இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Monday, August 30, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 11

காட்சி : 15

அனந்தன் (தமிழகத் தலைவரை உற்றுப் பார்த்து) : உங்களை ஏன் தீ வைத்துக் கொளுத்தக்கூடாது?

தமிழ் (லேசாக அதிர்ந்து பிறகு சுதாரித்துக் கொள்கிறார்) : இலங்கைப் பிரச்னையின் அடிப்படையான காரணமே சகோதரச் சண்டைதான். மலையகத் தமிழர்கள் ஒரு பிரிவாக இருந்தார்கள். இஸ்லாமியத் தமிழர்கள் ஒரு பிரிவாக இருந்தார்கள். ஈழத்திலும் வடக்கு கிழக்கு என்று தனித்தனியாக இருந்தார்கள். இந்த ஒவ்வொரு பிரிவுகளுக்குள்ளுமே மேலும் பல பிரிவுகள். போதாத குறைக்கு பிரபாகரன், தன் கொடியைத் தவிர ஈழத்தில் வேறு ஒரு கொடியையும் பறக்க அனுமதிக்கவில்லை. எருதாக இருந்தாலும் ஒன்று சேர்ந்தால் சிங்கத்தையே விரட்டிவிட முடியும். இங்கோ புலிகள் தமக்குள் மோதிக் கொண்டதால் நயவஞ்சக நரிகள் கூட ஏய்த்துவிட்டன.

அனந்தன் : தமிழகத்தில் உங்களுக்குள் பிரிவுகள் இல்லையா… சகோதரச் சண்டை இல்லையா என்ன..?

தமிழ் : தமிழகத்திலும் இந்தியாவிலும் ஆயிரக்கணக்கான பிரிவுகள் பிளவுகள் உண்டு. ஆனால், எதில் பிரிந்து செயல்படலாம். எதில் ஒன்று சேர்ந்து போராடவேண்டும் என்பதில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது. ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த போரில் அனைவரும் ஒரே குரலில் விடுதலை என்று முழக்கமிட்டதால்தான் வெற்றி கிடைத்தது. ஈழத்தில் ஆளாளுக்கு பிரிந்து நின்று முழங்கினார்கள். பொதுக்களம் ஒன்றில் அவர்களை ஒன்றிணைக்க நாங்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் முறிந்துபோயின. இலங்கையில் கூட்டாட்சிக்கு சிலர் ஒத்துக் கொண்டார்கள். சிலர் தனி நாடு என்றார்கள். சிலர் கூடுதல் அதிகாரம் என்றார்கள். ஒருவர் இன்னொருவரை துரோகி என்றார். கோழை என்றார். எதிரியைவிட்டு விட்டு தமக்குள் சண்டையிட்டனர். என்னதான் ஆனாலும் நாங்கள் மூன்றாவது மனிதர்கள்தானே. ஏதாவது ஒன்றை அழுத்திச் சொல்லவோ, ஒரு திசைக்கு மற்றவர்களை இழுக்கவோ எங்களுக்கு பலமோ அதிகாரமோ கிடையாதே… அதோடு, ஒன்று எங்களுக்கு ஆதரவாகப் பேசு. இல்லையேல் பேசாமல் இருந்துவிடு என்ற மிரட்டல் அல்லவா விடப்பட்டது.

அனந்தன் : இலங்கைப் பிரச்னை தீர அப்படி என்ன பெரிய முயற்சி எடுத்துவிட்டிருக்கிறீர்கள்.

தமிழகத் தலைவர் : என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள். நாங்கள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்திருக்கிறோம். மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டபோதே ஐ.நா. சபையில் அதை எதிரொலித்தோம். தமிழகத்துக்கு வந்த அகதிகளுக்கு முகாம்கள் அமைத்துக் கொடுத்தோம். கோடிக்கணக்கில் நிவாரணங்கள் கொட்டிக் கொடுத்தோம். கடையடைப்புகள், கறுப்புக் கொடி ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், தீக்குளிப்புகள் என எங்கள் தார்மிக ஆதரவைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தோம். ஆனால், வந்தாரை வாழ வைத்த தமிழ் மக்களால் சொந்த பந்தங்களின் சோகத்தில் பங்கெடுக்க முடியாமல், அதைத் துடைக்க முடியாமல் போய்விட்டது. எங்கள் உணர்வுகள் மதிக்கப்படவில்லை. எங்கள் ஆலோசனைகள் காது கேட்காதவனிடம் சொன்ன ரகசியங்களைப் போல் வீணாகிவிட்டன. எங்கள் உதவிகள் தரிசு நிலத்துக்குப் பாய்ச்சிய தண்ணீராகப் போய்விட்டது.

அனந்தன் : ஆனால், தமிழக அரசியல் தலைவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஒருவிதமாகவும் எதிர்க்கட்சியில் இருந்தபோது ஒருவிதமாகவுமே நடந்து கொண்டிருக்கிறீர்கள். இலங்கைப் பிரச்னை என்பது உங்களைப் பொறுத்தவரையில் உங்கள் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட ஒன்று மட்டும்தானே.

தமிழ் : அது உண்மையல்ல. நாங்கள் அரசியல் சதுரங்கத்தில் பல காய்களை உருட்டிவிளையாடுவதுண்டு. ஆனால், இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தந்ததும் அடக்கி வாசித்ததும் அவர்களுடைய நடத்தைகளின் அடிப்படையில் மட்டுமே. உண்மையில் ஆதரவாளர்களாக இருந்த எங்களை எதிர்நிலைக்குக் கொண்டு சென்றதே அவர்கள்தான்.

நாங்களும் தனி நாடு கேட்டுப் போராடியவர்கள்தான். இந்தி மொழி கட்டாயமாகத் திணிக்கப்பட்டபோது நாங்களும் அதை எதிர்க்கத்தான் செய்தோம். இந்தி இருக்குமானால் இந்தியா இருக்காது என்று முழங்கத்தான் செய்தோம். வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று போர்ப்பறை கொட்டத்தான் செய்தோம். ஆனால், கூட்டாட்சிக்குள்ளேயே தனி நாட்டாட்சிக்கு வாய்ப்பு கிடைத்தபோது நாங்கள் அதை தொலைநோக்குப் பார்வையோடு ஏற்றுக் கொண்டோம். தனி நாடு கோரிக்கையை தவறென்று தெரிந்ததும் விட்டுவிட அரசியல் முதிர்ச்சி வேண்டும். ஆறரை கோடித் தமிழினம் இன்று நூறரைக் கோடி இந்திய தேசியத்தை வழி நடத்தும் நிலைக்கு உயர்ந்திருக்கிறதென்றால் அது எங்கள் பொறுமையினாலும் சாதுரியத்தினாலும்தான். தனியாகப் போவதல்ல. தலைமைப் பதவியை ஏற்பது… அதுவே சாதுரியம். எந்த இந்திய அரசு இந்தியைத் திணிக்க விரும்பியதோ அதே அரசு இன்று தமிழை செம்மொழி என்று உலகறிய உயர்த்திப் பிடித்திருக்கிறது. ஈழப் புலி, பாய்ந்து சாதிக்காததைத் தமிழ்ப் புலி பதுங்கியே சாதித்திருக்கிறது.

ஈழத் தமிழருக்கு தந்த வெளிப்படையான ஆதரவு காரணமாக தமிழகத்தில் ஆட்சிகள் கலைக்கப்பட்டிருக்கின்றன. எத்தனையோ பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதைக் கண்டெல்லாம் மனம் கலங்கவில்லையே. ஆதரவை ஒருபோதும் பின்வாங்கவில்லையே. தேசம் வேறென்றாலும் இனம் ஒன்றல்லவா..? அழையா விருந்தாளியாக நாங்கள் அவர்கள் வீட்டின் முன் எத்தனை முறை போய் நின்றிருக்கிறோம் தெரியுமா… இன்னொரு நாட்டின் பிரச்னையைத் தீர்க்க எங்களால் எவ்வளவு முடியுமோ அதற்கும் மேலாக செய்து வந்திருக்கிறோம்.

இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நாமெல்லாரும் நாகரிக மனிதர்கள். கடந்த காலங்களில் மன்னர்கள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளை ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மீதும் திணிப்பார்கள். ஒரு ராஜா இன்னொரு ராஜாவுடன் சண்டைக்குப் போவார். அதற்குப் பெரிய காரணமெல்லாம் இருக்காது. இந்த ராஜாவுக்கு அந்த ராஜாவைப் பிடிக்காது. அவ்வளவுதான். அதற்காக ஆயிரக்கணக்கில் அடித்துக் கொண்டும் வெட்டிக் கொண்டும் மடிவார்கள். மக்களுடைய தரப்பு என்று ஒன்று அதில் இருக்கவே இருக்காது. மன்னருக்கு எதிரான மாற்றுக் கருத்துக்கு அங்கு இடமே கிடயாது. ஆனால், நாம் அதையெல்லாம் கடந்து வந்துவிட்டோம். இது மக்களாட்சி காலம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யக்கூடாது. ஜனநாயகப் பாதையில் போகிற நாம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நமது எதிர்ப்பை முதலில் சாத்விகமான போராட்டங்கள் மூலம் தெரியப்படுத்துவோம். அதில் எந்த பதிலும் கிடைக்கவில்லையென்றால் அதே போராட்டத்தை விரிவுபடுத்தி தீவிரப்படுத்துவோம். பேச்சுவார்த்தைகள் நடத்துவோம். கேட்டது எல்லாமே கிடைக்கவில்லையென்றாலும் கிடைத்ததை வைத்துக் கொண்டு நம்மை பலப்படுத்திக் கொள்வோம். இறுதிக் குறிக்கோளை மேலும் வலுவோடு வலியுறுத்துவோம். அப்படியாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் லட்சியத்தை அடைவோம். மக்களை மையமாகக் கொண்ட அரசியல் போராட்டம் என்பது அப்படித்தான் நடக்க வேண்டும். அப்பாவிகளின் உயிரை பணயம் வைக்கும் அதிகாரம் எவ்வளவு பெரிய கொம்பனுக்கும் எந்தப் புனிதக் கோட்பாடுக்கும் கிடையாது. இதுதான் ஜனநாயக உலகின் அடையாளம். ஆரம்பத்தில் அமைதியாகப் போராடிப் பார்த்தோம். எதுவும் கிடைக்கவில்லை. எனவே ஆயுதத்தைக் கையில் தூக்கினோம் என்று சொல்வதில் எந்த நியாயமும் கிடையாது. சாத்விக ஜனநாயகப் போராட்டம் என்பது இலக்குக்கான வெறும் வழிமுறை மட்டுமல்ல. ஒருவகையில் இலக்கைவிட அதுவே மேலானது. விடுதலைப் புலிகள் ஒருபோதும் மக்கள் இயக்கமாக, அரசியல் தளத்தில் செயல்பட்டதே இல்லை. அது ஒரு சிறிய கொரில்லா அமைப்பாக உதித்து அப்படியே அஸ்தமித்தும்விட்டது.

மூத்தோரின் நல்வாக்குகளும் முதிர்ந்த நெல்லிக்காயும் முதலில் கசக்கும். பிறகு இனிக்கும். லேசாகக் கசந்தபோதே துப்பிவிட்ட குழந்தையைப் பார்த்து மவுனமாக அழத்தான் முடியும்.

பிரபாகரனின் சர்வாதிகார மாளிகையின் அராஜக ஜன்னல்களில் மோதி மோதி எங்கள் ஆதரவின் புறாக்கள் துடிதுடித்து விழுந்தன. அதன் கால்களில் கட்டப்பட்ட புரிந்துணர்வுக் கடிதங்கள் பிரிக்கப்படாமலேயே போயின. கள்ளத் தோணிகள் பல போய் வந்தன. ஆனால், நல்ல தோணி ஒன்று கூட அனுமதிக்கப்படவில்லை. உண்மையான அக்கறை கொண்டவர்களுக்கும் இலங்கையில் இருந்தவர்களுக்கும் இடையிலான இணைப்பு நதி உறைந்தேகிடந்தது. இக்கரையில் நட்பின் பதாகையைக் கையில் பிடித்தபடி கால் கடுக்கக் காத்து நின்றோம். அக்கரையில் அந்த அக்கறை இருந்திருக்கவில்லை. சகோதரத்துவத்தின் பரிசல்கள் பயணிக்க, இறுதி வரை உருகவேயில்லை இடையில் இருந்த தவறான புரிதலின் பனிப்பாளங்கள்.

அனந்தன் : பங்களாதேஷ், திபெத் அகதிகளுக்கு இருந்த உரிமைகளோ சலுகைகளோ கூட இலங்கைத் தமிழர்களுக்கு இருந்திருக்கவில்லையே… தமிழகம் எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதானே நடத்தியிருக்கிறது. அடைக்கலம் தேடிவந்த அகதிகளுக்கே இதுதான் கதி. ஆறு மணியாகிவிட்டதென்றால் முகாமுக்குத் திரும்பி விட வேண்டும். அவ்வப்போது காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். சொத்து வாங்க முடியாது. வாடகைக்குக் கூட வீடுகள் கிடைக்காது. வேலைகள் சுலபத்தில் கிடைக்காது. இவையெல்லாம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக, எந்தவித ஒட்டுறவும் இல்லாமல் ஒப்புக்குத்தான் செயல்பட்டு வந்திருக்கிறீர்கள் என்பதைத்தானே எடுத்துக் காட்டுகிறது.

தமிழ் : இல்லை. அகதிகள் விஷயத்தில் அவர்களை ஆரம்ப காலத்தில் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத்தான் தாங்கினோம். ஆனால், உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்ய நினைத்தால்? மலர் செண்டுகள் மட்டுமே கண்டிருந்த விமான நிலையத்தில் வெடி குண்டுகள் வெடித்தன. மழை பெய்து மட்டுமே சேறான எங்கள் சந்தைகள் முதன் முறையாக ரத்தத்தால் நனைந்தன. இவ்வளவு ஏன்… மாலைகளும் பொன்னாடைகளும் மட்டுமே போர்த்தப்பட்ட தமிழகத்தில் முதல் முறையாக உயிருடன் இருந்தவருக்கு மலர் வளையம் சுமத்தப்பட்டது. அமைதிப் பூங்காவுக்குள் நச்சுப் பாம்புகள் ஊடுருவ ஆரம்பித்தன. வேலியைப் பலப்படுத்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

அனந்தன் : அமைதிப் பேச்சு வார்த்தைக்கான பொறுப்பை இந்திய அரசிடம் விட்டுக் கொடுத்த நீங்கள் அந்தக் குழுவில் இடம் பெற்றிருக்க வேண்டுமல்லவா..? பிற மாநிலத்தவர்களிடம் பொறுப்பை விட்டது தவறுதானே… அதுவும்போக, இந்திய உளவுத்துறைதான் போராளி இயக்கங்களிடையே சண்டையை மூட்டிவிட்டதாக தகவல்கள் வந்த பிறகும் அவர்களை நம்பி சும்மா இருந்தது உங்கள் தவறுதானே..?

தமிழ் : இந்திய உளவுத்துறை சில சதிகளில் ஈடுபட்டது என்னவோ உண்மைதான். ஆனால், ஊசி இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் நூல் நுழைந்திருக்க முடியுமா என்ன… அதுவும்போக, இந்திய அரசின் உத்தரவுப்படிதானே நாங்கள் அதில் நடக்க முடியும். தமிழர்கள் அந்தக் குழுவில் இடம்பெற்றால் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது செய்துவிடுவார்கள் என்ற எண்ணத்தினால்தான் பிற மாநிலத்தவரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், அவர்கள் செய்த ஒவ்வொன்றும் எங்களிடம் கேட்ட பிறகே செய்யப்பட்டன. தமிழகம் தன்னால் முடிந்ததைச் செய்தது. இந்தியா தன்னால் முடிந்ததைச் செய்தது.

அனந்தன் : முடிந்ததைச் செய்வதா முக்கியம். வேண்டியதைச் செய்வதல்லவா அவசியம்.

தமிழ் : அது சரிதான். ஆனால், அதற்கு வாய்ப்பு எங்கே தரப்பட்டது..? ஒரு தலைவன் என்பவன் தன் பின்னால் நடுநிலையாளர்களும் இன்ன பிறரும் ஏன் எதிரணியினரில் சிலரும்கூட அணிவகுத்து நிற்க போதிய நியாயங்களை ஏற்படுத்திக் கொடுப்பவனாக இருக்க வேண்டும். விமர்சன மழைத்தூறல்கள் இடைவிடாமல் பொழியும்போது தாங்கிக் கொள்ளவொரு தார்மிகக் குடையைக் கொடுக்க வேண்டும். ஆனால், எங்களை முடிவற்றுப் பெய்யும் மழையில் நனையவிட்டார்கள். அடுத்தவருக்காக எவ்வளவு நேரம்தான் ஒருவர் மழையில் நனைவது..?

அனந்தன் : நாங்கள் உங்களுக்கு அடுத்தவர்தான் இல்லையா..?

தமிழ் : என்ன செய்வது தாயும் பிள்ளையும்னாலும் வாயும் வயிறும் வேறுதானே..? ஒருவர் தனக்கு நேரும் இழப்புகளை முன் வைத்து நியாயம் கேட்க வேண்டுமென்றால், அவர் எந்த தவறும் இழைக்காமல் இருக்க வேண்டும். நான் ஐம்பது தவறுகள்தான் செய்திருக்கிறேன். எதிரி 100 தவறுகள் செய்திருக்கிறாரே. என் பக்கம் அணி வகுத்து நிற்க வேண்டியதுதானே என்ற வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. உனது காலை ஒருவர் வெட்டிவிட்டார் என்று வழக்கு தொடுத்தால் உன் பக்கம் ஜெயிக்க வேண்டுமென்றால் நீ ஒடிந்த காலுடன் நீதி மன்றம் ஏற வேண்டும். பதிலுக்கு நீ போய் அவருடைய கையை வெட்டி விட்டு ஒரு கையில் அருவாளையும் இன்னொரு கையில் வெட்டப்பட்ட எதிரியின் கையையும் எடுத்துக் கொண்டுவந்து நீதி கேட்டால்… புலிகள் செய்த ஒவ்வொரு கொலையும் சிங்கள ராணுவத்தினரின் ஒன்பது கொலைகளை நியாயப்படுத்திவிட்டன. போர் என்று வந்துவிட்டால் நான் ஒருவரை கொன்றால் நீயும் ஒருவரைத்தான் கொல்ல வேண்டும் என்று கணக்குப் பேச முடியாது. யானைக்கு தரையில் பலம். முதலைக்கு நீரில் பலம். யானையை வெட்டவெளியில் எதிர்கொண்டார்கள். முதலையைப் பார்த்ததும் முண்டாவை தட்டிக் கொண்டு பாய்ந்து நீரில் குதித்து சண்டை போடப் போனார்கள். சிங்கத்தை அதன் குகைக்குள்ளே சென்று தாக்குவது வீரமும் அல்ல; விவேகமும் அல்ல. பலம் குறைந்தவர்கள், பலம் மிகுந்தவர்களை எதிர்க்க மிகவும் சரியான வழி அமைதியான வழியிலான போராட்டம்தான். கொரில்லா தாக்குதல் போராளிகளுக்கு வெற்றியைத் தரலாம். ஆனால், மக்களுக்கு அது அழிவையே தரும்.

தமிழகத்தில் இருந்த அகதிகள் முகாமில் வசதிகள் குறைவாக இருப்பது பற்றிச் சொன்னீர்கள். அதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதை கனத்த மனதுடன்தான் செய்தோம். புருஷனிடம் கோவித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு வந்துவிடும் மகளிடம் உண்மையான பாசத்தை வெளிக்காட்டினால் எங்கே மகள் பிறந்தவீட்டிலேயே இருந்துவிடுவாளோ என்ற பயத்தில் கொஞ்சம் பாராமுகமாக நடந்து கொள்ளும் தந்தையை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த நிலையில்தான் இருந்தோம். இனி ஈழம் சாத்தியமில்லை என்பது தெரிந்த மறுகணமே இங்கு தங்கியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வாங்கித் தருவதாக அறிவித்திருக்கிறோம். 100 கோடி நிவாரணம் ஒதுக்கியிருக்கிறோம்.

நேசத்துக்குரியவன் தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டு செய்த மோசத்தால் எங்கள் கைகள் கட்டப்பட்டுவிட்டன.

ஒரு நிரபராதி, தவறான வக்கீலைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தண்டனை பெற வேண்டிவந்துவிட்டது. பார்வையாளர் நாற்காலிகளில் முன் வரிசையில் அமர்ந்தபடி மவுன சாட்சியாக நாங்கள் பார்த்த வழக்கு விசாரணை, நாங்கள் பார்க்க விரும்பிய ஒன்றல்ல. கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களாகிய எங்கள் கைகளில் படிந்த ரத்தம் எம் கண்களில் இருந்து கசிந்ததுதான்.

ஓநாய்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஒதுங்கிய மந்தை ஆடுகளை விஷப் புல்வெளிக்கு ஓட்டிச் சென்றான் ஒரு மேய்ப்பன். ஆடுகள் குறித்து நாங்கள் அழுவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாமல் போய்விட்டது. யாமோ கள்வர்..? சொல்லுங்கள்... யாமோ கள்வர்..?


