுகின்றதென்றால்கூட அது உள்ளே நடக்கும் அனைத்தையும் வெளியே தெரியவைத்துவிடும். கோட்டையின் விரிசல்கள் அது எத்துணை சிறியதாக இருந்தாலும் உடனடியாக சரி செய்யப்பட்டுவிடவேண்டும். பெரிய கப்பலை மூழ்கடிக்க சிறிய துவாரமே போதும்... இப்படியான நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொருவருக்கும் தங்கள் நேர்மையை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இலக்குக்கான விசுவாசத்தை உரத்து முழங்கிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இதைச் செய்யத் தவறும் போது சில துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் போய்விடுவதுண்டு.

ஒரு இசை நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உகந்த கருவியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு தரப்பட்டிருக்கும். ஆனால், உங்கள் முன்னால் இருக்கும் பலகையில் நீங்கள் வாசிக்க வேண்டிய குறிப்புகள் அழகாக, அழுத்தமாக அச்சிடப்பட்டிருக்கும். அனைவரும் ஸ... என்று இசைக்கும்போது நீங்களும் ஸ என்றுதான் இசைத்தாக வேண்டும். அப்போது பார்த்து ரீ என்று இழுத்தால் இசை நிகழ்ச்சி இம்சை நிகழ்ச்சி ஆகிவிடும். கேவலம் ஒரு இசை நிகழ்ச்சிக்கே இத்தனை இறுக்கமான விதிகளும் நடைமுறைகளும் இருக்கும்போது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான மாபெரும் சங்கீதமான போரில் எத்தனை கண்டிப்பும் ஒழுங்கும் இருந்தாக வேண்டியிருக்கும்... அதில் நேரும் எந்தவொரு சிறிய இசைகேடும் ஒருபோதும் சரி செய்ய முடியாத அபஸ்வரமாகப் போய்விடும். போரை நடத்தும் தலைவன், அவன் விரும்பாவிட்டாலும் சர்வாதிகாரியாகத்தான் இருந்தாக வேண்டி இருக்கிறது. எல்லாரையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்தாக வேண்டியிருக்கிறது. அது அவனுடைய குற்றம் அல்ல... போரின் இயல்பு அது... இறக்க நேர்பவர்களைப் பற்றி அவன் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. உயிருடன் இருப்பவர்களைப் பற்றித்தான் அவன் சிந்தித்தாக வேண்டிவரும்.

இஸ்லாமியர்கள் தமிழ்தான் பேசினார்கள். அந்த வகையில் அவர்கள் தமிழர்களின் போராட்டத்தைத்தான் ஆதரித்திருக்க வேண்டும். நாங்கள் முதலில் இஸ்லாமியர்கள். அதன் பிறகுதான் தமிழர்கள் என்றார்கள். அதுவே மாபெரும் தவறு.சிங்களர்களுக்கு உளவு வேலை பார்த்ததோடு நிற்காமல் ஆயுதங்களை ஏந்தி தமிழர்களைக் கொல்லவும் ஆரம்பித்தார்கள். அதனால், அவர்களை விரட்ட வேண்டி வந்தது. ஆனால், அந்த நிகழ்வுக்கு எத்தனை முறை மன்னிப்பும் கேட்டுவிட்டோம். போர்க்கால ஜனநாயகம் என்பது வேறு. சாதாரண கால ஜனநாயகம் என்பது வேறு.
(தொடரும்)