(தொடரும்)

Friday, August 27, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 10

இறந்தவர்களைப் புதைத்தல்
நன்கு பரிச்சயமாகித்தான் இருந்தது எங்கள் காலகட்டத்தில்
(அது எதைக் குறிப்பதாக இருந்தாலும்
எங்கள் மன நல நிபுணர்கள்
மனதின் சமநிலையைத் தக்க வைக்க உதவி புரிந்திருக்கிறார்கள்)

ஏதோ அரிதாக நடக்கும் சம்பவம் போல்
இது ஒன்றும் அவ்வளவு தெளிவாக
மனதில் பதிந்து கிடக்க எந்தக் காரணமும் இல்லைதான்

ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்
நான் உணர்ச்சி வசப்படுபவன் அல்ல.
ஒருபோதும் மனம் தளர்ந்துபோனது கிடையாது

உணர்ச்சிகளை வெளியில் காட்ட மிகவும் கூச்சப்படுவேன்
உங்களைப் போலவே,
அன்றாடக் கடமைகளை அழகாகப் பார்த்துக் கொண்டு செல்வேன்

மிகவும் விசுவாசமானவன்.
’மறந்துவிடு’ என்று அரசு சொல்லும்போது
அப்படியே செய்துவிடுவேன்.
மறந்துவிடும் என் திறமை என்றுமே
சந்தேகிக்கப்பட்டது கிடையாது
அது பற்றி நான் எந்தப் புகார் தெரிவித்ததும் கிடையாது

இருந்தும்
அந்தக் கும்பல் அந்த காரைத் தடுத்தி நிறுத்தியவிதம்
என் நினைவில் இப்போதும் இருக்கிறது.
காரில் நான்கு பேர் இருந்தனர்.
ஒரு பையன், ஒரு சிறுமி,
ஒரு ஆண், ஒரு பெண்
குழந்தைகளின் பெற்றோர் என்று நினைக்கிறேன்
(நான்கோ ஐந்தோ பேர்தான் இருந்ததுபோல் தெரிந்தது)
பிற கார்களைத் தடுத்து நிறுத்தியது போலத்தான்
இந்த காரையும் தடுத்து நிறுத்தினார்கள்.
எந்த வித்தியாசமும் அதில் இல்லை.

சில வழக்கமான கேள்விகள் கேட்கப்பட்டன.
தவறுதலாக எதுவும் நடந்துவிடக்கூடாது அல்லவா..?

அதன் பிறகு, காரியத்தில் இறங்கினார்கள்.
வழமை போலவே எல்லாமும்
கதவை மூடுதல்
பெட்ரோல் ஊற்றுதல்,
சுற்றி நின்று கொள்ளுதல்
எல்லாமே வழமை போல்

அப்போது யாரோ
எதுவோ வித்தியாசமாக உணர்ந்தார்கள் போலிருக்கிறது.
இடதுபக்க இரண்டு கதவுகளையும் திறந்தார்கள்.
இரண்டு குழந்தைகளையும்
பெற்றோரிடமிருந்து வெளியே இழுத்தார்கள்.

குழந்தைகள் கதறி அழுதன

குழந்தைகளின் நன்மைக்காக
அவர்களுடைய விருப்பத்தை மீறி
சில செயல்களைச்
சில நேரங்களில் செய்யத்தானே வேண்டியிருக்கிறது.
அவர்கள் அப்படி நினைத்திருக்கக்கூடும்

காரியத்தில் கண்ணான இன்னொருவன்
சட்டென்று நெருப்பை
திறமையாகப் பற்ற வைத்தான்.
குப்பென்று தீ பரவியது
சுற்றிலும் எரிந்து கொண்டிருந்தவற்றின் எண்ணிக்கையில்
மேலும் இன்னொன்றாகச் சேர்ந்தது

நன்கு எரிய ஆரம்பித்ததும் கூட்டம்
புதிய சாசகத்தைத் தேடி நகர ஆரம்பித்தது
சிலர் கலைந்து சென்றனர்.
உள்ளிருந்த இருவர்
என்ன நினைத்திருப்பார்கள்
என்ன உணர்ந்திருப்பார்கள்
யாருக்கும் கவலையில்லை.

அமைதியை விரும்பும் மக்கள்
தங்கள் வீடுகளை நோக்கி
நடக்க ஆரம்பித்தனர்

அப்போது
திடீரென்று
காருக்குள் இருந்த மனிதர்
கார் கதவை உடைத்துத் திறந்தார்.
அவருடைய சட்டையும் தலைமுடியும்
ஏற்கெனவே தீயில் கருக ஆரம்பித்திருந்தன

பாய்ந்து குனிந்து தன்னிரு குழந்தைகளைப் பிடுங்கிக் கொண்டார்
திட்டமிட்ட செயல் ஒன்றை முடிப்பதுபோல்
எந்தப் பக்கமும் திரும்பாமல்
காருக்குள் குழந்தைகளுடன் புகுந்தார்.

உள்ளே
கார் கதவை
அழுத்தமாகத் தாழிட்டுக் கொண்டார்.
அந்தச் சத்தத்தை
வெகு துல்லியமாக
நான் கேட்டேன்.
- பஸில் ஃபெர்னாண்டோ

Thursday, August 26, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 9

அடிப்படையில் இந்த பிரச்னை இந்த அளவுக்கு மோசமாக யார் காரணம் தெரியுமா..? விடுதலைப் புலிகள்தான். ஜெயவர்தனேயுடன் ராஜீவ் காந்தி 1987-ல் ஒரு ஒப்பந்தம் செய்தார். அதில் இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க எல்லா வழிகளும் செய்யப்பட்டிருந்தன. சுய ஆட்சிக்கான அருமையான வாய்ப்பு தரப்பட்டது. இவ்வளவுதான் செய்ய முடியும். அது தான் நியாயமும் கூட. பிரிவினை வாதம் என்பதை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது. காஷ்மீரில் தனிநாடு வேண்டும் என்று கேட்டுத்தான் போராடிவருகிறார்கள். இந்திய ராணுவம் அதை எதிர்த்துத்தான் போராடுகிறது. அப்படி இருக்க இலங்கையிடம் போய் தமிழர்களுக்கு தனி நாடு கொடு என்று எப்படிச் சொல்ல முடியும்..? நாளை அவர்கள் அப்படியானால் காஷ்மீர் மக்களுக்கு தனி நாடு கொடுக்க வேண்டியதுதானே என்று முகத்தில் அடித்தாற்போல் கேட்பார்களே..? ஊருக்கு ஒரு நீதி உனக்கு ஒரு நீதியா என்று காறி உமிழ்வர்களே... இந்தியா இந்த விஷயத்தில் நடுநிலை வகிப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்..?

அதோடு அந்த ஒப்பந்தத்தில் முதலில் நிலைமை மோசமானால் இந்தியா தன்னுடைய படையை அனுப்பும் என்ற நிபந்தனை சேர்க்கப்படவே இல்லை. அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த அன்று காலையில் ஜெயவர்த்தனேயை எதிர்த்து அங்கிருந்த தீவிரவாத சிங்களர்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டை பிரித்துக் கொடுக்க வழி செய்வதாக அவர்கள் கோபப்பட்டனர். அதனால் அவர் வீட்டைக்கூடக் கொளுத்தினார்கள். இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்த தன் படைகளை சிங்களர்கள் கலகம் செய்யும் இடத்துக்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போதுதான் இலங்கையில் சட்டம் ஒழுங்கு சீர்பட சிறிது காலத்துக்கு இந்தியப் படையினரை அனுப்பி உதவுங்கள் என்று ஜெயவர்த்தனே கேட்டுக் கொண்டார். ராஜீவ் காந்தி கூட நீங்கள் யோசித்துத்தான் சொல்கிறீர்களா என்று ஒருதடவைக்கு இரண்டு தடவை கேட்டிருக்கிறார். இந்தியாவுக்கு இன்னொரு தேசத்துக்கு ராணுவத்தை அனுப்புவதில் எந்த விருப்பமும் இருந்திருக்கவில்லை.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் விடுதலைப் புலிகளின் தலைமையில் ஈழத்தில் தனி நாடு அமைந்தால் அடுத்ததாக அவர்கள் தமிழ் நாட்டுத் தலைவர்களுடன் ஒன்று கூடி இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டைப் பிரித்துக் கொண்டு போகமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்..? ஏற்கெனவே தனி திராவிட நாடு என்று முழங்கியவர்கள்தான் அவர்கள்... எனவே, இந்தியா தனது இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் ஒரு செயலைச் செய்ய முடியாது.

விடுதலைப் புலிகள் தனி நாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டு ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தால் நிச்சயம் பிரச்னை எப்போதோ தீர்ந்துவிட்டிருக்கும். கூட்டாட்சி அமைப்பு ஒன்றுதான் இந்தப் பிரச்னைக்கான ஒரே தீர்வு. இந்த உண்மையைப் புரிந்து கொண்டதால்தான் ராஜீவ் காந்தி அப்படி ஒரு உடன்படிக்கையை ஜெயவர்த்தனேவுடன் செய்துகொண்டார். அதன் அடிப்படையில்தான் இந்திய அமைதிப்படையை அனுப்பிவைத்தார். ஆனால், இந்த உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டுவிட்டு அதன் பிறகு தவறான பாதையில் போக ஆரம்பித்தனர் விடுதலைப்புலிகள். ஒப்பந்தம் கையெழுத்தான ஒன்றரை மாதத்துக்குள் திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்தார். அமைதி திரும்பிவிடக்கூடாது என்பதில் அத்தனை அக்கறை.

சக போராட்டக் குழுக்களின் தலைவர்களைக் கொன்று குவித்தனர். சிங்களர்களுக்கு உதவுவதாகச் சொல்லி தமிழ் முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். எண்பதாயிரம் இஸ்லாமியர்களை 2 மணி நேரக் கெடு விதித்து வீடு வாசல், நில புலன் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடும்படித் துரத்தினர். தமிழர்களிலேயும் கூட்டாட்சி அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் அனைவரையும் அநியாயமாகக் கொன்று குவித்தனர். புலிகளை விமர்சித்தவர்களைக் கொன்றனர். புலிகளை ராணுவம் சுற்றி வளைத்த போதெல்லாம் மக்கள் கூட்டத்தையும் துப்பாக்கிமுனையில் மிரட்டி தங்களோடு இடம் பெயர வைத்தனர். தனது பிழையான அரசியலின் மூலம் இலங்கைத் தமிழ் சமூகத்துக்கும் சிங்களர்களுக்கும் இப்படியான ஒரு பேரிழப்பை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள்தான்.

ஆனால், அதையெல்லாம் மறைத்துவிட்டு இந்திய அரசின் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளை சுமத்தும் தமிழ் அரசியல் தலைவர்களைப் பார்த்து நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். கடைசிகட்டப் போரில் பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டபோது இவ்வளவு கூக்குரல் இட்ட நீங்கள் அதற்கு முன்னால் என்ன செய்தீர்கள்... ஈழத் தமிழர்கள் என்பவர்கள் உங்களுடைய தொப்புள் கொடி உறவு என்று சொல்கிறீர்களே... அவர்களுடைய பிரச்னை தீர நீங்கள் என்ன செய்து கிழித்திருக்கிறீர்கள்... உண்ணாவிரதம் நடத்துவது, தந்தி கொடுப்பது, மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவது, பத்திரிகைகளில் அடுத்தவர் மீது பழியைப் போடுவது என்பதைத் தவிர உருப்படியாக என்ன செய்திருக்கிறீர்கள்..?

அகதிகளாக தமிழகத்துக்கு எத்தனைபேர் வந்திருக்கிறார்கள்? கூப்பிடு தூரத்தில் இருக்கும் உங்களிடம் வராமல் அனைவரும் ஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ் என்று மேலைநாடுகளுக்குத்தானே போயிருக்கிறார்கள். நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்..? ஈழத் தமிழர்களே நீங்கள் அகதிகள் அல்ல... எங்கள் விருந்தாளிகள் என்று வரவேற்று தமிழகத்தில் தங்க இடமும் உழைத்துப் பிழைக்க கவுரவமான வேலையும் உரிமையும் தந்திருக்க வேண்டும். வெளி நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் கூட நாலைந்து ஆண்டுகளில் அந்த சமூகங்களில் சுமுகமாகக் கலந்துவிட முடிந்திருக்கிறது. ஆனால், இங்கு பதினைந்து வருடங்களாக தமிழக முகாம்களில் இருப்பவர்கள் அகதிகளாகத்தானே இருந்துவருகிறார்கள். இப்போது காலங்கடந்த ஞானோதயமாக நூறு கோடி தருகிறேன் என்றூ ஒரு கண் துடைப்பு அறிக்கை வேறு. 1983லிருந்தே அகதிகள் தமிழகத்தில் இருந்து வருகிறார்கள். திபெத்திய, பங்களாதேஷிய அகதிகளுக்கு இருந்த உரிமைகள் கூட இலங்கைத் தமிழர்களுக்குத் தரப்பட்டிருக்கவில்லை.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னால் வரை தமிழகத்தில் இருந்த அகதிகள் முகாம்களின் நிலை என்ன என்பது ஊருக்கே தெரியுமே..? தமிழ் தலைவர்களில் யாராவது ஒருவர் அங்கு போய் அவர்களுடைய குறை என்ன என்பதைக் கேட்டிருப்பீர்களா..? இந்தியா கைவிட்டுவிட்டது... என்று இப்போது கூக்குரல் இடுகிறீர்களே... நீங்கள் என்ன செய்தீர்கள்..?

திராவிடக் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்னையை தங்கள் வோட்டுப் பொறுக்கி அரசியலுக்கு உதவும்வகையில் பயன்படுத்திக் கொண்டதைத் தவிர வேறு என்ன செய்தார்கள்?

போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சர் இலங்கைக்குப் போகவேண்டும்... இந்திய பிரதமர் இலங்கைக்குப் போகவேண்டும் என்று வாய் கிழியக் கத்தினார்கள்... தமிழகத்தில் இருந்து தலைவர்கள் வந்து பேச வேண்டும் என்று இலங்கை அதிபர் கேட்டுக் கொண்டதும் அடுத்த நிமிடமே வாயை மூடிக் கொண்டு ஓடிவிட்டார்கள்... ஏன்..? உங்கள் வீரமெல்லாம் வீட்டுக்குள் இருந்து வசனம் பேசுவதில்தான் அடங்கி இருக்கிறது இல்லையா..? இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போனால் விடுதலைப் புலிகள் உங்களையும் போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்ற பயம் இல்லையா..?

ராஜீவ் கொலையை மட்டுமே வைத்து இலங்கைப் பிரச்னையை அணுகக்கூடாது என்று சொல்கிறார்கள். அது எப்படி சரியாக இருக்க முடியும். ராஜீவ் காந்தி இலங்கையில் அமைதி திரும்ப ஆத்மார்த்தமாக முயற்சிகள் எடுத்தவர். அவரைக் கொன்றதன் மூலம் இலங்கையில் அமைதி திரும்பக்கூடாது என்று ரத்தால் அடிக்கோடிட்டுக் காட்டினார்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர். இலங்கை சரித்திரத்தில் அந்த அத்தியாயத்தை மூடிவிட்டு படி என்று சொன்னால் என்ன அர்த்தம். நாளை சிங்கள அரசின் வன்முறைகளை மறந்துவிட்டு இலங்கை பிரச்னையைப் பாருங்கள் என்று ஒருவர் சொன்னால் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்குமோ அது போன்றதுதான் இதுவும்.

அனந்தன் : விடுதலைப் புலிகள் செய்த தவறுக்காக அப்பாவிகள் கொல்லப்பட வேண்டுமா..? ஒரு பக்கம் போராளிகள்… இன்னொரு பக்கம் ராணுவம். இரண்டுக்கும் நடுவில் அப்பாவிகள் சிக்கிக் கொண்டிருந்தார்களே… அவர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்திருக்கலாமே…

இந்திய உள்துறை அமைச்சர் : என்ன செய்ய... புலிகள்தான் மக்கள்... மக்கள்தான் புலிகள் என்று அல்லவா அங்கு நிலைமையை ஆக்கியிருந்தார்கள். ஒரு தவறான தலைவனுடைய முட்டாள்தனமான செயல்பாடுகளினால் ஒரு இனம் அழிய நேர்வதைப் பார்த்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் நிலையில்தான் இந்தியா இருந்தது, மகாபாரதத்தில் பீஷ்ம பிதாமகர் இருந்தது போல். குருக்ஷேத்திர யுத்தத்தில் கவுரவர்கள் அதிகமாக இருந்தார்கள். பாண்டவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள். இருந்தும் பாண்டவர்களால் வெல்ல முடிந்தது. ஏனென்றால், அவர்கள் பக்கம் நியாயம் இருந்தது. நீதி இருந்தது. தர்மம் இருந்தது. ஆனால், இன்றைய இலங்கை யுத்தத்தில் தமிழர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறார்கள். சிங்களர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், என்ன செய்ய..? இன்று தர்மம் பெரும்பான்மையின் பக்கமல்லவா இருக்கிறது.

பிரபாகரன் தவறான பாதையில் வெகு துரம் வரை போனார். இனி மீள்தல் சாத்தியமில்லை என்னும் அளவுக்குப் போனார். அவரைத் தலைவராக ஏற்றவர்களுக்கும் அதுதான் கதி... என்ன செய்வது மூளை போடும் தவறான திட்டங்களுக்கு அடியும் உதையும் வாங்குவது காலும் கையும் தானே..?

அனந்தன் : தமிழகத்தில் இருந்து யாராவது ஏதாவது செய்ய விரும்பினால் உடனே தேச விரோதச் செயல் என்று அவர்களை அச்சுறுத்தி அடக்கித்தானே வந்திருக்கிறது இந்தியா..?

இந்திய உள் துறை அமைச்சர் : அப்படியில்லை. தமிழகத்தில் இருந்த தலைவர்கள் இந்தப் பிரச்னையில் உண்மையான அக்கறையை ஒருபோதும் காட்டியதில்லை. தம்பிக்கு ஒரு துன்பமென்றால் அண்ணனல்லவா விழுந்தடித்து ஓடிச் சென்று காப்பாற்றியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் இருந்துவிட்டு அடுத்தவர் மேல் பழி போட்டால் என்ன நியாயம்..? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வெறும் இருபத்து நாலு கிலோமீட்டர் இடைவெளிதான் தமிழகத்துக்கும் இலங்கைக்கும். கடல் அமைதியாக இருந்தால் வெறும் ஐந்தே மணி நேரப் பயணம்தான். பிரிவினைவாதத்துக்கு ஆதரவு கொடுத்தவர்கள் விடுதலைப் புலிகளுக்கு அடிப்படைத் தேவையான டீசல், உணவுப் பொருட்கள், மருந்துகள், ஆடைகள் என ஆரம்பித்து ஆயுதங்கள்வரை கடத்திக் கொண்டு சென்று கொடுத்திருக்கிறார்கள். கள்ளப் பணம் கை மாறி இருக்கிறது. மருத்துவர்கள், மீனவர்கள், அரசியல்தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வியாபாரிகள், கடத்தல்காரர்கள் என மிகவும் வலுவான வலைப்பின்னல் உதவி புரிந்திருக்கிறது. அழிவின் மர்மச் சுரங்கத்தில் ஆயிரம் காலடித் தடங்கள். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக. ஆனால், அன்பின் நெடுஞ்சாலையிலோ ஒற்றைக் கால் தடம் கூடப் பதிக்கப்படவில்லை. அது ஏன்..?

ஆறு கோடித் தமிழர்கள் அருகில் இருந்தும் கடலின் அக்கரையில் இருந்த ஈழத் தமிழர்கள் அநாதைகளாக மடிய நேர்ந்ததேன்? தமிழகத்தில் இருந்த தலைவர்களில் சிலர் ஈழப் போராளிகளைத் தவறாக வழி நடத்தினார்கள். மற்ற தலைவர்கள் தங்களுடைய அரசியல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு இன்றைக்கு ஒன்று நாளைக்கு ஒன்று என்று வேடிக்கை காட்டினார்கள்.

தவறான வழியில் போன தம்பியைத் தண்டித்து திருத்தியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். கோரிக்கையும் சரியில்லை. வழிமுறையும் சரியில்லை. ஆண்ட பரம்பரை இன்னொருமுறை ஆள நினைப்பது தவறா..? என்றொரு அபத்தமான கோஷம்… ஆங்கிலேயன் நம்மை ஆண்டவன்தான். இன்னொரு தடவை ஆள விடலாமா..? அதுமட்டுமல்லாமல், நீ யாராக இருந்தாய் என்பதை வைத்து அல்ல…யாராக இருக்கிறாய்… யாராக இருக்க வேண்டும்… என்பதை வைத்துத்தான் மற்றவர்கள் உன்னை மதிப்பார்கள் என்று போராளிகளுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு வாய்ச்சவடாலில் தேர்ந்த தமிழ் தலைவர்கள் ஈழப் போரளிகளை பகடைக்காயாக வைத்து கொடிய சூதாட்டத்தை ஆடியுள்ளனர்.

ஒரு விஷயத்தை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்… இந்தியாவில் தனிநாடு கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அந்த கோஷங்களை அழகாக ஆழக் குழி தோண்டி அடக்கம் செய்துவிட்டார்கள். ஆனால், இலங்கையில் அதைத் தூண்டிவிட்டு வந்துள்ளனர். இலங்கையில் போர் தொடர்ந்து நடந்தால் தமிழகம் ஸ்தம்பிக்கும்… ரத்த ஆறு ஓடும்… ஆயுதத்தை ஏந்தி போர் களத்துக்குள் பாய்வேன் என்றெல்லாம் வீரவசனங்கள் பேசியவர்களின் தலையில் இருந்து ஒரு ரோமம் கூட உதிரவில்லை என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். எனவே, இந்தப் பிரச்னையில் முக்கியமான முதல் காரணம் புலிகள். இரண்டாவது காரணம் தமிழகத் தலைவர்கள்தான். இந்தியா வெறும் ஒரு நடுவர்தான். அதிலும் பாதிக்கு மேல் விலகிக் கொண்ட, விலக நிர்பந்திக்கப்பட்ட அப்பாவி நடுவர். நீங்கள் வேண்டுமானால், என்னை உயிருடனே தீ வைத்துக் கொல்லலாம். ஆனால், உண்மையை அப்படிக் கொல்ல முடியாது.
(தொடரும்)

Tuesday, August 24, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 8

இந்திய உள் துறை அமைச்சர் : என்ன செய்வது… ஆற்றில் எவ்வளவோ வெள்ளம் பாய்ந்துவிட்டது. இப்போது இந்தியா அப்படி ஒரு முயற்சியை முன் வைத்திருந்தால், சரி… நல்லது, தீவிரவாதிகளை விட்டுவிட்டு அப்பாவிகளை மட்டும் அழைத்து வந்துகொள்ளுங்கள் என்று இலங்கை அரசு சொல்லியிருக்கும். அது எப்படி சாத்தியம்? அது மட்டுமல்லாமல் அந்த முயற்சிக்கு புலிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பார்கள். ஏனென்றால், மக்களைக் கவசமாக வைத்துக் கொண்டுதான் அவர்கள் பதுங்கி இருந்தார்கள். மக்கள் போய்விட்டால் ராணுவம் புலிகளை எளிதில் துவம்சம் செய்துவிட்டிருக்கும். அதனால் இந்த முறை எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது.

ஆயுதப் போராட்டம் வளர்வதற்கு முன்பாகவே இந்தியா பல சமாதான முயற்சிகளை மேற்கொண்டுதான் வந்தது. கச்சத்தீவை விட்டுக் கொடுத்து இலங்கை அரசுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டது. போராளிகள் இயக்கத்துக்கு பயிற்சி கொடுத்து அவர்களிடமும் நன் மதிப்பைப் பெற விரும்பியது. இலங்கையில் பிரச்னை பெரிதானால் இரு தரப்புமே நாம் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று இந்தியா விரும்பியது. ஆனால், என்றைக்கு அண்டை நாட்டு ஆதரவையோ, சொந்த நாட்டு மக்களின் உயிரையோ மதிக்காமல் ஆயுதங்களை நம்பி களத்தில் இறங்கினார்களோ அன்றே அழிவின் விதைகள் ஆழமாக ஊன்றப்பட்டுவிட்டன. இந்தியாவும் சூடுபட்ட பூனையாகத் தன் வாலை ஒடுக்கிக் கொண்டுவிட்டது.

இரு தரப்பினருமே ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். போர் நிறுத்தம் வரவேண்டும் என்றுதான் ஆரம்பம் முதலே இந்தியா சொல்லிவந்தது. யாரும் அதைக் கேட்கவில்லை. இந்தியா என்னதான் செய்ய முடியும். சிங்கள அரசால் மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளாலும் பெரும் இழப்பைச் சந்தித்துவந்த ஈழத் தமிழர்களைப் பார்த்த போது மிகவும் வேதனையாகத்தான் இருந்தது.

அனந்தன் : கடைசி கட்ட போரில் இவ்வளவு வன்முறை தலை விரித்து ஆடியபோது நீங்கள் எதுவுமே செய்யாமல் இருந்தது பெரிய தப்பு இல்லையா..?

இந்திய உள் துறை அமைச்சர் : கடைசி நேரப் போர் எதனால் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது? ஊடகங்கள் எப்படி இதை ஊதிப் பெரிதாக்கின என்பதையெல்லாம் எத்தனை நாள்தான் மறைத்துவைக்க முடியும்? பிரபாகரன் என்ற ஒரு தீவிரவாதியை சிங்கள ராணுவம் சுற்றி வளைத்ததும் அவர்களுடைய சர்வதேச ஊடகச் செல்வாக்கை வைத்து, உலகமே இடிந்து விழுவதுபோல் மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டது. சிங்கள ராணுவம் அப்பாவிகளைக் கொன்று குவிப்பதாக தமிழகப் பத்திரிகைகளில், இணைய தளங்களில் பெரும் பீதி கிளப்பப்பட்டது. இப்படிச் செய்தால் சர்வதேச சமூகம் தலையிட்டு சிங்கள ராணுவத்தைப் பின்வாங்க வைக்கும்; பிரபாகரன் தப்பிவிடலாம் என்று ஒரு தப்புக் கணக்குப் போடப்பட்டது. ஆனால், அது பொய் என்பது தெரிந்ததால் சர்வதேச சமூகம் மவுனம் சாதித்தது. இந்தியாவும் மவுனம் சாதித்தது. ஏன், தமிழகத்தின் முக்கிய தலைவர்களும் உண்மை என்ன என்பது தெரிந்ததால் நாடாளுமன்றத் தேர்தல் தீவிரம் பெற்ற நிலையிலும் அமைதியாக இருந்தனர்.

சிங்கள ராணுவம் போர் விலக்கு பெற்ற பகுதிகளில் குண்டு மழை பொழிந்ததாக பொய்யான பரப்புரைகள் ஈழ ஆதரவு ஊடகங்களால் இடைவிடாது மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உண்மையில் என்ன நடந்தது... பஞ்ச பாண்டவர்கள் போன்ற ஐந்து மருத்துவர்கள் உண்மையை உலகுக்கு எடுத்துரைத்துவிட்டார்கள் அல்லவா..? அப்பாவி மக்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு தப்பிக்கப் பார்க்கும் கயமைதான் நடந்தது. சர்வதேச சமூகம் கருணையுடன் அனுப்பிய நிவாரணப் பொருட்களைக்கூடப் புலிகள் தட்டிப் பறித்து பதுக்கி வைத்திருக்கிறார்கள். இலங்கை அரசு உரிய நிவாரணப் பொருளை தரவில்லை என்று பழி வேறு.

அனந்தன் : போராளிகளைக் கொன்றதில் வேண்டுமானால் நியாயம் இருக்கலாம். ஆனால், அப்பாவிகள் மேல் குண்டு வீசி அவர்கள் சிகிச்சைக்கு வந்த மருத்துவமனையிலும் குண்டு வீசிக் கொன்றதெல்லாம் மிகவும் கொடூரம் அல்லவா..?

இ.உ.அ : போராட்டக் குழுக்களின் தந்திரமே அதுதான். நேருக்கு நேர் நின்று சண்டை போடமாட்டார்கள். வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனை என்று ஒளிந்து கொண்டு தாக்குதல் நடத்துவார்கள். அவர்களைக் கொல்ல வேண்டுமானால் அவர்கள் இருக்கும் இடத்தில்தான் குண்டு வீசியாக வேண்டும். விமானங்கள் தங்களை நோக்கி ஏவுகணை எறியப்படும் இடங்களைக் குறிவைத்துத் தாக்கும். அதற்கு கோவிலும் தெரியாது, மருத்துவமனையும் தெரியாது. மருத்துவமனையில் ஆயுதங்களைக் குவிக்காதீர்கள் என்று சொல்லி எத்தனை செஞ்சிலுவை சங்க மருத்துவர்கள் தங்கள் முகாம்களைக் காலி செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள் தெரியுமா..?

அவ்வளவு ஏன்… இத்தனை நாள் பயந்து கிடந்த மக்கள், விடுதலைப் புலிகளால் தங்களை இனியும் அடக்கி வைக்க முடியாது என்பது தெரிந்ததும் என்ன செய்தார்கள்..? கிணற்றுக்குள் விழுந்து கிடப்பவர் வீசப்படும் கயிறைப் பிடித்துக் கொண்டு சரசரவென மேலேறுவதுபோல் சிங்கள ராணுவத்திடம் அடைக்கலம் தேடி ஓடினார்கள். பாதூகாப்புக் கோட்டைச் சுவரின் செங்கல்கள் ஒவ்வொன்றாக உதிர ஆரம்பித்ததும் எந்தவொரு போராளி இயக்கமும் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத வகையில் தன் மக்களைத் தானே கொல்லும் அநியாயம் அரங்கேறியது. நினைத்துப் பாருங்கள் மணல் மூட்டைகளுக்குப் பின்னால் பதுங்கியிருந்து தாக்கிய போராளிகள் அதற்கு பதிலாக மக்களைக் கேடயமாகப் பிடித்தார்கள். அதுவும் எந்த மக்களுக்காக இயக்கத்தை ஆரம்பித்தார்களோ அந்த மக்களையே கேடயமாக்கிய கொடூரம்.

ராணுவம் பிடியை இறுக்க ஆரம்பித்ததும் பயந்து பின் வாங்கிய புலிகள் போகும் இடத்துக்கெல்லாம் மக்களையும் வலுக்கட்டாயமாக துப்பாக்கி முனையில் மிரட்டி கொண்டு சென்றிருக்கிறார்கள். இல்லை, நாங்கள் உங்களுடன் வரவில்லை. குழிகளில் பதுங்கிக் கொள்கிறோம் என்று அப்பாவி மக்கள் சொன்னபோது அப்படியா… எங்களை விட்டுவிட்டு ராணுவத்திடம் சரணடையப் போகிறீர்களா..? என்று இழித்துப் பேசிவிட்டு பதுங்குகுழியைச் சுற்றி கண்ணி வெடிகளைப் பதித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். தமிழ் பெண்களே… உங்கள் கற்பை சிங்களவனுக்குக் காணிக்கையாக்கப் போகிறீர்களா..? என்று உணர்ச்சிபூர்வமாக பிளாக் மெயில் செய்து வலுக்கட்டாயமாக தங்களோடு இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இவ்வளவு ஏன்… தப்பிக்க முயன்ற பலரை நேருக்கு நேராக சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அதிகார சதுரங்கத்தில் ராஜாவுக்காக சிப்பாய்கள் பலியிடப்படுவது ஒன்றும் வியப்பில்லைதான். விடுதலைப் போராட்டம் ஒன்றில் இப்படியான நிகழ்வு இதுவரை சரித்திரத்தில் இடம்பெற்றதேயில்லை. ஆனால், மக்களைக் கேடயமாகப் பிடிப்பது என்பது விடுதலைப் புலிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. அவர்கள் போரை ஆரம்பித்த அன்றிலிருந்தே அதைத்தான் செய்து வருகிறார்கள். கடைசி காலத்தில் அது கொஞ்சம் துலக்கமாகத் தெரிந்திருக்கிறது. அவ்வளவுதான்.

உண்மையில் இந்தப் போர் தமிழ் மக்களின் சம்மதத்துடன் நடந்த ஒன்றே அல்ல. ஆயுதம் ஏந்திய ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று அவ்வளவுதான். இன்னும் சரியாகச் சொல்வதானால், ஒரு சர்வதேசக் கடத்தல்காரன், விடுதலைப் போராளி என்ற போர்வையில் ஊரை ஏமாற்றி உலையில் போட்டிருக்கிறார். இதுதான் உண்மை. அதனால்தான் தனி நாடு கேட்ட வடக்கு - கிழக்கு பகுதியில் எவ்வளவு தமிழர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு தமிழர்கள், சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தெற்குப் பகுதியில் இதே போர்க் காலகட்டம் முழுவதிலும் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆளை விட்டால் போதும் என்று அயல் நாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டார்கள். வடக்கு - கிழக்கு பகுதியில் இருப்பவர்கள் கூட தாமாக விரும்பி அங்கு இருக்கவில்லை. வேறு வழியில்லாத காரணத்தாலும் பயத்தினாலும்தான் அங்கு இருந்து வந்திருக்கிறார்கள்.

ஆனால், அதையெல்லாம் மறைக்கத்தான் இந்தியா மீது அவதூறு அம்புகள் அடுக்கடுக்காக எய்யப்படுகின்றன.

அனந்தன் : இன்னொரு நாட்டின் இறையாண்மையை மதிப்பதால் தலையிட முடியவில்லை என்று சொன்ன நீங்கள் பங்களாதேஷ் விஷயத்தில் என்ன செய்தீர்கள்...? உங்களால்தானே அது தனி நாடானது. அப்படி நீங்கள் ஈழத்தைப் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்தானே இந்தப் போரே ஆரம்பிக்கப்பட்டது.

இந்திய உள் துறை அமைச்சர் : ரொம்பத் தப்பான கேள்வி இது. கிழக்கு பாகிஸ்தானுக்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் இடையில் நில ரீதியிலான தொடர்ச்சி என்று எதுவுமே கிடையாது. ஒரு தேசம் என்று சொல்ல வேண்டுமானால் அதன் முக்கியமான அம்சம் நில ரீதியிலான தொடர்ச்சிதான். இரண்டுக்கும் இடையில் இன்னொரு நாடு வரவே கூடாது. அப்படி வந்தால் அது காலனி ஆட்சி போன்ற ஒன்றுதான். அதுமட்டுமல்லாமல் ஜின்னா ஒரு தேசத்துக்கு மதம் அடைப்படையாக இருந்தால் போதும் என்று சொன்னார். கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தங்கள் மொழிக்கும் தங்கள் கலாசாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். மதம் இரண்டாம் பட்சம் என்றனர். எனவே, தனியாகப் பிரியவேண்டும் என்று போராடினர். இந்தியா அவர்கள் கோரிக்கையில் இருந்த நியாயத்தைக் கவனத்தில் கொண்டு செயலாற்றியது. ஈழத்தின் கதை அப்படிபட்டதல்லவே. எதை எதனோடு ஒப்பிடுவது என்றொரு விவஸ்தை வேண்டாமா..? தேசம் என்பது கடலை மிட்டாய் அல்ல… கேட்பவர்களுக்கெல்லாம் காக்காய் கடி கடித்துக் கொடுப்பதற்கு.

அனந்தன் : கூட்டாட்சி முறையில் சுய நிர்ணய உரிமை கேட்டு அமைதியான முறையில் போராடியும் அது கிடைக்காததால்தானே தனி நாடு கேட்க வேண்டி வந்தது.

இந்திய உள் துறை அமைச்சர் : என்னவொரு விநோதமான பதில் இது. 50 ரூபாய் கேட்டு அமைதியாகப் போராடினேன். அது கிடைக்கவில்லை. எனவே 500 ரூபாய் கேட்டு அதிரடியாகப் போராடினேன் என்று சொல்வதுபோல் இருக்கிறது. 50 ரூபாய் கொடுக்கவே யோசித்துக் கொண்டிருந்தவரிடம் 500 ரூபாயை அதட்டிக் கேட்டால் எப்படிக் கொடுப்பார்..? இலங்கை அதிபர் ஒரு விஷயத்தை அழகாகச் சொன்னார்… இது சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற பிரச்னையே இல்லை. தேசத்தை நேசிப்பவர்கள், சீர் குலைக்க நினைப்பவர்களுக்கு இடையிலான பிரச்னை.

அதுமட்டுமில்லாமல் இலங்கைல மக்கள் படும் துன்பங்களைப் பார்த்து பொறுக்க முடியாமல், ஏதாவது செய்தாக வேண்டும் என்று ஆத்மார்த்தமான ஆர்வம் காட்டிய ராஜீவ்ஜிக்குக் கிடைத்த பரிசு என்ன என்பது உங்கள் எல்லாருக்குமே நன்கு தெரியும். 1987-ல் இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டிருந்தது. அந்த மக்களுக்கு உணவும் மருந்துப் பொருட்களும் மண்ணெணெயும், ஆடைகளும் ஏற்றிக் கொண்டு 19 இந்திய கப்பல்கள் இலங்கைக்குப் போனது. அதை இலங்கை அரசு தன் எல்லைக்குள் அனுமதிக்கவில்லை. உடனே, அங்கு தவித்த மக்களுக்கு எப்படியும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் போர் விமானங்களின் துணையோடு உணவுப் பொட்டலங்களை சுமந்து சென்று பூமாலை ஆப்பரேஷன் நடத்தப்பட்டது. வெறும் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட்ட செயல் அது. அதோடு போராளிகளுக்கு ஆதரவாக அண்டை நாட்டைப் பகைத்துக்கொண்டு செய்த பெரிய காரியம். அதற்கு என்ன கைமாறு கிடைத்தது..?

இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்று இரு தரப்புக்கும் இசைவான ஒரு நியாயமான ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொடுத்தது. இந்தியாவில் மாநில அரசுக்கு சில அதிகாரங்கள்; மத்திய அரசுக்கு சில அதிகாரங்கள் இருப்பதுபோல் இலங்கையில் ஒரு ஏற்பாடு செய்ய ஆத்மார்த்தமாக ராஜீவ் முயற்சிகள் எடுத்தார். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி தனி மாநிலமாக அறிவிக்கப்படும். இரண்டு தரப்பினரும் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட வேண்டும் என்று நடைமுறை சாத்தியமான ஒரு திட்டத்தை முன்வைத்தார். நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு ஊசி கூட இல்லை… தேனில் குழைத்து லேசான கசப்பு மருந்தைக் கொடுத்தார். ஆனால், கோபம் கொண்ட குழந்தை, மருத்துவரையே கொன்ற கொடூரம்தான் நடந்தது. உலகில் எங்காவது இதைக் கேள்விப்பட்டதுண்டா நீங்கள். எதிரியைவிட்டுவிட்டு மத்யஸ்தம் செய்ய வந்தவரைக் கொன்ற சோகம் எங்காவது நடந்ததுண்டா..?

இந்தியா மீது தொடுக்கப்பட்ட போர் என்றே அதைச் சொல்லலாம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் முன்னாள் பிரதமர் மட்டுமல்ல... அடுத்த பிரதமராக ஆகவிருந்த ராஜீவ் காந்தியை மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்தார்கள். இருந்தும் தியாகத்தின் திருவுருவான அன்னை சோனியா காந்தி தன் கணவனைக் கொன்ற பாவிகளை மன்னித்துதான் வந்திருக்கிறார். ஒரு குடும்பத்தலைவியாக, ஒரு தேசத்தின் அரசியல் தலைவியாக அவர் கருணையே உருவாகத் திகழ்கிறார். இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்பதில் உலகில் இருக்கும் எந்த பிரிவைச் சேர்ந்த ஒருவரைவிடவும் அதிக அக்கறை கொண்டவர்தான் அன்னை சோனியா... இலங்கை பிரச்னை என்பது அவரைப் பொறுத்தவரையில் ஏதோ அண்டை நாட்டுக் கலவரம் அல்ல... அவரை நேரடியாக மிக மோசமாக பாதித்த நிகழ்வும் கூட. ஆனால், அவராலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் இந்த விஷயத்தில் தலையிட முடியும். அதை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
(தொடரும்)

Monday, August 23, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 7

காட்சி - 13

அந்த பிருமாண்ட மாளிகை சூரியனை மறைத்தபடி வானுயர உயர்ந்து நிற்கிறது. அதன் முன்னால் எண்ணற்ற கம்பங்கள் ஊன்றப்பட்டிருக்கின்றன. சில கம்பங்கள் உடைந்து கிடக்கின்றன. சில கம்பங்கள் பாதி பூமியில் புதைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு கம்பத்துக்கு முன்னாலும் சிலர் விறைப்பாக நடந்து வந்து நிற்கின்றனர். தங்கள் கைகளில் இருந்த கொடிகளைக் கம்பத்தில் கட்டுகின்றனர். அவர்கள் கட்டி முடித்த சிறிது நேரத்தில் சங்கொலி கேட்கிறது. உடனே அனைவரும் தத்தமது கொடிகளை ஏற்ற ஆரம்பிக்கின்றனர். சில கொடிகள் கம்பீரமாக பட்டொளி வீசிப் பறக்கின்றன. சில கொடிகள் ஏராளமான ஒட்டு வேலைபாடுகளுடன் இருக்கின்றன. சில கொடிகள் பொத்தல் பொத்தலாக இருக்கின்றன. எனினும் ஒவ்வொரு கம்பத்துக்கு முன்னால் இருக்கும் நபர்களும் தத்தமது கொடிகளை ஏற்றி கம்பீரமாக சல்யூட் அடிக்கின்றனர்.

உள்ளே ஒரு பரந்து விரிந்த அரங்கில் உலக நாடுகளின் மினியேச்சர் வடிவம் தத்ரூபமாக இடம் பெற்றிருக்கிறது. ஒரு பகுதியில் மக்கள் கம்பளி ஆடை உடுத்திக் கொண்டு விறகைக் கூட்டி எரித்து குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பகுதியில் பாலைவன வெய்யிலில் ஒற்றை ஈச்ச மரத்தின் நிழலில் ஒட்டகத்தை அவிழ்த்துவிட்டு களைப்புடன் சிலர் அமர்ந்திருக்கின்றனர். சில இடங்களில் அதி நவீன கட்டடங்களில் கம்ப்யுட்டர் முன் அமர்ந்து கொண்டு விண்வெளிக் கலத்தின் பாகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பகுதியில் ஆதிவாசிகள் இலை தழைகளைக் கட்டிக் கொண்டு ஈட்டியால் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். உலகின் ஒரு பகுதி வெளிச்சத்தில் இருக்கிறது. இன்னொரு பகுதி இருளில் மறைந்திருக்கிறது.

ஒரு பகுதியில் கூச்சலும் குழப்பமும் மிகுதியாகக் கேட்கிறது. இருளும் வெளிச்சமும் கலந்து காணப்படும் அந்தப் பகுதியை குழந்தைகள் கூர்ந்து பார்க்கின்றனர். அது ஈழம்..! மெள்ள மெள்ள புதை மணலில் அழுந்திக் கொண்டிருக்கிறது. இலங்கையும் நீரில் பனிக்கட்டி பாதி முங்கி பாதி மிதந்தபடி இருப்பதுபோல் அமிழ்ந்து அமிழ்ந்து மேலே மிதந்தபடி இருக்கிறது. அங்கு இருக்கும் மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி இங்குமங்கும் ஓடுகின்றனர். பிற பகுதியில் இருக்கும் மக்கள் மங்கலான விளக்கொளியில் காதல் பரிசுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். திராட்சை ரச குப்பிகளை உயர்த்தி சியர்ஸ் சொல்லிக் குடிக்கின்றனர். விமான நிலையங்களில் வாழ்த்துச் சொல்லி வழியனுப்புகின்றனர். ஈஸி சேரில் நன்கு சாய்ந்தபடி தேநீர் அருந்தியபடியே பேப்பர் படிக்கின்றனர். கால் பந்து போட்டிகளை ஆரவாரத்துடன் ரசிக்கின்றனர்.

ஈழத்தில் மனிதர்கள் இங்குமங்கும் ஓடுகிறார்கள். கதறுகிறார்கள். புதைகிறார்கள். ஒவ்வொருவரும் தான் தப்பிப்பதற்காக அடுத்தவரை காலுக்குக் கீழே போட்டு மிதிக்கிறார்கள். அப்படிச் செய்தும் எந்தப் பலன் இன்றி அவர்களும் புதைகிறார்கள். நாற்காலியில் அமர்ந்து மது அருந்தியபடி அதை வேடிக்கை பார்க்கும் சிலர் சிறு கட்டைகளையும் சின்ன கயிறுகளையும் எடுத்துப் போடுகிறார்கள். புதைகுழியில் சிக்கியவர்கள் அதைப் பிடிக்க முயன்று மேலும் குழியில் புதைகிறார்கள். கரையேறும் சிலரையும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு புதைமணலில் வீசுகிறார்கள்.

காட்சி : 14

அனந்தன் : உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு… கத்தியின்றி ரத்தமின்றி நவீன போர் முறையை உலகுக்குக் காட்டிய உத்தமர் காந்தி பிறந்த நாடு… பக்கத்து நாடுகளில் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு உள்நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முயலும் நாடு… உங்களை ஏன் உயிருடன் கொளுத்தக்க்கூடாது?

இந்திய உள் துறை அமைச்சர் : இலங்கை பிரச்னைக்கு இந்தியாதான் காரணம்னு ஒரு விசித்திரமான குற்றச்சாட்டு கொஞ்சகாலமாக முன்வைக்கப்பட்டுவருகிறது. காக்கா உட்காரப் பனம் பழம் விழுந்த கதை மாதிரித்தான் இது. ஒரு மனுஷனோட தலை ஒரு பக்கம் பார்த்துக்கிட்டு இருக்குது. கால் வேறொரு பக்கம் பார்த்துகிட்டு இருக்குது. தலை சொல்ற திசையில நடந்தா கால்ல அடிபடும். கால் போற திசையில போனா தலைல அடிபடும். இந்த விசித்திர மனுஷனோட பிரச்னைக்கு கோக்குமாக்கா இருக்கற அவனோட உடம்புதான் காரணமே ஒழிய பக்கத்துல நடந்து வர்றவன் எப்படி காரணமா இருக்க முடியும்?

இலங்கை, இந்த சிறுபான்மை பெரும்பான்மை பிரச்னையை ஆரம்பத்துல இருந்தே சரியா கையாளலை. இந்தியாவையே எடுத்துக்கோங்களேன். அதுல 29 மாநிலங்கள் இருக்கு. அதாவது 29 இலங்கைகள் இருக்கு. இன்னும் சரியாச் சொல்லணும்னா 29 ஈழங்கள் இருக்கு. எத்தனை மொழி… எத்தனை மதம்… எத்தனை இனம்… எத்தனை சாதிகள்… எல்லாமே எப்படா பிரிஞ்சு போகலாம்னு காத்துக்கிட்டிருக்காங்க. ஆனாலும் இதை நாங்க எவ்வளவு அழகா கட்டிக் காத்துக்கிட்டு வர்றோம் பாத்தீங்களா… அதுக்குக் காரணம் என்ன… அஹிம்சை... பொறுமை…ஆக்கறவனுக்குப் பல நாள் வேலை அழிக்கறவனுக்கு ஒரு நாள் வேலை.

அனந்தன் : இலங்கை இந்தியாவோட இன்னொரு மாநிலம் மாதிரித்தான இருக்குது. போதாத குறையா நிறைய இந்தியர்கள் வேற அங்க இருக்காங்க. மலையகத் தமிழர்களுக்கு அதாவது இந்தியால இருந்து போன தமிழர்களுக்கு ஏற்பட்ட சோகத்தைத் தீர்க்க நீங்க அக்கறை காட்டியிருந்தாலே பிரச்னை அடுத்த கட்டத்துக்கு போயிருக்காதே… பத்து லட்சம் பேர்… நின்னுட்டிருக்கற காலடி நிலம் பிளந்து அப்படியே பாதாளத்துல விழற மாதிரி பத்து லட்சம் பேர் ஒரே ஒரு நாள்ல நாடற்றவர்களாக ஆக்கப்பட்டபோது நீங்க கூப்பிட்டு இப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு தட்டி வெச்சிருந்தா பிரச்னை பெரிசாகியிருக்காதே. சிங்கள அரசு இவ்வளவு வெறித்தனமா நடந்துக்கிட்டதுக்கு உங்களோட ஆதரவுதான முக்கிய காரணமா இருந்திருக்கு.

இந்திய உள் துறை அமைச்சர் : ஒரு இறையாண்மை மிகுந்த நாடு, இன்னொரு இறையாண்மை மிகுந்த நாட்டின் விஷயத்தில் எவ்வளவு தலையிட முடியுமோ அவ்வளவு தலையிட்டிருக்கிறோம். இலங்கை அதிபருடன் ஒப்பந்தம் செய்துக்கிட்டோம். ஐ.நா. சபைல கூடக் குரல் எழுப்பினோம். ஆனா, எதுவுமே முடியலையே…பெரும்பான்மை சிறுபான்மை அப்படிங்கற பிரச்னை உலகத்துல எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்யுது. பெரும்பான்மையின் சம்மதத்தோடு சிறுபான்மையின் நலன்… அதுதான் நடக்கணும். சில விஷயங்கள்ல இவங்க விட்டுக் கொடுக்கணும். பல விஷயங்கள்ல அவங்க புரிஞ்சு நடந்துக்கணும். அது ஒரு பரஸ்பர நல்லெண்ணத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கணும்.

சிங்கள மொழி படிச்சுத்தான் ஆகணும்னு சொன்னாங்களாம். இவங்களுக்குக் கோவம் வந்திருச்சாம். ஏன் ஆங்கிலேயர் ஆட்சில இருந்தபோது அரசு வேலைல சேரணும்னா ஆங்கிலம் தேவைன்னு போய் விழுந்து விழுந்து படிக்கத்தான செஞ்சாங்க. சிங்களம் படிக்கச் சொன்னா படிச்சிட்டுப் போக வேண்டியதுதான. ஆங்கிலம் படிச்சி அழியாத தமிழ் அடையாளம் சிங்களம் படிச்சா அழிஞ்சிடுமா..? அப்படிப் பூஞ்சையா ஒரு அடையாளம் இருக்கும்னா அது அழியறதுல எந்தத் தப்பும் இல்லை.

அதே நேரம் சிங்கள அரசும் அப்பாவி ஒண்ணும் இல்லை. தீவிரவாதிகளை அழிக்கறதை விட்டுட்டு ஒட்டு மொத்த இனத்தையே கொல்றதுங்கறது ரொம்பத் தப்பு. பத்து கெட்டவங்க இருக்காங்கங்கறதுக்காக மத்த 90 அப்பாவிங்களை அழிக்க முற்பட்டது ரொம்பத் தப்பு. இப்ப சீக்கியர்கள் கூட காலிஸ்தான் கேட்டு போராடினாங்க. வளமான வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததும் அவங்க துப்பாக்கியைக் கீழ போட்டுட்டு கலப்பையைத் தூக்கிட்டு வயல்ல இறங்கி பாடுபட ஆரம்பிக்கலையா..? ஒட்டு மொத்த சீக்கியர்களை அழிக்கவா செஞ்சோம். இஸ்லாமியத் தீவிரவாதம் இந்தியால தலைவிரிச்சுத்தான் ஆடுது. அதுக்காக எல்லா இஸ்லாமியர்களையும் கொல்ல ஆரம்பிச்சிட்டோமா என்ன.?

அதிருப்தி குழுவை சமயோசிதமா வழிக்குக் கொண்டுவரணும். ஈழப் பகுதியில வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பிச்சு, போராட்டத்துக்கான காரணங்களை சரி செஞ்சு, போராளிகள் குழுக்களை பலவீனம் அடைய வெச்சு, சுமுகமா தீர்வை கண்டுபிடிச்சிருக்கணும். முள்ளுல விழுந்த சேலையை கிழியாம எடுக்கறதுதான் புத்திசாலித்தனம். அதைத்தான் நாங்க செஞ்சோம். இலங்கைல செய்யலை.

அனந்தன் : அப்போ காஷ்மீர்ல ஏன் பிரச்னை தீரலை? நாகாலாந்துல ஏன் பிரச்னை தீரலை..? வட கிழக்கு மாநிலங்கள்ல ஏன் பிரச்னை இன்னும் தீரலை.

இந்திய உள் துறை அமைச்சர் : ஏன்னா பாகிஸ்தான்ல இருந்து சீனால இருந்து அதை தூண்டி விட்டுட்டு இருக்காங்க. காஷ்மீர் பிரச்னை அப்படிங்கறது காஷ்மீர் மக்களுக்கும் இந்தியாவுக்குமான பிரச்னை இல்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான பிரச்னை. பக்கத்து வீட்டுக்காரன் படுபாவியா வாய்ச்சிட்டா ரொம்பக் கஷ்டம் நண்பரே..? அது அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும்.

அனந்தன் : எங்களுக்கும் உங்க மூலமா அந்த அனுபவம் இருக்கே…

இந்திய உள் துறை அமைச்சர் : என்னது இது இப்படி அபாண்டமா பழி போடறீங்க. பாகிஸ்தான் இந்தியால தலையிடறதுல நூத்துல பத்து பங்குகூட நாங்க உங்க நாட்டு விஷயத்துல தலையிடலையே. நாங்க தலையிடலைங்கறதுதான பெரும்பாலானவங்களோட குற்றச்சாட்டா இருக்கு.

அனந்தன் : ஆனா, போராளிகளுக்கு ஆரம்பத்தில் பண உதவியும் ஆயுதப் பயிற்சியும் தந்தது இந்தியர்கள்தானே… கடைசி யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து வந்திருக்கிறீர்களே…

இந்திய உள் துறை அமைச்சர் : இந்தியாதான் இலங்கையில் போரை நடத்தினதுன்னு கூட அவதூறுப் பிரசாரங்கள் செய்யப்பட்டுவருகின்றன. அது மிகவும் பிழையானது மட்டுமல்ல பயங்கரமான ஒன்றும் கூட. சிங்கள ராணுவத்துக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்கள் என்பது ஐந்து சதவிகிதம் கூட இருக்காது. பெரும்பாலும் ரேடார் கருவிகள் போன்ற துணை ராணுவக்கருவிகள்தான் தரப்பட்டன. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல் என எத்தனையோ நாடுகளில் இருந்து ஏராளமான ஆயுதங்களை இலங்கை அரசு வாங்கி இருக்கிறது. தெற்காசிய நாடுகள் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துமே ஒவ்வொரு துறையிலும் தமக்குள் பரஸ்பரம் பரிமாற்றம் செய்து கொள்வது என்பது மிகவும் இயல்பான ஒரு விஷயம்தான். மருத்துவத்துறை, கல்வித்துறை, விவசாயத்துறை என ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நாடுகளிலும் என்னென்ன முன்னேற்றங்கள் வந்துள்ளன... நம் நாட்டுக்கு என்னென்ன தேவை என்ற அளவில் இத்தகைய பரிமாற்றங்கள் நடப்பது இயல்புதான். ராணுவத் துறையிலும் அப்படியான பரஸ்பர உதவிகள் செய்து கொள்ளப்படுவதுண்டு. அதுவும் போக ஒரு நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கும்போது உலக நாடுகள் அதை அடக்க பரஸ்பரம் உதவிக் கொள்வது மிகவும் அவசியம். அந்த வகைலதான் இலங்கை ராணுவத்துக்கு சில உதவிகள் செய்து தந்தோம்.

அனந்தன் : ஆனால், ஆரம்பத்துல நீங்க போராட்டக் குழுக்களுக்குத்தான ஆதரவு கொடுத்தீங்க…?

இந்திய உள் துறை அமைச்சர் : இலங்கைப் போராளிகளுக்கு இந்தியா கொடுத்த பயிற்சி என்பது மிகவும் வேடிக்கையானது. பெரும்பாலும் நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி போன்ற உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பயிற்சிகள்தான் வழங்கப்பட்டன. கொடுத்த பணமும் கூட யானைப் பசிக்கு சோளப்பொரி அளவுக்குத்தான் இருந்தது. அதுவும் போக அப்போது பிரச்னை இந்த அளவுக்கு வளரவில்லை.

இந்திய வம்சாவளியினருக்கு ஏற்பட்ட இன்னலைப் பார்த்து தான் இலங்கை விஷயத்தில் இந்தியா தலையிடவே ஆரம்பித்தது. 1958ல கொழும்புல தமிழர்களுக்கு எதிரா பெரும் கலவரம் வெடித்தபோது நிறைய கப்பல்களை அனுப்பி அங்க இருந்த தமிழர்களை பத்திரமா யாழ்பாணத்துக்கு கொண்டு வந்து சேர்த்தோம்.

அனந்தன் : இப்ப நாலாம் ஈழப் போர்ல சிக்கின மக்களை அப்படி ஏன் காப்பாத்த முயற்சி செய்யலை..


(தொடரும்)

Sunday, August 22, 2010

புத்தம் சரணம் கச்சாமி-6

காட்சி - 13
அந்த பிருமாண்ட மாளிகை சூரியனை மறைத்தபடி வானுயர உயர்ந்து நிற்கிறது. அதன் முன்னால் எண்ணற்ற கம்பங்கள் ஊன்றப்பட்டிருக்கின்றன. சில கம்பங்கள் உடைந்து கிடக்கின்றன. சில கம்பங்கள் பாதி பூமியில் புதைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு கம்பத்துக்கு முன்னாலும் சிலர் விறைப்பாக நடந்து வந்து நிற்கின்றனர். தங்கள் கைகளில் இருந்த கொடிகளைக் கம்பத்தில் கட்டுகின்றனர். அவர்கள் கட்டி முடித்த சிறிது நேரத்தில் சங்கொலி கேட்கிறது. உடனே அனைவரும் தத்தமது கொடிகளை ஏற்ற ஆரம்பிக்கின்றனர். சில கொடிகள் கம்பீரமாக பட்டொளி வீசிப் பறக்கின்றன. சில கொடிகள் ஏராளமான ஒட்டு வேலைபாடுகளுடன் இருக்கின்றன. சில கொடிகள் பொத்தல் பொத்தலாக இருக்கின்றன. எனினும் ஒவ்வொரு கம்பத்துக்கு முன்னால் இருக்கும் நபர்களும் தத்தமது கொடிகளை ஏற்றி கம்பீரமாக சல்யூட் அடிக்கின்றனர்.
உள்ளே ஒரு பரந்து விரிந்த அரங்கில் உலக நாடுகளின் மினியேச்சர் வடிவம் தத்ரூபமாக இடம் பெற்றிருக்கிறது. ஒரு பகுதியில் மக்கள் கம்பளி ஆடை உடுத்திக் கொண்டு விறகைக் கூட்டி எரித்து குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பகுதியில் பாலைவன வெய்யிலில் ஒற்றை ஈச்ச மரத்தின் நிழலில் ஒட்டகத்தை அவிழ்த்துவிட்டு களைப்புடன் சிலர் அமர்ந்திருக்கின்றனர். சில இடங்களில் அதி நவீன கட்டடங்களில் கம்ப்யுட்டர் முன் அமர்ந்து கொண்டு விண்வெளிக் கலத்தின் பாகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பகுதியில் ஆதிவாசிகள் இலை தழைகளைக் கட்டிக் கொண்டு ஈட்டியால் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். உலகின் ஒரு பகுதி வெளிச்சத்தில் இருக்கிறது. இன்னொரு பகுதி இருளில் மறைந்திருக்கிறது.
ஒரு பகுதியில் கூச்சலும் குழப்பமும் மிகுதியாகக் கேட்கிறது. இருளும் வெளிச்சமும் கலந்து காணப்படும் அந்தப் பகுதியை குழந்தைகள் கூர்ந்து பார்க்கின்றனர். அது ஈழம்..! மெள்ள மெள்ள புதை மணலில் அழுந்திக் கொண்டிருக்கிறது. இலங்கையும் நீரில் பனிக்கட்டி பாதி முங்கி பாதி மிதந்தபடி இருப்பதுபோல் அமிழ்ந்து அமிழ்ந்து மேலே மிதந்தபடி இருக்கிறது. அங்கு இருக்கும் மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி இங்குமங்கும் ஓடுகின்றனர். பிற பகுதியில் இருக்கும் மக்கள் மங்கலான விளக்கொளியில் காதல் பரிசுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். திராட்சை ரச குப்பிகளை உயர்த்தி சியர்ஸ் சொல்லிக் குடிக்கின்றனர். விமான நிலையங்களில் வாழ்த்துச் சொல்லி வழியனுப்புகின்றனர். ஈஸி சேரில் நன்கு சாய்ந்தபடி தேநீர் அருந்தியபடியே பேப்பர் படிக்கின்றனர். கால் பந்து போட்டிகளை ஆரவாரத்துடன் ரசிக்கின்றனர்.
ஈழத்தில் மனிதர்கள் இங்குமங்கும் ஓடுகிறார்கள். கதறுகிறார்கள். புதைகிறார்கள். ஒவ்வொருவரும் தான் தப்பிப்பதற்காக அடுத்தவரை காலுக்குக் கீழே போட்டு மிதிக்கிறார்கள். அப்படிச் செய்தும் எந்தப் பலன் இன்றி அவர்களும் புதைகிறார்கள். நாற்காலியில் அமர்ந்து மது அருந்தியபடி அதை வேடிக்கை பார்க்கும் சிலர் சிறு கட்டைகளையும் சின்ன கயிறுகளையும் எடுத்துப் போடுகிறார்கள். புதைகுழியில் சிக்கியவர்கள் அதைப் பிடிக்க முயன்று மேலும் குழியில் புதைகிறார்கள். கரையேறும் சிலரையும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு புதைமணலில் வீசுகிறார்கள்.
காட்சி : 14
அனந்தன் : உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு… கத்தியின்றி ரத்தமின்றி நவீன போர் முறையை உலகுக்குக் காட்டிய உத்தமர் காந்தி பிறந்த நாடு… பக்கத்து நாடுகளில் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு உள்நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முயலும் நாடு… உங்களை ஏன் உயிருடன் கொளுத்தக்க்கூடாது?
இந்திய உள் துறை அமைச்சர் : இலங்கை பிரச்னைக்கு இந்தியாதான் காரணம்னு ஒரு விசித்திரமான குற்றச்சாட்டு கொஞ்சகாலமாக முன்வைக்கப்பட்டுவருகிறது. காக்கா உட்காரப் பனம் பழம் விழுந்த கதை மாதிரித்தான் இது. ஒரு மனுஷனோட தலை ஒரு பக்கம் பார்த்துக்கிட்டு இருக்குது. கால் வேறொரு பக்கம் பார்த்துகிட்டு இருக்குது. தலை சொல்ற திசையில நடந்தா கால்ல அடிபடும். கால் போற திசையில போனா தலைல அடிபடும். இந்த விசித்திர மனுஷனோட பிரச்னைக்கு கோக்குமாக்கா இருக்கற அவனோட உடம்புதான் காரணமே ஒழிய பக்கத்துல நடந்து வர்றவன் எப்படி காரணமா இருக்க முடியும்?
இலங்கை, இந்த சிறுபான்மை பெரும்பான்மை பிரச்னையை ஆரம்பத்துல இருந்தே சரியா கையாளலை. இந்தியாவையே எடுத்துக்கோங்களேன். அதுல 29 மாநிலங்கள் இருக்கு. அதாவது 29 இலங்கைகள் இருக்கு. இன்னும் சரியாச் சொல்லணும்னா 29 ஈழங்கள் இருக்கு. எத்தனை மொழி… எத்தனை மதம்… எத்தனை இனம்… எத்தனை சாதிகள்… எல்லாமே எப்படா பிரிஞ்சு போகலாம்னு காத்துக்கிட்டிருக்காங்க. ஆனாலும் இதை நாங்க எவ்வளவு அழகா கட்டிக் காத்துக்கிட்டு வர்றோம் பாத்தீங்களா… அதுக்குக் காரணம் என்ன… அஹிம்சை... பொறுமை…ஆக்கறவனுக்குப் பல நாள் வேலை அழிக்கறவனுக்கு ஒரு நாள் வேலை.
அனந்தன் : இலங்கை இந்தியாவோட இன்னொரு மாநிலம் மாதிரித்தான இருக்குது. போதாத குறையா நிறைய இந்தியர்கள் வேற அங்க இருக்காங்க. மலையகத் தமிழர்களுக்கு அதாவது இந்தியால இருந்து போன தமிழர்களுக்கு ஏற்பட்ட சோகத்தைத் தீர்க்க நீங்க அக்கறை காட்டியிருந்தாலே பிரச்னை அடுத்த கட்டத்துக்கு போயிருக்காதே… பத்து லட்சம் பேர்… நின்னுட்டிருக்கற காலடி நிலம் பிளந்து அப்படியே பாதாளத்துல விழற மாதிரி பத்து லட்சம் பேர் ஒரே ஒரு நாள்ல நாடற்றவர்களாக ஆக்கப்பட்டபோது நீங்க கூப்பிட்டு இப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு தட்டி வெச்சிருந்தா பிரச்னை பெரிசாகியிருக்காதே. சிங்கள அரசு இவ்வளவு வெறித்தனமா நடந்துக்கிட்டதுக்கு உங்களோட ஆதரவுதான முக்கிய காரணமா இருந்திருக்கு.
இந்திய உள் துறை அமைச்சர் : ஒரு இறையாண்மை மிகுந்த நாடு, இன்னொரு இறையாண்மை மிகுந்த நாட்டின் விஷயத்தில் எவ்வளவு தலையிட முடியுமோ அவ்வளவு தலையிட்டிருக்கிறோம். இலங்கை அதிபருடன் ஒப்பந்தம் செய்துக்கிட்டோம். ஐ.நா. சபைல கூடக் குரல் எழுப்பினோம். ஆனா, எதுவுமே முடியலையே…பெரும்பான்மை சிறுபான்மை அப்படிங்கற பிரச்னை உலகத்துல எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்யுது. பெரும்பான்மையின் சம்மதத்தோடு சிறுபான்மையின் நலன்… அதுதான் நடக்கணும். சில விஷயங்கள்ல இவங்க விட்டுக் கொடுக்கணும். பல விஷயங்கள்ல அவங்க புரிஞ்சு நடந்துக்கணும். அது ஒரு பரஸ்பர நல்லெண்ணத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கணும்.
சிங்கள மொழி படிச்சுத்தான் ஆகணும்னு சொன்னாங்களாம். இவங்களுக்குக் கோவம் வந்திருச்சாம். ஏன் ஆங்கிலேயர் ஆட்சில இருந்தபோது அரசு வேலைல சேரணும்னா ஆங்கிலம் தேவைன்னு போய் விழுந்து விழுந்து படிக்கத்தான செஞ்சாங்க. சிங்களம் படிக்கச் சொன்னா படிச்சிட்டுப் போக வேண்டியதுதான. ஆங்கிலம் படிச்சி அழியாத தமிழ் அடையாளம் சிங்களம் படிச்சா அழிஞ்சிடுமா..? அப்படிப் பூஞ்சையா ஒரு அடையாளம் இருக்கும்னா அது அழியறதுல எந்தத் தப்பும் இல்லை.
அதே நேரம் சிங்கள அரசும் அப்பாவி ஒண்ணும் இல்லை. தீவிரவாதிகளை அழிக்கறதை விட்டுட்டு ஒட்டு மொத்த இனத்தையே கொல்றதுங்கறது ரொம்பத் தப்பு. பத்து கெட்டவங்க இருக்காங்கங்கறதுக்காக மத்த 90 அப்பாவிங்களை அழிக்க முற்பட்டது ரொம்பத் தப்பு. இப்ப சீக்கியர்கள் கூட காலிஸ்தான் கேட்டு போராடினாங்க. வளமான வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததும் அவங்க துப்பாக்கியைக் கீழ போட்டுட்டு கலப்பையைத் தூக்கிட்டு வயல்ல இறங்கி பாடுபட ஆரம்பிக்கலையா..? ஒட்டு மொத்த சீக்கியர்களை அழிக்கவா செஞ்சோம். இஸ்லாமியத் தீவிரவாதம் இந்தியால தலைவிரிச்சுத்தான் ஆடுது. அதுக்காக எல்லா இஸ்லாமியர்களையும் கொல்ல ஆரம்பிச்சிட்டோமா என்ன.?
அதிருப்தி குழுவை சமயோசிதமா வழிக்குக் கொண்டுவரணும். ஈழப் பகுதியில வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பிச்சு, போராட்டத்துக்கான காரணங்களை சரி செஞ்சு, போராளிகள் குழுக்களை பலவீனம் அடைய வெச்சு, சுமுகமா தீர்வை கண்டுபிடிச்சிருக்கணும். முள்ளுல விழுந்த சேலையை கிழியாம எடுக்கறதுதான் புத்திசாலித்தனம். அதைத்தான் நாங்க செஞ்சோம். இலங்கைல செய்யலை.
அனந்தன் : அப்போ காஷ்மீர்ல ஏன் பிரச்னை தீரலை? நாகாலாந்துல ஏன் பிரச்னை தீரலை..? வட கிழக்கு மாநிலங்கள்ல ஏன் பிரச்னை இன்னும் தீரலை.
இந்திய உள் துறை அமைச்சர் : ஏன்னா பாகிஸ்தான்ல இருந்து சீனால இருந்து அதை தூண்டி விட்டுட்டு இருக்காங்க. காஷ்மீர் பிரச்னை அப்படிங்கறது காஷ்மீர் மக்களுக்கும் இந்தியாவுக்குமான பிரச்னை இல்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான பிரச்னை. பக்கத்து வீட்டுக்காரன் படுபாவியா வாய்ச்சிட்டா ரொம்பக் கஷ்டம் நண்பரே..? அது அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும்.
அனந்தன் : எங்களுக்கும் உங்க மூலமா அந்த அனுபவம் இருக்கே…
இந்திய உள் துறை அமைச்சர் : என்னது இது இப்படி அபாண்டமா பழி போடறீங்க. பாகிஸ்தான் இந்தியால தலையிடறதுல நூத்துல பத்து பங்குகூட நாங்க உங்க நாட்டு விஷயத்துல தலையிடலையே. நாங்க தலையிடலைங்கறதுதான பெரும்பாலானவங்களோட குற்றச்சாட்டா இருக்கு.
அனந்தன் : ஆனா, போராளிகளுக்கு ஆரம்பத்தில் பண உதவியும் ஆயுதப் பயிற்சியும் தந்தது இந்தியர்கள்தானே… கடைசி யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து வந்திருக்கிறீர்களே…
இந்திய உள் துறை அமைச்சர் : இந்தியாதான் இலங்கையில் போரை நடத்தினதுன்னு கூட அவதூறுப் பிரசாரங்கள் செய்யப்பட்டுவருகின்றன. அது மிகவும் பிழையானது மட்டுமல்ல பயங்கரமான ஒன்றும் கூட. சிங்கள ராணுவத்துக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்கள் என்பது ஐந்து சதவிகிதம் கூட இருக்காது. பெரும்பாலும் ரேடார் கருவிகள் போன்ற துணை ராணுவக்கருவிகள்தான் தரப்பட்டன. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல் என எத்தனையோ நாடுகளில் இருந்து ஏராளமான ஆயுதங்களை இலங்கை அரசு வாங்கி இருக்கிறது. தெற்காசிய நாடுகள் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துமே ஒவ்வொரு துறையிலும் தமக்குள் பரஸ்பரம் பரிமாற்றம் செய்து கொள்வது என்பது மிகவும் இயல்பான ஒரு விஷயம்தான். மருத்துவத்துறை, கல்வித்துறை, விவசாயத்துறை என ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நாடுகளிலும் என்னென்ன முன்னேற்றங்கள் வந்துள்ளன... நம் நாட்டுக்கு என்னென்ன தேவை என்ற அளவில் இத்தகைய பரிமாற்றங்கள் நடப்பது இயல்புதான். ராணுவத் துறையிலும் அப்படியான பரஸ்பர உதவிகள் செய்து கொள்ளப்படுவதுண்டு. அதுவும் போக ஒரு நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கும்போது உலக நாடுகள் அதை அடக்க பரஸ்பரம் உதவிக் கொள்வது மிகவும் அவசியம். அந்த வகைலதான் இலங்கை ராணுவத்துக்கு சில உதவிகள் செய்து தந்தோம்.
அனந்தன் : ஆனால், ஆரம்பத்துல நீங்க போராட்டக் குழுக்களுக்குத்தான ஆதரவு கொடுத்தீங்க…?
இந்திய உள் துறை அமைச்சர் : இலங்கைப் போராளிகளுக்கு இந்தியா கொடுத்த பயிற்சி என்பது மிகவும் வேடிக்கையானது. பெரும்பாலும் நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி போன்ற உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பயிற்சிகள்தான் வழங்கப்பட்டன. கொடுத்த பணமும் கூட யானைப் பசிக்கு சோளப்பொரி அளவுக்குத்தான் இருந்தது. அதுவும் போக அப்போது பிரச்னை இந்த அளவுக்கு வளரவில்லை.
இந்திய வம்சாவளியினருக்கு ஏற்பட்ட இன்னலைப் பார்த்து தான் இலங்கை விஷயத்தில் இந்தியா தலையிடவே ஆரம்பித்தது. 1958ல கொழும்புல தமிழர்களுக்கு எதிரா பெரும் கலவரம் வெடித்தபோது நிறைய கப்பல்களை அனுப்பி அங்க இருந்த தமிழர்களை பத்திரமா யாழ்பாணத்துக்கு கொண்டு வந்து சேர்த்தோம்.
அனந்தன் : இப்ப நாலாம் ஈழப் போர்ல சிக்கின மக்களை அப்படி ஏன் காப்பாத்த முயற்சி செய்யலை..
இந்திய உள் துறை அமைச்சர் : என்ன செய்யறது… ஆற்றில் எவ்வளவோ வெள்ளம் பாய்ந்துவிட்டது. இப்போது இந்தியா அப்படி ஒரு முயற்சியை முன் வைத்திருந்தால், சரி… நல்லது, தீவிரவாதிகளை விட்டுவிட்டு அப்பாவிகளை மட்டும் அழைத்து வந்துகொள்ளுங்கள் என்று இலங்கை அரசு சொல்லும். அது எப்படி சாத்தியம்? அது மட்டுமல்லாமல் அந்த முயற்சிக்கு புலிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பார்கள். ஏனென்றால், மக்களைக் கவசமாக வைத்துக் கொண்டுதான் அவர்கள் பதுங்கி இருந்தார்கள். மக்கள் போய்விட்டால் ராணுவம் புலிகளை எளிதில் துவம்சம் செய்துவிட்டிருக்கும். அதனால் இந்த முறை எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது.
ஆயுதப் போராட்டம் வளர்வதற்கு முன்பாகவே இந்தியா பல சமாதான முயற்சிகளை மேற்கொண்டுதான் வந்தது. கச்சத்தீவை விட்டுக் கொடுத்து இலங்கை அரசுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டது. போராளிகள் இயக்கத்துக்கு பயிற்சி கொடுத்து அவர்களிடமும் நன் மதிப்பைப் பெற விரும்பியது. இலங்கையில் பிரச்னை பெரிதானால் இரு தரப்புமே நாம் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று இந்தியா விரும்பியது. ஆனால், என்றைக்கு அண்டை நாட்டு ஆதரவையோ, சொந்த நாட்டு மக்களின் உயிரையோ மதிக்காமல் ஆயுதங்களை நம்பி களத்தில் இறங்கினார்களோ அன்றே அழிவின் விதைகள் ஆழமாக ஊன்றப்பட்டுவிட்டன. இந்தியாவும் சூடுபட்ட பூனையாகத் தன் வாலை ஒடுக்கிக் கொண்டுவிட்டது.
இரு தரப்பினருமே ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். போர் நிறுத்தம் வரவேண்டும் என்றுதான் ஆரம்பம் முதலே இந்தியா சொல்லிவந்தது. யாரும் அதைக் கேட்கவில்லை. இந்தியா என்னதான் செய்ய முடியும். சிங்கள அரசால் மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளாலும் பெரும் இழப்பைச் சந்தித்துவந்த ஈழத் தமிழர்களைப் பார்த்த போது மிகவும் வேதனையாகத்தான் இருந்தது.
(தொடரும்)

Thursday, August 19, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 5

காட்சி - 11

ரியாலிட்டி ஷோவின் உண்மையான நோக்கத்தைப் போராளிகள் விளக்குகிறார்கள்

அனந்தன் : உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒருவர் தீ வைத்துக் கொல்லப்படுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்யப் போகிறோம். தீக்குளித்த காலம் மலையேறிவிட்டது. இனி தீ வைப்பு காலம்.

(கடத்திக் கொண்டு வரப்பட்டவர்கள் பயத்தில் உறைந்துபோய் அமர்ந்திருக்கிறார்கள்).

அனந்தன் : நீல அலைகள் வந்து உரசும் இலங்கையின் வெண்மணல் கடலோரங்களில் கேட்கும் கதறல்களைப் போலவே இங்கு நீங்கள் கேட்கப் போகும் கதறலும் நிஜமானவை. கோயில் பிரகாரங்களிலும் பள்ளிக்கூடச் சுவர்களிலும் சிதறிய ரத்தத்தைப் போலவே இங்கு சிந்தப்படும் ரத்தமும் நிஜமானவை. இது நீங்கள் பார்க்கத் தவறிய நெடுந்தொடரின் சில காட்சிகள். படிக்கத் தவறிய நாவலின் சில பக்கங்கள். கேட்கத் தவறிய பாடலின் சில வரிகள். இவற்றை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். படித்திருக்க வேண்டும். கேட்டிருக்க வேண்டும். ஆனால், நீங்களோ கலை இரவுக் கொண்டாட்டங்களிலும் திரைப்பட இசை நாடா வெளியீட்டு விழாக்களிலும் மூழ்கிக் கிடந்தீர்கள். அங்கே மருத்துவமனைகளில் குண்டுகள் வீசப்பட்டபோது நீங்கள் மானாட மயிலாட என்று கூத்தடித்தீர்கள். கருத்தடை மாத்திரைகள் வலுக்காட்டாயமாக திணிக்கப்பட்டு எம் இனப் பெண்கள் கற்பழிக்கப்பட்டபோது ஊரறிந்த வேசிகளின் இல்லாத கற்பைக் காப்பாற்ற தெருவில் இறங்கிக் கொடி பிடித்தீர்கள்.

அரசியல்வாதிகள், காவல் துறையினர், நீதிமான்கள், பத்திரிகையாளர்கள், திரைப்படத்துறையினர் என அனைவருக்கும் எல்லாமும் தெரிந்திருந்தன. ஆனால், அவர்கள் தமக்கு சாதகமான உண்மைகளை மட்டும் முன்வைத்தனர். பொய்யை விட அபாயமானது அரை உண்மை. இன்று உங்கள் முன்னால் முழு உண்மை முதன் முதலாக வைக்கப்பட இருக்கிறது. அதற்காகத்தான் இலங்கை பிரச்னையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு பிரதிநிதிகளையும் உங்கள் முன் அழைத்து வந்திருக்கிறோம்.ஒவ்வொருவரும் திரைமறைவில் நடந்த விஷயங்கள் பற்றியும் பிரச்னையின் மூல காரணம் பற்றியும் பேசுவார்கள். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பொதுவாக ஒருவரைக் கைது செய்வதானால், அவர் செய்த குற்றத்தை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறையைத்தான் சார்ந்தது. ஆனால், இந்த பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்படியோ கைது செய்யப்பட்டவர் தான் தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபித்தாக வேண்டும். அதே விதிதான் இங்கும் அமல்படுத்தப்படப் போகிறது. இங்கு இருக்கும் அனைவரும் அவர்களை ஏன் தீ வைத்துக் கொல்லக்கூடாது என்ற காரணத்தை அவர்களே முன்வைத்தாக வேண்டும். யார் உண்மையை பெருமளவுக்கு மறைத்திருக்கிறர்கள்… யார் மிகப் பெரிய குற்றவாளி என்பதை மக்கள் ஆன்லைன், எஸ்.எம்.எஸ். மூலம் தீர்மானிக்கவேண்டும். யார் குற்றவாளி என்று சர்வதேச சமூகம் தீர்ப்பளிக்கிறதோ அவரை மற்றவர்கள் உங்கள் கண் முன்பாக தீ வைத்துக் கொல்வார்கள். இதுதான் நிகழ்ச்சியின் வடிவம்.

வேறு எந்த சேனலுக்கும் தாவி விடாதீர்கள் என்றெல்லாம் நாங்கள் கேட்கப் போவதில்லை. அப்படிப் போகவேண்டும் என்று நீங்கள் விரும்பினாலும் அது உங்களால் முடியாது. ஏனென்றால், இந்தத் தொலைகாட்சி சேனலை மட்டுமல்ல வேறு எந்தத் தொலைக்கட்சியிலும் வேறு எதுவும் பார்க்க முடியாதபடி எல்லாவற்றையும் செயலிழக்கச் செய்துவிட்டிருக்கிறோம். நீங்கள் இதைப் பார்த்தாக வேண்டும். இதுவரை நீங்கள் பார்க்கத் தவறியதற்கான பரிகாரமாக நீங்கள் இதை மட்டுமே பார்த்தாக வேண்டும்.

காட்சி - 12

ஒட்டு மொத்த உலகின் கவனமும் இந்த நிகழ்ச்சி மீது குவிகிறது. கடத்தப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது தரப்பை முன் வைக்கிறார்கள் (முதலில் ஐ.நா. செயலர்)

ஐ.நா. செயலர் : இந்தப் பிரச்னையில் எங்களை எதற்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் என்று உண்மையிலேயே தெரியவில்லை. தயவு செய்து எங்கள் மீதான குற்றச்சாட்டை முதலில் சொல்லுங்கள்.

அனந்தன் : இலங்கையில் கண் முன்னே ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியபோது, ஆயிரம் ஆண்டுகள் கழித்து உருகப் போகும் பனிப் பாறைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டுவந்ததற்கு… மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மீது கொத்து குண்டுகள் வீசப்பட்டபோது மவுனமாக அதைப் பார்த்து ரசித்து வந்ததற்கு. பின் வாசல் வழியே பேரழிவு ஆயுதங்களை விற்றுவிட்டு முன் வாசல் வழியே உலர் உணவுப் பொட்டலங்களை அனுப்பிக் கொண்டிருந்ததற்கு. ஆக்ஸிஜன் குழாய் பொருத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு நோயாளியின் மூச்சு முட்டல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததற்கு… இன்னும் சொல்லப்போனால், அந்த ஆக்ஸிஜன் சிலிண்டரின் வால்வை ரகசியமாக மூடிய குற்றத்துக்கும் சேர்த்து உங்களை கூண்டில் ஏற்றி விசாரிக்க விரும்புகிறோம்.

ஐ.நா. செயலர் : விசித்திரமாக இருக்கிறது இந்த வழக்கு. ஊரின் எங்கோ ஒரு மூலையில் தவறு நடந்தால் நீதி கேட்டு முறையிட வேண்டிய ஒரு நபர்தான் நீதிபதி. அவரிடம் நடந்ததை ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னால், நடுநிலையாக அவர் ஒரு தீர்ப்பைச் சொல்லுவார். ஒரு நீதிபதியால் இவ்வளவுதான் முடியும். அந்த தீர்ப்பை அமல்படுத்தும் அதிகாரம் கூட அவருக்குக் கிடையாது. அப்படிப்பட்ட நிலையில், நீதிபதி ஒருவரைப் பார்த்து ஊரின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் பிரச்னைக்கு நீதான் காரணம் என்று குற்றம் சுமத்துவதுபோல் இருக்கிறது நீங்கள் செய்வது.

உண்மையில் ஒரு நாட்டின் இறையாண்மை இன்னொரு நாட்டினால் பாதிப்புக்கு உள்ளானால்தான் ஐ.நா.சபை தலையிட்டுத் தீர்த்துவைக்க முடியும். உள்நாட்டுக் கலவரத்தை அல்லது சம்பந்தப்பட்ட இரு நாடுகள் ஒரு பிரச்னையை பொது அரங்கில் விவாதிக்கத் தயாராக இல்லையென்றால் எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது.

அனந்தன் : நாட்டின் ஒரு பிரிவு மக்கள் இன்னொரு பிரிவினரால் அடக்கி ஒடுக்கப்பட்டால் நீங்கள் எதுவுமே செய்ய மாட்டீர்களா..? உலகம் முழுவதிலும் அமைதி என்பதுதானே ஐ.நா. கொடியில் இடம்பெற்றுள்ள ஆலிவ் இலைகள் சொல்லும் செய்தி…

ஐ.நா. செயலர் : ஆமாம்.

அனந்தன் : அதர்மம் எங்கு தலை தூக்கினாலும் ஐ.நா. அவதாரம் எடுத்து அதை அழிப்பதுதானே முறை.

ஐ.நா. செயலர் : அதுவும் உண்மைதான்.

அனந்தன் : இதில் இறையாண்மை குறித்த கேள்வி எங்கு வருகிறது. ஒரு மனிதன் மனிதனாக நடந்து கொள்ளும் வரைதானே அவனுக்கு அதற்கான மரியாதை கொடுக்க முடியும். அவன் தவறு செய்து குற்றவாளியாகிவிட்டால் மனிதனுக்கான மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையே… ஒரு அரசு தன் மக்களை அமைதியாக வாழ வழி செய்து தரும்போதுதான் அதற்கு இறையாண்மை இருக்கும். அது தன் கடமையில் இருந்து தவறிவிட்டால் அதைத் திருத்த வேண்டியது ஐ.நா.வின் பொறுப்பு தானே.

ஐ.நா. செயலர் : கோட்பாட்டு அளவில் இது என்னவோ உண்மைதான். ஆனால், நடைமுறையில் அது அவ்வளவு எளிதல்ல. ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் குடும்பத் தலைவனுக்குத்தான் கட்டுப்பட்டவர்கள். அவர்தான் அவர்களுக்கான நல்லது கெட்டதைப் பார்த்துச் செய்து தரவேண்டும். பஞ்சாயத்துத் தலைவருக்கு குடும்பத்தலைவரைவிட அதிகாரம் உண்டுதான். ஆனால், குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் சம்மதம் இல்லாமல் குடும்ப விஷயத்தில் தலையிட முடியாது. ஒரு நாட்டில் நடக்கும் சிறுபான்மை, பெரும்பான்மை சண்டை என்பது குடும்பத்தில் நடக்கும் கணவன் மனைவி சண்டையைப் போன்றது. தான் சரியாக மதிக்கப்படவில்லை என்று நினைக்கும் மனைவிக்கு பிரிந்து செல்ல உரிமையும் உண்டு. பிரியவிடாமல் தடுத்து தக்க வைக்கும் அதிகாரம் கணவனுக்கு உண்டு. இருவர் பக்கத்திலுமே அவரவருக்கான நியாயங்கள், தர்மங்கள் இருக்கும். இந்தக் குடும்பத் தகராறில் ஒரு பஞ்சாயத்து தலைவரால் என்னதான் செய்ய முடியும். சண்டை போடாம சேர்ந்து வாழுங்க என்று அறிவுரை சொல்ல மட்டுமே முடியும். அதைத்தான் செய்தோம்.

சமமா நடத்தப்படலைன்னு நினைக்கற ஒரு பிரிவினருக்கு தங்களோட அடையாளத்தை தக்க வெச்சுக்கவும் யார் தங்களை ஆளணும்னு தீர்மானிக்கற உரிமையும் நிச்சயம் உண்டு. அதே மாதிரி ஒரு தேசத்துக்கு அதனோட இறையாண்மை மற்றும் ஒற்றுமையை எப்பாடுபட்டாவது கட்டிக் காப்பாத்தற உரிமையும் உண்டு. இலங்கை விஷயத்துல யார் பக்கம் சரின்னு எங்களுக்கே ஒண்ணுமே புரியலையே… ரொம்பவும் குழம்பித்தான் இருக்கோம். ரெண்டு பிரிவினரும் ஆயுதத்தைக் கீழ போடுங்க. சேர்ந்து வாழுங்கன்னுதான் சொன்னோம். அந்த நம்பிக்கைலதான் நல்லெண்ணக் குழுக்களை அனுப்பினோம். காயம் பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தோம். அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க ஏற்பாடு செய்தோம். போர் நிறுத்தம் ஏற்பட மத்தியஸ்தம் செய்து பார்த்தோம்.

அனந்தன் : கூடவே ஆயுதங்களையும் அது வாங்கத் தேவையான பணத்தையும் இரு தரப்புக்கும் அனுப்பியும் வந்தீர்கள். அல்லவா..?

ஐ.நா. செயலர் (புருவத்தை நெரித்தபடி) : என்ன சொல்கிறீர்கள்..? ஆயுத விற்பனைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அனந்தன் : ஆயுதங்களை விற்கும் நாடுகளுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்ல முடியுமா உங்களால்.

ஐ.நா. செயலர் : அது என்னவோ முடியாதுதான்.

அனந்தன் : அப்படியானால், ஆயுதங்களை விற்று அழிவை ஏற்படுத்தும் நாடுகளுக்கு ஆதரவும் தருவீர்கள். அவர்கள் ஆயுதங்கள் விற்ற காசில் இருந்து உங்களுக்குப் போடும் பிச்சையை எடுத்துக் கொண்டு அந்த ஆயுதத்தால் அழியும் மக்களுக்கு நிவாரணமும் செய்வீர்கள் இல்லையா..? சாராயம் குடித்து அழிபவரின் குழந்தைகளுக்கு சாராயக் கடை அதிபரிடம் பிச்சை எடுத்து நோட்டு புத்தகம் வாங்கித் தருவீர்கள். இல்லையா..?

ஐ.நா. செயலர் : அப்படியில்லை நண்பரே… வளர்ந்த நாடுகள் ஆயுதங்கள் உற்பத்தி செய்வதால்தான் வளரும் நாடுகளில் சண்டைகள் நடக்கின்றன என்பது வேடிக்கையான வாதம். எந்தவொரு இடத்திலுமே ஆயுதங்கள் கிடைக்கின்றன என்பதால் சண்டை மூளுவதில்லை. சண்டை மூள்வதனால்தான் ஆயுதங்கள் தேடிப் பெறப்படுகின்றன. மேற்கு நாடுகள் ஆயுதங்கள் உற்பத்தி செய்யாவிட்டாலும் வளரும் நாடுகளில் சண்டைகள் நடந்து கொண்டுதான் இருக்கும். ஏ.கே.47-ம் போபார்ஸும் இல்லையென்றால் ஈட்டியையும் கத்தியையும் எடுத்து வெட்டிக் கொண்டு மடிவார்கள்.

வளரும் நாடுகளில் சண்டை நடப்பதற்கான காரணங்கள் எத்தனையோ இருக்கின்றன. இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்தத் தெரியாமல் இருப்பது, அதிக மக்கள் தொகை, சொந்த மக்களின் நலனில் அக்கறை அற்ற அரசியல்வாதிகள், தலைவர்கள், வர்த்தகர்கள், சமூகத்தின் சீர்கேடுகளைத் தட்டிக் கேட்காமல் அதிகாரத்துக்கு அடியாளாகப் பணிபுரியும் அறிவுஜீவிகள் மற்றும் ஊடக வர்க்கம், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல் இவைதான் பிரச்னைக்கு மூலகாரணம். இதனால்தான் அந்த நாடுகளில் வாழ்பவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுகின்றன. அதை பிரிவினை சக்திகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இப்படியாகத்தான் வளரும் நாடுகளில் அழிவுகள் ஏற்படுகின்றன. என்ன… இப்போது வளர்ந்த நாடுகள் ஆயுத உற்பத்தியிலும் முன்னணியில் இருப்பதால் வளரும் நாடுகள் அவர்களிடமிருந்து ரெடிமேட் துப்பாக்கி, பீரங்கிகளை வாங்கி சுட்டுக் கொண்டு மடிகிறார்கள். இல்லையென்றால், நிதானமாக தங்கள் விஞ்ஞானிகள் தயாரித்துத் தரும் சுதேசித் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டு சாவார்கள். நான் தெரியாமல்தான் கேட்கிறேன், மேற்கு நாடுகள் ஆயுதங்கள் தருகின்றன என்றால் வளரும் நாடுகள் ஏன் அதை வாங்குகின்றன என்ற ஒரு எளிய கேள்வியும் இருக்கத்தானே செய்கிறது.

அனந்தன் : இப்படி விட்டேத்தியாக நீங்கள் பேசுவீர்கள் என்று எதிர்பார்க்கவேயில்லை. நீங்கள் உலக மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இப்படி வலியவர்களுக்கு வெண் சாமரம் வீசக்கூடியவர் என்பது தெரியாமல் போய்விட்டது.

ஐ.நா. செயலர் : அப்படியில்லை…ஒருவர் தவறுகளையெல்லாம் தான் செய்துவிட்டு மற்றவர் மேல் பழியைப் போட்டால் எப்படி நியாயம். தீதும் நன்றும் பிறர் தர வாரா மை டியர் ஃப்ரெண்ட்.

அனந்தன் : ஆனால், நீங்கள் இதே அளவுகோலை எல்லா இடங்களிலும் கடைப்பிடிப்பதில்லையே.

ஐ.நா. செயலர் : எதன் அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள். ஐ.நா. மாளிகையின் முன்னால் சம உயரத்தில் பறக்கவிடப்பட்டிருக்கும் தேசக் கொடிகள் சமத்துவத்தை அல்லவா எடுத்துக்காட்டுகின்றன.

அனந்தன் : ஆனால், கொசோவாவில் இது போன்ற ஒரு பிரச்னை ஏற்பட்டபோது நீங்கள் தலையிட்டு சுய ஆட்சி உருவாக்கிக் கொடுத்தீர்களே… அதை எந்த அடிப்படையில் செய்தீர்கள். அல்பேனியர்களுக்கு ஒரு நியாயம். ஆசியர்களுக்கு ஒரு நியாயமா..? போஸ்னியா, கிழக்கு தைமூர், இரான் இராக், குவைத் என எத்தனை இடங்களில் தலையிட்டிருக்கிறீர்கள். அவ்வளவு ஏன்… இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டு கேவலம் இரண்டாயிரத்து சொச்சம் பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து தீவிரவாதிகளை மட்டுமல்ல அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளையும் அழிப்போம் என்று களத்தில் இறங்கி தாக்குதல் நடத்தி வருகிறீர்களே… இலங்கையில் அதைவிட நூறு மடங்கு அவலங்கள் நடந்த பிறகும் இறையாண்மை, குடும்பத் தலைவர் என்று கதையளந்து கொண்டிருக்கிறீர்களே… அமெரிக்காவில் கேவலம் வெறும் இரண்டு கட்டடங்கள் மட்டுமே இடிந்து விழுந்தன. இங்கோ ஒரு தேசமே நொறுங்கிக் கிடக்கிறதே..? ஐ.நா. என்பது உலக நாடுகளின் பிரதிநிதியா..? அல்லது அமெரிக்காவின் அடியாளா..?

உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். .. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் யாரும் ஆயுதங்கள் கொடுக்கக்கூடாது என்று தடுத்திருக்க வேண்டும். பண உதவிகள் செய்வதை நிறுத்தி இருக்க வேண்டும். ஐ.நாவின் சர்வதேச அமைதிப் படையை அனுப்பி இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தை மூலம் ஒரு தீர்வுக்கு வர கட்டாயப்படுத்தி இருக்க வேண்டும். அதைச் செய்யாதவகையில் இந்த அழிவுகளுக்கெல்லாம் நீங்கள்தானே காரணகர்த்தாவாகிறீர்கள். ஒரு குடும்பத்துக்குள் வாய் வார்த்தையாக சண்டை நடந்தால் உங்களால் தலையிட முடியாதுதான். வெட்டிக் கொண்டும் குத்திக் கொண்டும் மடிந்தால் தலையிட்டுத்தானே ஆகவேண்டும். கணவன் மனைவியைக் கொன்றால் அது குடும்பப் பிரச்னை என்று சொல்லி வேடிக்கை பார்ப்பது கொடூரம் அல்லவா..? ஒரு இனப் படுகொலையைத் தடுக்கும் அதிகாரம், கடமை உங்களுக்கு இல்லையா..?

ஐ.நா. செயலர் : முதலில் நான் ஒரு விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன். ஐ.நா. என்பது நீங்கள் நினைப்பதுபோல் சர்வ வல்லமை கொண்ட ஒரு அமைப்பு அல்ல. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாடுகளும் சேர்ந்து உருவான ஒரு அமைப்பு. அதன் அதிகாரம் என்பது பெயரளவிலான ஒன்றுதான். காஷ்மீரிலும் தனி நாடு கேட்டு சண்டை நடந்துவருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் சண்டை நடைபெற்று வருகிறது. சீனாவுக்கும் திபெத்துக்கும் இடையில் சண்டை நடக்கிறது. இப்படியாக உலகின் பல இடங்களில் இத்தகைய பிரச்னைகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எல்லா இடங்களிலும் எங்களால் தலையிட முடிவதில்லை. எது பெரிய அளவுக்கு அச்சுறுத்தலாக வளரும் என்ற பயம் இருக்கிறதோ அதை மட்டுமே முன்னுரிமை கொடுத்து தீர்க்க முடியும். மற்றபடி ஒவ்வொரு நாட்டு மக்களின் நலனையும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள்தான் கவனிக்க வேண்டும். வழிகாட்டிகளால் வழியைக் காட்டத்தான் முடியும். போய்ச் சேரும் இடத்தை வாகனத்தை ஓட்டுபவர்தான் தீர்மானிக்கிறார். ஒருவகையில் ஐ.நா. என்பது கடவுளைப் போன்றது. தவறுகளை அதனால் தடுக்க முடியாது.

இன்னொரு விஷயம் சொல்கிறேன், உலக மக்கள் தொகை என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்கிறேன். சுமார் 600 கோடிக்கும் மேல். இலங்கையின் மக்கள் தொகை வெறும் 2 கோடிதான். அதிலும் இந்தப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். உலக மக்கள் தொகையோடு இலங்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் 0.001 சதவிகிதம் தான் வரும். உலக மக்கள் தொகையை ஒற்றை மானுட உடலாகக் கற்பனை செய்து கொண்டால் ஒரு லட்சம் பேரின் மரணம் என்பது கணுக்காலில் முட் செடி உராய்ந்து ஏற்படும் லேசான கீறல் போன்றது. அவ்வளவுதான். அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டுமோ அதைத்தான் தந்திருக்கிறோம். அதே சமயம் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தகர்ப்பு என்பது முற்றிலும் வேறானது. அது அதே முள் கண்ணில் தைப்பதைப் போன்றது. கணுக்காலுக்கும் கண்ணுக்குமான வித்தியாசம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அடுத்ததாக, இலங்கையில் நடப்பது இனப் படுகொலை அல்ல. இனப்படுகொலை என்றால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இன்னொரு பிரிவினரால் முற்றாகக் கொல்லப்படுவதுதான். இலங்கையில் தனி நாடு கேட்ட புலிகளின் கட்டுப்பாட்டில் எத்தனை தமிழர்கள் இருந்தார்களோ அவர்களைவிட அதிக அளவுக்குத் தமிழர்கள், சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் மிகவும் அமைதியாக, சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என பல பிரிவினர் ஆரம்பத்திலிருந்தே சிங்களர்களுடன் இணக்கமாகத்தான் வாழ்ந்துவருகிறார்கள். எனவே, இது இனப்படுகொலை அல்ல. ஒரு தேசத்தை துண்டாக்க விரும்பும் தீவிரவாதிகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வழிக்குக் கொண்டுவர முயன்று வருகிறது.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. பொதுவாக ஒரு வீட்டில் பிரச்னை என்றால் அண்டை வீட்டில் இருப்பவர் அதில் தலையிட்டு தீர்த்து வைப்பது நல்ல பலன் தரும். எல்லா பிரச்னையையும் ஆலமரத்தடிக்குக் கொண்டுவருவது நல்லதல்ல. அந்த வகையில் இந்தப் பிரச்னையை இந்தியாவிடமே ஒப்படைத்திருந்தால் அல்லது இந்தியா உரிய கவனம் செலுத்தியிருந்தால் இவ்வளவு பிரச்னை வந்திருக்கவே செய்யாது.

அனந்தன் : இந்தியா மட்டும் என்ன செய்திருக்க முடியும்..?

ஐ.நா. செயலர் : இந்தியா வல்லரசுக் கனவுகளுடன் இருக்கும் ஒரு தேசம். இலங்கை என்பது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மதராஸ் பிரஸிடென்ஸியின் கீழ் இருந்திருக்கிறது. அந்த அளவுக்கு இலங்கை என்பது இந்தியாவின் இன்னொரு மாநிலம் போன்ற ஒரு நாடுதான். கலாசாரரீதியாகவும் பெரும் தொடர்பு இருக்கிறது. இந்தியாவில் பிறந்த புத்தர் தோற்றுவித்த மதம்தான் இலங்கையில் பெருமளவில் பின்பற்றப்படுகிறது. இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இந்தியாவிலும் பெருமளவில் இருக்கின்றனர். இவ்வளவு உறவுகள் கொண்ட இந்தியா தன் வல்லரசுக் கனவுக்கு விடப்பட்ட முதல் சவாலாக, வாய்ப்பாக இதைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். இலங்கை பிரச்னையில் தலையிட்டு அந்த பிரச்னையை சுமுகமாகத் தீர்த்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லையே… காந்தி தேசம் தன் காலடியில் நடந்த வன்முறையைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டதே. இது தவறில்லையா..?

இன்னும் சொல்லப் போனால், அது சும்மா இருக்கவில்லை. அதுதான் பிரச்னைக்குக் காரணமே. முதலில் போராளிகளுக்கு பணமும் ஆயுதப் பயிற்சியும் கொடுத்தது. அதன் பிறகு சிங்கள அரசுக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது ஒரு துர்பாக்கியமான சம்பவம்தான். ஆனால், அதற்காக, இப்படிச் செயல்பட்டிருக்கக்கூடாது. இலங்கை அரசு சீனா மற்றும் பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் வாங்க ஆரம்பித்ததும் இந்தியாவும் அலறி அடித்துக் கொண்டு ஆயுதங்களை சிங்கள அரசுக்குக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்தியா மட்டும் இந்தப் பிரச்னையில் இன்னும் கொஞ்சம் நிதானமாக அதிக அக்கறையோடு செயல்பட்டிருந்தால் பிரச்னை எளிதாகத் தீர்ந்திருக்கும்.

அனந்தன் : என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஐ.நா. செயலர் : இலங்கை அரசுடனும் புலிகளுடனும் தமிழகத் தலைவர்களை அனுப்பி பேசச் சொல்லியிருக்க வேண்டும். பிரச்னை எதுவானாலும் அப்பாவி மக்களுக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்று செயல்பட்டிருக்க வேண்டும். விவாகரத்து… அல்லது கணவனுக்கு அடங்கி வாழு என்ற அறிவுரை… எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகத் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். 1980களின் பிற்பகுதியில் அமைதிப்படையைக் களமிறக்கியவர்கள் பிரச்னையை சுமுகமாகத் தீர்த்த பிறகுதான் வெளியேறி இருக்க வேண்டும். பாதியில் விட்டுவிட்டுச் சென்றது மிகப் பெரிய தவறு. அதன் பிறகு, மதில் மேல் பூனையாக கடைசிவரை இருந்துவிட்டது. அதுதான் எல்லா பிரச்னைக்கும் காரணமாக அமைந்துவிட்டது.

அனந்தன் : அப்படியானால், உங்கள் மேல் எந்தத் தவறும் இல்லையா..?

ஐ.நா. செயலர் : எமது கரங்களில் ரத்தக் கறைகள் படிந்ததில்லை. இனி ஒருபோதும் படியவும் போவதில்லை… இதோ பாருங்கள் இப்போது கூட இலங்கைக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் கோப்பில் கையெழுத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.

(தொடரும்)

Tuesday, August 17, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 4

காட்சி - 7

பிணைக்கைதியான டி வி.அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நா. அதிகாரிகள், இந்திய இலங்கை அரசு உயரதிகாரிகள், மத்திய மந்திரிகள், முக்கிய கட்சிகளின் தலைவர்கள், நிகழ்ச்சியில் பங்குபெற ஒப்புக் கொள்கிறார்கள். ஒவ்வொரு அதிகாரியும் விமான நிலையத்தில், ரயில் நிலையத்தில் இருந்து மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்படுகிறார்கள். தொலைக்காட்சி அலுவலகத்தில் பரபரப்பாக வேலைகள் நடக்கின்றன. மொட்டை மாடியில் அரங்கு வடிவமைக்கப்படுகிறது. சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் விருந்து ஒன்றில் கலந்து கொள்கின்றனர். விருந்து முடிந்ததும் யார் குற்றவாளி..? என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.

தொகுப்பாளர் : நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் தலைவர்களை நிலையம் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம். (இரண்டு பெண்கள் ஒவ்வொருவருக்கும் பூங்கொத்து கொடுக்கிறார்கள்) உலக வரலாற்றிலேயே இவ்வளவு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், தலைவர்கள் பங்கு பெறும் முதல் நிகழ்ச்சி இதுதான். (அரங்கில் இருக்கும் பார்வையாளார்களைப் பார்த்து) இவர்கள் எல்லாரையும் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். (ஆமாம்… என்று குரல்கள் எழுகின்றன).

இதைப் பார்க்கும்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பெர்னாட்ஷா ஒரு ஊரில் பேசுவதற்குப் போயிருந்தாராம். கூட்டத்தினரைப் பார்த்து, நான் என்ன பேசப் போகிறேன் என்று தெரியுமா என்று கேட்டாராம். கூட்டத்தினரும் உற்சாகமாக, தெரியும் தெரியும் என்று சொல்லியிருக்காங்க. உடனே ஷா உங்களுக்குத்தான் நான் பேசப் போவது தெரிந்திருக்கிறதே. எதற்குப் பேச வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம்.

அடுத்தமுறை அந்த ஊருக்குப் பேசப்போன போது அதே கேள்வியைக் கேட்டாராம். உடனே மக்கள் ரொம்பவும் ஜாக்கிரதையாக, தெரியாது தெரியாது என்று சொல்லியிருக்காங்க. ஷா உடனே, தெரியாதவர்களிடம் பேசி ஒரு பயனும் இல்லை என்று சொல்லிவிட்டு மேடையில் இருந்து இறங்கிப் போய்விட்டாராம். மக்களுக்கு ஒரே அதிர்ச்சியாகிவிட்டது.

அடுத்தமுறை அந்த ஊருக்கு பேச வந்தபோதும் அதே கேள்வியைக் கேட்டார். கூடியிருந்தவர்கள் ரொம்பவும் ஜாக்கிரதையாக பாதிபேர் தெரியும் என்றும் மீதி பேர் தெரியாது என்றும் சொன்னார்கள். பார்த்தார் பெர்னாட் ஷா. பாதிபேருக்கு தெரிஞ்சிருக்கு. பாதி பேருக்குத் தெரியலையா..? அப்ப ஒன்ணு பண்ணுங்க. தெரிஞ்சவங்க எல்லாம் தெரியாதவங்களுக்கு சொல்லிக் கொடுத்துடுங்க என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம். எப்படி இருக்கு கதை… இப்ப சொல்லுங்க, சிறப்பு விருந்தினர்களை உங்களுக்குத் தெரியுமா..? தெரியாதா..?

தொகுப்பாளர் (பார்வையாளார் ஒருவரின் அருகில் போய் செல்லமாக மிரட்டி) : தெரியுமா தெரியாதா..?

பார்வையாளர் : தெரியும்… ஆனா தெரியாது…

கூட்டம் சிரிப்பில் மூழ்குகிறது. விருந்தினர்களும் சிரிக்கிறார்கள்.

ஓ.கே. நான் எல்லாரையும் அறிமுகப்படுத்திவிடுகிறேன். முதலில் ஐ.நா.செயலாளர் மாண்புமிகு பான் கி மூன்…

கூட்டம் கை தட்டி வரவேற்கிறது. அவர்கள் கைதட்டி முடிந்த பிறகும் படபடவென ஏதோ ஒரு சத்தம் கேட்கிறது. என்ன என்று எல்லாரும் சுற்று முற்றும் பார்க்கிறார்கள். இருளில் இருந்து நான்கு பக்கமும் நான்கு ஹெலிகாப்டர்கள் வந்து நிற்கின்றன. தொலைக்காட்சி நிலைய விளக்குகளின் ஒளி பட்டு அதன் உலோக உடல்கள் மின்னுகின்றன. ஒரு ஹெலிகாப்டரில் இருந்து நூலேணி ஒன்று இறக்கப்படுகிறது. அதில் துப்பாக்கியுடன் இறங்கும் ஒருவர் மொட்டை மாடிக்கு உள்ளே நுழையும் கதவுப் பக்கம் போய் நிற்கிறார். ஏற்கெனவே, எந்தத் தொந்தரவும் இருக்ககூடாது என்பதற்காக அது உள்பக்கம் தாழிடப்பட்டுத்தான் இருக்கிறது.

துப்பாக்கியுடன் இறங்கியவர் தன் கையில் இருந்த இன்னொரு பெரிய பூட்டை எடுத்து பூட்டுகிறார். பார்வையாளர்களும் சிறப்பு விருந்தினர்களும் நிலையக் குழுவினரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். சரசரவென நான்கு பக்க ஹெலிகாப்டர்களில் இருந்தும் ஆட்கள் இறங்கி அனைவரையும் சுற்றி வளைக்கிறார்கள். அரங்கத்தினர் சிறப்பு விருந்தினரைச் சுற்றி பாதுகாப்புக் கவசமாக நிற்கிறார்கள். துப்பாக்கியுடன் இறங்கியவர்கள் அவர்களை விலகும்படிச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களோ முடியாது என்று கைகளைக் கோர்த்தபடி தடுக்கிறார்கள். சரமாரியாக அரங்கில் இருப்பவர்களின் காலுக்கு அருகில் சுட ஆரம்பிக்கிறார்கள். அனைவரும் பயத்தில் விலகி ஓடவே சிறப்பு விருந்தினர்கள் நனைந்த கோழிக் குஞ்சுகள் போல் நடுங்கியபடி நடுவில் இருப்பது தெரிகிறது. ஒவ்வொருவராக ஹெலிகாப்டர்களில் துப்பாக்கி முனையில் மிரட்டி ஏற்றுகிறார்கள். கேமரா மேன் எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார். அதைப் பார்க்கும் ஒரு போராளி கேமராவை நோக்கிப் போகிறார். கேமராமேனை முறைத்துப் பார்க்கிறார். கேமரா மேன் பயந்து நடுங்கியபடியே கேமராவை அணைத்துவிட்டு கேஸட்டை எடுத்து போராளியிடம் நீட்டுகிறார்.

போராளி (சிரித்தபடியே) : அது எங்களுக்குத் தேவையில்லை. நீ ஷூட் பண்ணு.

கேமராமேன் : இல்லை நீங்க என்னை ஷூட் பண்ணிடுவீங்க.

போராளி : நீ ஷூட் பண்ணலைன்னாத்தான் நான் ஷூட் பண்ணுவேன். உன் வேலையை நீ சரியா பாரு. (சிறப்பு விருந்தினர்கள் பக்கம் திரும்பி) உன்னை மாதிரியே இவங்களும் தங்களோட வேலையை ஒழுங்கா செஞ்சிருந்தா எங்களுக்கு வேலையே இருந்திருக்காது. என்ன செய்ய… உலகத்துல உன்னை மாதிரி டெடிகேஷன் உள்ளவங்க ரொம்ப கம்மியாத்தான் இருக்காங்க.

கேமராமேன் கேஸட்டை திரும்பப் போட்டு ஆன் செய்கிறார்.

போராளி அவர் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு சிறப்பு விருந்தினர்களை ஹெலிகாப்டரில் ஏற்றிவிட்டு தானும் ஏறிக் கொள்கிறார். நூலேணிகள் மேலே இழுக்கப்படுகின்றன. ஹெலிகாப்டர்கள் இருளில் மறைகின்றன.

காட்சி - 8

சிதிலமடைந்த பங்களாவில் அனந்தனும் குட்டியும் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் எம்.டி. கைகள் கட்டப்பட்டு நாற்காலியில் உட்காரவைக்கப்பட்டிருக்கிறார்.

அனந்தன் : அப்ப நீ என்னதான் சொல்ல வர்ற..?

குட்டி : எடுத்த எடுப்பிலேயே நார்க்கோ அனாலிசிஸுக்குப் போகவேண்டாம்.

அனந்தன் : ஏன் வேண்டாங்கற. சாதாரணமா பேசவிட்டா, இதுவரை பத்திரிகைகள்லயும் டி.வி.லயும் சொன்னதையேதான் சொல்லுவானுங்க.

குட்டி : அது என்னமோ உண்மைதான். ஆனா, இந்த நிகழ்ச்சி இந்த விஷயத்தைப் பற்றி தெரியாதவங்களுக்கும் போகப் போகுது. அதுமட்டுமில்லாம இந்த விஷயத்துல ஒவ்வொருத்தர் தரப்புல இருக்கற நியாயம் சொல்லப்படணும். அப்பத்தான் சிக்கல் எவ்வளவு எளியது; அதை எப்படியெல்லாம் சுய லாபங்களுக்காக சின்னாபின்னமாக ஆக்கியிருக்காங்கன்னு பாக்கறவங்களுக்கு அழுத்தமா புரியும். சார் கிட்டயே வேணும்னா கேட்டுப் பாரு.

குட்டி (எம்.டி. பக்கம் திரும்பி) : நீங்க என்ன நினைக்கறீங்க..? உங்களுக்கு ஒரு நிகழ்ச்சியை எப்படி பிரசெண்ட் பண்ணினா மக்களுக்குப் பிடிக்கும்ங்கறது எங்களைவிட நல்லாத் தெரியும் இல்லையா..?

எம்.டி : நார்க்கோ அனாலிஸுக்கு உட்படுத்தப் போறீங்களா..?

அனந்தன் : ஆமாம்.

எம்.டி : எல்லாரையுமா..?

அனந்தன் : ஏன். அதுல உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கா..?

எம்.டி. : இது எங்க போய் முடியுமோன்னு தெரியலையே..?

அனந்தன் : ஆல் வில் பி வெல் இஃப் இட் எண்ட்ஸ் வெல். சரி நீங்க என்ன நினைக்கறீங்க. எனக்கு என்னமோ அவங்களை மொதல்லயே நார்க்கோ அனாலிசிஸுக்கு உட்படுத்தி அதை அப்படியே நேரடியா ஒளிபரப்பிடறதுதான் சரின்னு தோணுது. இவன் அது வேண்டாங்கறான். மொதல்ல எல்லாரையும் சாதாரணமா பேச வெக்கலாம். அதுக்கு அப்பறம் உண்மையைப் பேச வைக்கலாம் அப்படின்னு சொல்றான். நீங்க என்ன நினைக்கறீங்க.

எம்.டி.சிறிது நேரம் மவுனமாக இருக்கிறார்.

எம்டி : ஒரு நிகழ்ச்சின்னு பார்த்தா மொதல்ல நல்ல அறிமுகம்னு இருக்கறது அவசியம்தான். அதுவும் இந்த விஷயத்துல ஒவ்வொரு தரப்பிலயும் ஒவ்வொரு நியாயம் இருக்கத்தான் செய்யுது. அதைச் சொல்ல அனுமதிக்கறதுதான் நல்லது. அப்பத்தான் மக்களுக்கு ஒருதெளிவான சித்திரம் கிடைக்கும்.

அனந்தன் : இவங்களைப் பேச விட்டா பேசிக்கிட்டே போவானுங்க. அதுமட்டுமில்லாம போலீஸ் ரவுண்ட் அப் பண்றதுக்குள்ள நாம் எல்லாத்தையும் முடிச்சாகணும். ஐ.நா. செயலரை வேற பிடிச்சி வெச்சிருக்கோம். இண்டர்நேஷனல் ஃபோர்ஸ் வந்தா சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்.

குட்டி : அது ஒரு பிரச்னையே இல்லை. இந்த இடத்தையே சுத்தி உலகத்துல இருக்கற எல்லா படைகளும் வந்து குவிஞ்சாலும் கவலையே படவேண்டாம். நம்ம கிட்ட இருக்கற பிணைக் கைதிகள் எல்லாருமே வி.வி.ஐ.பிங்க. அவங்களுக்கு ஒண்ணுன்னா உலகமே துடிச்சிப் போயிடும். இப்ப நம்ம சாரையே எடுத்துக்கோ… தமிழ் நாட்டுலயும் இந்தியாலயும் ரொம்ப முக்கியமான ஆளு. இவரோட கையையோ காலையோ வெட்டி எடுத்துக் காட்டினோம்னா பதறிப்போயிடமாட்டாங்களா என்ன..? நான் சொல்றது சரிதான சார்..?

எம்.டி. மிரண்டு போய் இருவரையும் மாறி மாறிப் பார்க்கிறார்.

குட்டி (அவரது கன்னத்தை செல்லமாகக் கிள்ளி) : பயந்துட்டீங்களா… இரண்டரை மூணு லட்சத்துக்கும் மேல் இருக்கும் சார். கை போயி கால் போயி முகம் சிதைஞ்சு... இன்னும் இருக்காங்க சார். செத்தே போயிருக்கலாமேன்னு ஒவ்வொரு நாளும் கதறித் துடிச்சிக்கிட்டு திறந்தவெளிச் சிறையில நடமாடும் பிணமா இருக்காங்க. ஆனா உங்கள்ல யாராவது ஒருத்தருக்கு ஒரு சின்ன கீறல் விழுந்ததுன்னா உலகமே பதறும் இல்லை சார்.

எம்.டி. தலை குனிகிறார்.

காட்சி - 9

அமைச்சர் ஒருவருடைய மகளின் திருமண விருந்து ஒன்று விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர், காவல்துறை உயரதிகாரிகள், நீதிபதிகள் என எல்லாரும் கூடியிருக்கிறார்கள். காவல் துறை உயரதிகாரி கையில் மதுக்கோப்பையுடன் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார். தூரத்தில் இருந்து அதைப் பார்க்கும் முதலமைச்சர் தன் பி.ஏ.விடம் ஏதோ சொல்கிறார். பி.ஏ. காவல் துறை உயரதிகாரியை சந்தித்து சிறிது ஓரமாக அழைத்துச் செல்கிறார்.

பி.ஏ. : ஐயா உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கச் சொன்னாங்க.

ஐ.ஜி : சொல்லுங்க என்ன செய்யணும்.

பி.ஏ : இருந்து சாப்பிட்டுத்தான போவீங்க..?

ஐ.ஜி : ஆமாம்.

பி.ஏ. : ஐயா கூட சாப்பிட வர முடியுமான்னு கேட்கச் சொன்னாங்க.

ஐ.ஜி. : இதுல கேட்க என்ன இருக்கு. வாடான்னு சொன்னா வந்துட்டுப் போறேன்.

பி.ஏ. : ஐயா சாப்பிட கொஞ்ச நேரம் ஆகும். அதான் கேட்டுட்டு வரச் சொன்னாங்க.

ஐ.ஜி. கேட்கவே வேண்டாம். எவ்வளவு நேரம்னாலும் காத்திக்கிட்டுருப்பேன்னு சொல்லுங்க.

விருந்து தொடர்கிறது. ஓரிரு மணி நேரம் கழிந்த பிறகு, முதல்வரும் அமைச்சர்களும் சாப்பிடச் செல்கிறார்கள். ஐ.ஜியும் கலந்து கொள்கிறார்.

முதல்வர் ஐ.ஜி.யைத் தனக்குப் பக்கத்தில் உட்காரச் சொல்கிறார். ஐ.ஜி. சந்தோஷத்துடன் அமர்கிறார். உணவு பரிமாறப்படுகின்றன. எல்லாரும் சாப்பிட ஆர்மபிக்கிறார்கள்.

முதலமைச்சர் : சமீபத்துல ஸ்விட்சர்லாந்து போயிருந்தேன். அங்கெல்லாம் ஏதாவது ஒரு கேஸ் வந்துருச்சுன்னா அது துப்பு துலங்கி முடியறவரை உயர் அதிகாரிங்க பசி, தூக்கம் எதையும் பொருட்படுத்த மாட்டாங்களாம். குடும்ப விழா, விருந்து எதிலயும் கலந்துக்க மாட்டாங்களாம். அதெல்லாம் டெடிகேஷனோட இருக்கறவங்க செய்யறது இல்லையா ஐ.ஜி. நீங்க சாப்பிடுங்க. வெயிட்டர்… சாருக்கு என்ன வேண்டும்னு கேட்டு போடுங்க.

ஐ.ஜி.க்கு லேசாக சுருக்கென்று தைக்கிறது. தலையைக் குனிந்தபடியே இருக்கிறார். எல்லாரும் சாப்பிடவே, சிறிது நேரம் கழித்து தயக்கத்துடன் ஒரு சிக்கன் துண்டை ஃபோர்க்கால் எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறார்.

முதலமைச்சர் : விண்வெளிக்குப் போறவங்க தூக்கம் பசி எடுக்காம இருக்க ஏதோ மாத்திரை எல்லாம் சாப்பிடுவாங்களே அதுமாதிரி தங்களுக்கும் ஏதாவது தர முடியுமான்னு கேட்கறாங்களாம். சாப்பிடறதுக்குன்னு நேரம் வீணாகுதேன்னு அவங்களுக்குக் கவலையாம். அதெல்லாம் நமக்கு எதுக்கு இல்லையா..? நாலு பேர் நாக்கைப் பிடுங்கற மாதிரி கேள்வி கேட்பாங்களேன்னு சூடு சொரணை உள்ளவங்க அப்படி யோசிப்பாங்க. நமக்கு எதுக்கு அதெல்லாம்… நீங்க சாப்பிடுங்க ஐ.ஜி.

ஐ.ஜி. வாயில் இருக்கும் சிக்கன் துண்டை துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்.

முதல்வர் : யார் எக்கேடு கெட்டா நமக்கென்ன. நாடு என்ன குட்டிச் சுவரானா நமக்கு என்ன. மாசம் பொறந்தா சம்பளம்… வாரம் பொறந்தா கிம்பளம். வாங்கிப் போட்டுக்கிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான… நீங்க சாப்பிடுங்க ஐ.ஜி.சார்.

ஐ.ஜி. எதுவும் பேசாமல் தலை குனிந்தபடி இருக்கிறார். எல்லாரும் சாப்பிட்டு முடித்து எழுந்திரிக்கிறார்கள். முதல்வரும் புறப்பட்டுப் போகிறார். ஐ.ஜி. உணவு மேஜையைவிட்டு எழுந்திரிக்காமல் அப்படியே அமர்ந்திருக்கிறார்.

விருந்து முடிந்து ஒவ்வொருவராக விடை பெற்றுச் செல்கிறார்கள். அரங்கில் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்படுகின்றன. ஐ.ஜி. பரிமாறப்பட்ட உணவை வெறித்துப் பார்த்தபடி தனியாக அமர்ந்திருக்கிறார்.

காட்சி - 10

நள்ளிரவில் லாக்கப் ரூமில் பனியனுடன் ஐ.ஜி. மேஜையில் தலை கவிழ்ந்தபடி அமர்ந்திருக்கிறார். மேலே தொங்கும் விளக்கு இங்கும் அங்குமாக ஆடிக் கொண்டிருக்கிறது. பின்னணியில் குரல்கள் எதிரொலிக்கின்றன. நீங்க சாப்பிடுங்க ஐ.ஜி… அதெல்லாம் சூடு சொரணை உள்ளவங்களுக்கு. யார் எக்கேடு கெட்டா நமக்கு என்ன… நாடு எப்படி குட்டிச் சுவரானா நமக்கு என்ன..?

சட்டென்று ஆவேசம் வந்து எழுந்திருக்கும் ஐ.ஜி. சட்டை கூடப் போட்டுக் கொள்ளாமல் ஜீப்பை நோக்கி விரைகிறார். துணைகாவலர்கள் பதறி அடித்து பின்னால் ஓடுகிறார்கள். ஐ.ஜி. ஜீப்பை எடுத்துக் கொண்டு பறக்கிறார். காவலர்களும் தங்கள் பைக், ஜீப்பில் பின் தொடருகிறார்கள். வாகனங்கள் நேராக அகதிகள் முகாமை நோக்கிச் செல்கிறது. மூடப்பட்ட கேட்டுக்கு முன்னால் ஹார்னை அலறவிடுகிறார் ஐ.ஜி. கோபத்துடன் திட்டியபடியே வரும் காவலாள், ஐ.ஜி.யைப் பார்த்ததும் ஒடுங்கிப் போகிறார்.

கிரில் கேட் திறக்கப்படுவதற்கு முன் கிட்டத்தட்ட மோதிவிடுவதுபோல் ஜீப் உள்ளே நுழைகிறது. தூங்காமல் வராண்டாவில் உட்கார்ந்திருந்தவர்கள் திடீரென்று பாய்ந்த ஹெட்லைட் வெளிச்சத்தில் பதறி சுவரோரம் ஒடுங்குகிறார்கள். தூங்குவதுபோல் படுத்திருந்தவர்கள் அலறி அடித்து எழுந்திரிக்கிறார்கள். ஐ.ஜி. வெறி பிடித்த மிருகம் போல் உள்ளே நுழைகிறார். கண்ணில் படுபவரையெல்லாம் கன்னத்திலும் பிடரியிலும் அடிக்கிறார். இள வயதினராகப் பார்த்து தரதரவென இழுத்துச் சென்று ஒரு அறைக்குள் போட்டு கையில் கிடைத்தவற்றையெல்லாம் எடுத்து அடித்து துவம்சம் செய்கிறார். அகதிகள் எல்லாரும் பயந்து வெளிறிய முகத்துடன் ஒரு மூலையில் ஒடுங்கியபடி எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். எதற்கு அடிக்கிறார்கள் என்று கேட்க சற்று முன்னால் வருபவர்களை பிற காவலர்கள் லத்தியால் அடித்து விரட்டுகிறார்கள். குழந்தைகள் பயத்தில் அலறுகின்றன.

சொல்றா… சொல்றா… கடத்திட்டுப் போனது யாரு… எல்லாரையும் எங்க கொண்டு வெச்சிருக்கான்… என்று கேட்டபடியே ஒவ்வொருவரையும் சுவரில், கதவில் மோதவைத்து அடிக்கிறார்.

எங்களுக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவங்களை எங்களுக்கு தெரியாது என்று அடிபடுபவர்கள் கெஞ்சிக் கதறுகிறார்கள்.

முதியவர் ஒருவர் : கொழும்பு அகதிகள் முகாமில்தான் இப்படி அநியாயம் நடக்கும். புலிகள் பகலில் ஏதாவது தாக்குதல் நடத்தினால் ராத்திரியில் ஆர்மிகாரன்கள் முகாமில் புகுந்து சந்தேகம் என்ற பெயரில் எல்லாரையும் போட்டு துவம்சம் செய்வான்கள். இங்கயும் அதே கதிதானா..?

இன்னொருவர் : எந்த ஊரானாலும் நாயென்றால் கடிக்கத்தான் செய்யும்.

(தொடரும்)

Monday, August 16, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 3

காட்சி : 3

(தூரத்தில் ஒருவர் காவல் துறைக்கு போன் செய்வது கேட்கிறது. எஸ்.கே. வீங்கிய முகத்துடன் கேமரா முன்னால் நின்று கொண்டிருக்கிறார்).

எஸ்.கே. : நாலு பேர் வந்தாங்க…இலங்கைப் பிரச்னை தொடர்பா ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பணும்னு சொன்னாங்க. முடியாதுன்னு சொன்னதும் என்னை அடிச்சுப் போட்டுட்டு எம்.டி.யைக் கடத்திட்டுப் போயிட்டாங்க.

எல்லா தொலைக்கட்சிகளில் ஃபிளாஷ் நியூஸாக முன்னணி தொலைக்காட்சியின் அதிபர் கடத்தப்பட்ட செய்தி ஓடத்தொடங்குகிறது.

தொலைக்காட்சி நிலைய வாசலில் குழுமியிருக்கும் காவல் துறையினரை தொலைக்காட்சி கேமராக்கள் மொய்க்கின்றன.

தப்பி ஓடிய சுமோவைத் துரத்தும் வேட்டை ஆரம்பிக்கிறது.

காட்சி : 4

காவல்துறை அதிகாரி : யோவ் சிவப்பு சுமோய்யா… நம்பர் டி.என்.2367. வண்டியைப் பார்த்ததும் ஃபாலோ பண்ணு. வெப்பன்ஸ் வெச்சிருக்காங்க. தனியா கிட்ட போயிடாத. ஆனா, கண்ணுல இருந்து தப்பவிடாத.

டிராஃபிக் கான்ஸ்டபிள் : சார்… என்ன நம்பர் சொன்னீங்க.

அதிகாரி மீண்டும் சொல்கிறார்.

அதிகாரி : டி.என்.2367.

சிவப்பு சுமோ தூரத்தில் வருகிறது. அதன் நம்பர் தானாகவே2367 என்பதில் இருந்து 3478 என்று மாறுகிறது.

டிராஃபிக் கான்ஸ்டபிள் : சுமோவின் நம்பரை உற்றுப் பார்க்கிறார். தான் தேடும் வண்டி அது இல்லை என்றதும் நிறுத்தாமல் போக விடுகிறார். (அதிகாரியிடம்) ஒரு சிவப்பு சுமோ போகுது சார். ஆனா நீங்க சொன்ன நம்பர் இல்லை.

அதிகாரி : யோவ் அந்த வண்டியை நிறுத்துய்யா.. நம்பர் பிளேட்டை மாத்தறதா கஷ்டம். அடுத்த பீட்ல வண்டிய நிறுத்தச் சொல்லுய்யா…

பதறியபடியே டிராஃபிக் கான்ஸ்டபிள் அடுத்த பீட்டுக்கு தகவல் கொடுக்கிறார். சிவப்பு சுமோவை ஓரங்கட்டுகிறார்கள். கான்ஸ்டபிள்கள் உள்ளே எட்டிப் பார்க்கிறார்கள். அனந்தன், குட்டி, செல்வா, அழகன் மட்டுமே வண்டியில் இருக்கிறார்கள். சுற்றிச் சுற்றி வந்து பார்க்கிறார் கான்ஸ்டபிள்.

கான்ஸ்டபிள் (வாக்கி டாக்கியில்): வண்டில நாலு பேர் இருக்காங்க சார்.

அதிகாரி : நாலா… ஐஞ்சு பேர் இருக்காங்களான்னு பாருய்யா… கோட் சூட் போட்டுட்டு யாராவது இருக்காங்களா பாரு.

கான்ஸ்டபிள் : நாலு பேர்தா இருக்காங்க. கோட் போட்ட யாருமே இல்லை சார்.

அதிகாரி : சரி... அந்த வண்டியைப் போகச் சொல்லு.

கான்ஸ்டபிள் (வண்டியை மீண்டும் ஒருமுறை நன்கு சோதித்துவிட்டு டிரைவரிடம் நெருங்கி): நீங்க போகலாம் சார்.

சிறிது தூரம் போனதும் காலுக்குக் கீழே ஒரு பட்டனை குட்டி அழுத்துகிறான். படுக்க வைக்கப்பட்ட லிஃப்ட் கதவு திறப்பதுபோல் திறக்கிறது. அதனுள் எம்.டி. கைகள் கட்டப்பட்டு வாய் பொத்தப்பட்டு படுக்கவைக்கப்பட்டிருக்கிறார்.

கடற்கரை சாலையில் சுமோ சீறி பாய்கிறது.

சிறிது தூரம் வந்ததும் நெடுஞ்சாலையில் சுமோ தயங்கியபடி ஒரு இடத்தில் நிற்கிறது. செல்வா ரியர் வியூ மிரரில் பார்க்கிறார். தூரத்தில் ஒரு கார் வருவது தெரிகிறது. சுமோவை ஸ்டார்ட் செய்து மெதுவாக போகிறார். நெடுஞ்சாலையின் ஓரத்தில் முள் செடிகளால் ஆன வேலி ஒன்று கதவுபோல் திறந்து கொள்கிறது. சுமோ உள்ளே நுழைந்ததும் மீண்டும் முள் செடிகள் மூடிக் கொள்கிறது. சுமோ சவுக்குத் தோப்பில் சிறிது தூரம் சென்றதும் தரையில் இருந்து பெரிய கதவு செங்குத்தாகத் திறந்து கொள்கிறது. சுமோ கீழே இருக்கும் சுரங்கப் பாதையில் வழுக்கிக் கொண்டு செல்கிறது. அது சென்றதும் கதவு தரையோடு தரையாக மூடிக் கொள்கிறது. இரண்டுபேர் சருகுகளையும் மண்ணையும் போட்டு தடம் தெரியாமல் மூடுகிறார்கள்.

காட்சி : 5

எஸ்.கே. காயம்பட்ட இடத்தை பஞ்சால் ஒற்றிக் கொண்டபடியே மாடியில் இருந்து பரபரப்பான சாலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். காவல் துறை உயர் அதிகாரி தேநீர் அருந்தியபடியே அவருக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார். எஸ்.கே. காவல்துறை அதிகாரியைத் திரும்பிப் பார்த்தபடியே பேச ஆரம்பிக்கிறார்.

எஸ்.கே : நேத்து ஒரு ஃபைலைக் கொடுத்து அதுல இருக்கற ப்ரபோசலைப் படிச்சுப் பாக்கச் சொன்னாரு. இலங்கை பிரச்னை பற்றி ஒரு டாக் ஷோ மாதிரி ஒண்ணு நடத்தணும்னு அதுல சொல்லியிருந்தாங்க.

அதிகாரி : அந்த ஃபைல் எங்க இருக்கு.

எஸ்.கே. : வந்தவங்க அதைக் கையோட எடுத்துட்டுப் போயிட்டாங்க.

அதிகாரி : அதோட காப்பி எதாவது இருக்கா..?

எஸ்.கே. : ப்ராஜெக்ட் ஓ.கே. ஆனாத்தான் காப்பி எடுத்து வெச்சுப்போம். இது அந்த ஸ்டேஜுக்கு வரலைங்கறதால எடுக்கலை.

அதிகாரி : இதுக்கு முன்னால அவங்களை நீங்க பாத்திருக்கீங்களா..?

எஸ்.கே : இல்லை. நான் பார்த்ததில்லை. ஒருவேளை எம்.டி.க்குத் தெரிஞ்சிருக்கலாம்.

அதிகாரி : எதைவெச்சு அப்படிச் சொல்றீங்க.

எஸ்.கே. : பொதுவா யார், எந்தவொரு ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணினாலும் ப்ராசஸ் பண்ணி ஒரு முடிவு சொல்ல குறைஞ்சது ரெண்டு வாரமாவது ஆகும். அதுவும்போக நான் பார்த்ததுக்கு அப்பறம்தான் எம்.டிக்கே போகும். ஆனா இது நேரா அவர்கிட்ட போயிருக்கு. அதனால அவங்களை அவருக்கு முன்னாலயே தெரிஞ்சிருக்கணும். அல்லது தெரிஞ்சவங்க மூலமா வந்திருக்கணும்.

அதிகாரி : யார் மூலமா வந்திருப்பாங்கன்னு ஏதாவது ஐடியா இருக்கா..?

எஸ்.கே. : இலங்கை விஷயத்துல அக்கறை கொண்ட நிறையபேரை அவருக்குத் தெரியும். யார் மூலம் வந்திருப்பாங்கன்னு சொல்ல முடியலை.

அதிகாரி : அவங்க கொடுத்த ஃபைல்ல அவங்களைப் பத்தி கூடுதல் தகவல் ஏதாவது இருந்ததா..?

எஸ்.கே. : இல்லை. அது வெறும் பிளைன் பேப்பர்லதான் இருந்தது. லெட்டர் ஹெட் மாதிரியோ வேற எந்த அட்ரஸோ, போன் நம்பரோ எதுவுமே இல்லை.

அதிகாரி : நல்லா யோசிச்சுப் பாருங்க.

எஸ்.கே. : இதுல சந்தேகத்துக்கே இடமில்லை. ஏன்னா, என்கிட்ட ஒரு ஃபைல் வந்ததும் நான் மொதல்ல செய்யறது, அதனோட அட்ரஸ், போன் நம்பரை என் டேட்டா பேஸ்ல ஸ்டோர் பண்றதுதான். இதுல அப்படி எதுவுமே இல்லை. விசிட்டிங் கார்டு கூட இல்லை.

அதிகாரி : ரகசிய கேமராக்கள் எல்லாத்தையும் குறிபார்த்து சுட்டுட்டுப் போயிருக்காங்க. உங்க ஆபீஸ் பத்தி நல்ல தெரிஞ்ச யாரோ ஒருத்தரோட உதவி இல்லாம இது நடந்திருக்க வாய்ப்பில்லை. இல்லையா..?

எஸ்.கே. : நிச்சயமா.

(அப்போது அவசரமாக ஒருவர் செல்போனைக் கையில் பிடித்தபடி கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைகிறார்).

வந்தவர் : சார். எம்.டி. ஈஸ் ஆன் லைன்

எஸ்.கேயும் அதிகாரியும் துள்ளி எழுந்திருக்கிறார்கள்.

எஸ்.கே. போனை வாங்கிக் கொள்கிறார். காவல்துறை அதிகாரி அதை அவரிடம் இருந்து வாங்கி ஸ்பீக்கரை ஆன் செய்து கொடுக்கிறார்.

எஸ்.கே. : பாஸ் எங்க இருக்கீங்க?

எம்.டி. : அதெல்லாம் தெரியலை. நான் சொல்றதை கேளு. என்னை எதுக்காகக் கடத்தியிருக்காங்க… அவங்களோட டிமாண்ட் என்ன அப்படிங்கறது பத்தி இன்னும் அரை மணி நேரத்துல ஒரு அனவுன்ஸ்மெண்ட் பண்ணப்போறாங்க. அதை உடனே டெலிகாஸ்ட் பண்ணு.

எஸ்.கே. : உனக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே…

எம்.டி. கவலையேபடாத. அவங்களோட நோக்கம் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பறது மட்டும்தான். அது முடிஞ்சதும் நேரா என்னை போலிஸ் ஸ்டேஷன்ல கொண்டு வந்து ஒப்படசிச்சுட்டு தானே சரண்டர் ஆயிடறதா சொல்லியிருக்காங்க. என்னை ரொம்ப நல்லவிதமா நடத்தறாங்க. யாரும் பயப்பட வேண்டாம். வீட்டில உள்ளவங்களுக்குச் சொல்லிப் புரிய வை. இது வெறும் ஒரு பிஸினஸ் டூர் மாதிரித்தான். பத்து நாள்ல நான் ஜம்னு வீட்டுக்கு வந்துடுவேன்னு சொல்லு. போலீஸ் கிட்ட சொல்லிட்டியா..?

எஸ்.கே : ஆமா. டி.எஸ்.பி. சார் கூட இங்கதான் இருக்காங்க.

எம்.டி. : போனை அவர் கிட்டக் கொடு.

எஸ்.கே. செல்போனை டி.எஸ்பி.யிடம் கொடுக்கிறார்.

எஸ்.பி : சொல்லுங்க சார். நீங்க சொன்னதைக் கேட்டுட்டுத்தான் இருந்தேன்.

எம்.டி.: நல்லது. ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு நிகழ்ச்சியோட ப்ரபோசல் கொண்டுவந்து கொடுத்தாங்க. அது கொஞ்சம் சிக்கலான மேட்டர் அப்படிங்கறதால நாங்க ஒளிபரப்ப முடியாதுன்னு சொல்லிட்டோம். அதை நாங்க நேரடியா ஓ.கே. சொல்லியிருந்தா இந்தப் பிரச்னையே வந்திருக்காது. ஓ.கே. இப்பவும் ஒண்ணும் கெட்டுடலை. ஒரு வாரத்துக்கு அவங்களோட நிகழ்ச்சி ஒளிபரப்பணும்னு விரும்பறாங்க. அது முடிஞ்சதும் என்னை ஒரு கீறல் கூடப் படாம கொண்டு வந்து விட்ருவாங்க. நீங்க கவலையே பட வேண்டாம்.

அதிகாரி : அவங்களை பேசச் சொல்லுங்க

எம்.டி. (எதிர்முனையில் யாருடனோ): உங்களைப் பேசச் சொல்றாங்க.

எதிர்முனையில் : இன்னும் அரை மணி நேரத்துல உலகத்துக்கிட்டயே பேசப் போறோம். அவர் கிட்ட தனியா பேச ஒண்ணும் இல்லை.

எம்.டி. : சார் அப்பறம் பேசறேன்னு சொல்றாங்க.

டக்கென்று இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

அதிகாரி : ஓ.கே. இந்த செல் என் கிட்டயே இருக்கட்டும். காலை டிரேஸ் பண்ணிட்டுத் தர்றேன்.

காட்சி - 6

அனந்தன் கேமரா முன்னால் வந்து நிற்கிறார்.

கேமரமேன் கவுண்ட் டவுன் சொல்கிறார்.

4…

3…

2…

1…

தம்ஸ் அப் காட்டுகிறார்.

அனந்தன், கேமராவையே வெறித்துப் பார்க்கிறார். கேமராமேன் பேச ஆரம்பிக்கும்படி கையைக் காட்டுகிறார். அனந்தன் அவரை சட்டென்று முறைக்கிறார். கேமரா மேன் பயந்து பின் வாங்குகிறார்.

(பெருமூச்சுவிட்டபடியே) அனந்தன் : இந்த உலகத்துல மரணத்தை விடக் கொடியது மறக்கப்படுவது. காயத்தை விட வலி மிகுந்தது புறக்கணிக்கப்படுவது.

நாங்கள் இறந்து கொண்டிருக்கிறோம். இந்த உலகம் எங்கள் மரணத்தை மறந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் காயங்களின் வலியில் கதறுகிறோம். எங்கள் கதறல் புறக்கணிக்கப்படுகிறது.

அராஜகவாதியின் கொடூரங்களைவிட நடுநிலையாளர்களின் மவுனமே எங்களைப் பெரிதும் கலங்க வைக்கிறது.

அந்த மவுனத்தை நாங்கள் கலைக்க விரும்புகிறோம்.

உங்கள் வீட்டின் ஒரு மூலையில் ஒரு அப்பாவியை நான்குபேர் சுற்றி நின்று அடித்துக் கொல்கிறார்கள். அவரது அலறல் வீட்டின் அனைத்து சுவர்களிலும் பட்டு எதிரொலிக்கிறது. நீங்களோ வாக்மேனை காதில் மாட்டுக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறீர்கள். முற்றத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிணங்களின் மீது கால் பட்டுவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டு துளசி மாடத்தைச் சுற்றி வருகிறீர்கள். வீட்டின் நடுக்கூடத்தில் ஒரு பெண்ணை நான்கு பேர் கதறக் கதற கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ உங்கள் குழந்தையின் பள்ளிச் சீருடையை அயர்ன் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைச் சுற்றி கையில் தட்டேந்தி, காலி வயிற்றில் தட்டிக் காட்டி ஒரு வாய் சோற்றுக்காக உங்களிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ உண்ட அறுசுவை உணவு செரிக்க வெற்றிலையின் காம்பு கிள்ளி சுண்ணாம்பு தடவிக் கொண்டிருக்கிறீர்கள்.

சிங்கம், புலி மீது பழி போடுகிறது. புலி, நரி மீது பழி போடுகிறது. நரி, ஓநாய் மீது பழி போடுகிறது. முடிவற்றும் நீளும் பச்சிளம் கன்றுகளின் கதறல் செவிப்பறையை அதிரச் செய்கிறது.

தொடரும் எங்கள் வேதனை முடிவுக்கு வர வேண்டுமானால், நீடிக்கும் உங்கள் புறக்கணிப்பு முடிவுக்கு வரவேண்டும். உங்கள் கவனம் எங்கள் பக்கம் திரும்பியாக வேண்டும். நிஜ உலகில் இருந்து தப்பித்து தொலைக்காட்சி வழியாக புதிய உலகங்களுக்குப் போய்க் கொண்டிருக்கும் உங்களை அந்த நுழைவாயிலிலேயே மடக்குவதற்காகத்தான் இந்த முயற்சியை எடுத்திருக்கிறோம். எங்கள் கண்ணீரை நீங்கள் பார்த்தாக வேண்டும். அது தொலைக்காட்சி நடிகர்கள் உகுப்பதைவிடச் சூடானது. எங்கள் ரத்தங்களை நீங்கள் பார்க்க வேண்டும். அது திரைப்பட நடிகர்கள் சிந்தும் ரத்தத்தைவிட சிவப்பானது. இந்த பிரச்னைகளுக்கெல்லாம் உண்மை காரணம் யார் என்பதை நீங்கள் தெரிந்துகொண்டாக வேண்டும். உங்கள் பங்கு என்ன என்பதை நீங்கள் புரிந்துகொண்டாக வேண்டும்.

இதன் முதல் கட்டமாக நாங்கள் சொல்லும் எல்லாரும் கலந்து கொள்ளும் மாதிரியான விவாதம் ஒன்றை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும். இலங்கை ராணுவ அமைச்சர், விடுதலைப் புலிகள், கிழக்குப் பகுதி இஸ்லாமியர், ஐ.நா.செயலர், இந்திய உள் துறை அமைச்சர், தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவர், காங்கிரஸ், பி.ஜே.பி, தி.மு.க, அதிமுக, மதிமுக எல்லா தரப்பிலிருந்தும் தலைமைப் பதவியில் இருப்பவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். என்ன நடந்தது..? இனி என்ன நடக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாக இருக்க வேண்டும். இன்று வெள்ளிக் கிழமை. வரும் திங்கட்கிழமையே இதை ஆரம்பிக்க வேண்டும்.

யாரையோ வரும்படி கை அசைத்துக் கூப்பிடுகிறார். குட்டியும் செல்வாவும் தொலைக்காட்சி அதிபரை துப்பாக்கி முனையில் அழைத்து வருகிறார்கள்.

அனந்தன் : சொன்னதெல்லாம் கேட்டீங்கல்ல. உங்க நிறுவனத்துல இருக்கறவங்களுக்கு நீங்களே சொல்லுங்க.

அதிபர் (நடுங்கியபடியே) : இவங்க சொன்ன மாதிரியே ஏற்பாடுபண்ணிடுங்க. செலவெல்லாம் பாக்காதீங்க. என்ன கஷ்டம் பட வேண்டியிருந்தாலும் பரவாயில்லை. ரெண்டு நாள்ல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. நம்ம பில்டிங்கோட மொட்ட மாடிலயே நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணுங்க. ஐ.நா. செயலர், இந்திய அமைச்சர்கள், இலங்கை அமைச்சர்கள் எல்லார்கிட்டயும் நான் கெஞ்சிக் கேட்டுக்கறேன். தயவு செஞ்சு நிகழ்ச்சில கலந்துக்கோங்க. இல்லைன்னா என்னைக் கொன்னுடுவாங்க. உங்க எல்லாருக்கும் நிறைய வேலைகள் இருக்கும் இருந்தாலும் ஒரே ஒரு நாளை எனக்காக ஒதுக்குங்க. வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலமோ டெலிபோன்லயோ பேசறதெல்லாம் கூடாதாம். நேர்லயே கலந்துக்கணும்னு சொல்றாங்க. தயவு செஞ்சு சிரமத்தைப் பாக்காம வந்திருங்க. என் உசிரு உங்க கைலதான் இருக்கு.

(எம்.டி.யை சற்று ஓரமான அழைத்துச் செல்கிறார்கள். அனந்தன் கேமரா முன்னால் வருகிறார்) : இந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்த விரும்புவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. நேற்று நடந்ததைக் கண்டு நாங்கள் பேசாமல் இருந்தோம். எனவே, இன்று எங்களுக்கு நடக்கிறது. இன்று எங்களுக்கு நடப்பதைப் பார்த்து நீங்கள் பேசாமல் இருந்தால் நாளை உங்களுக்கும் நடக்கும். இறைவனின் அருளால் அப்படி ஒன்று நடக்காமல் இருக்கவேண்டும். ஆனால், நம் தெய்வங்கள் முதுமையடைந்துவிட்டன. நம் பிரார்த்தனைகளைக் கேட்கும் சக்தியை இழந்துவிட்டன. நம் வேதனைகளைப் பார்க்கும் சக்தியை இழந்துவிட்டன. இந்தப் பரந்து விரிந்த பூமியில் நமக்கானதை நாமே பார்த்துக் கொள்ளும்படி தனித்துவிடப்பட்டிருக்கிறோம். இன்று நம்மைத் தாங்கி நிற்கும் நிலம் நம்மை ஒன்றிணைக்கிறது. நாளை நம் வேதனைகள் ஒன்றிணைக்கும். மலைச் சரிவில் உருளும் பாறைபோல் ஆகிவிட்டது நம் பூமி. இன்று அழுந்திக் கிடப்பது நாங்கள். நாளை அது நீங்களாக இருப்பீர்கள். நாங்கள் பட்டுத் தெரிந்து கொண்டதை நீங்களாவது பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். இது முதல் காரணம்.

இரண்டாவதாக, இந்தப் பிரச்னை இந்த அளவுக்கு மோசமானதுக்கு யார் காரணம் என்பது தெரியவரவேண்டும். அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும். எங்கள் பாணியில் அவங்களுக்கு தண்டனை கொடுப்பது ரொம்பவும் எளிது. ஆனால், இந்த சமூகத்துக்கு உண்மை தெரிய வேண்டும். இந்த சமூகமே அந்த தண்டனையைத் தர வேண்டும். அதுதான் முக்கியம். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்கள். உங்கள் கருத்துகளை தபாலில் எல்லாம் அனுப்ப வேண்டாம். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள். இ.மெயில் அனுப்புங்கள். இலங்கை பிரச்னை பற்றி உங்களிடம் புகைப்படங்கள் இருந்தால் அனுப்புங்கள். வீடியோ கிளிப்பிங்க்ஸ் இருந்தால் அனுப்புங்கள். பொன் ஆபரணத்தில் பதிக்கப்பட்ட வைரக் கல்போல் இருந்த இலங்கை ஒரு சயனைட் குப்பி போல் ஆகிவிட்டது. தாமரை மொட்டுபோல் குவிந்திருந்த இலங்கை இன்று தூக்குக் கயிறுபோல் தொங்கிக் கொண்டிருக்கிறது. கடலில் கலந்த கண்ணீர் துளிபோல் உருத்தெரியாமல் ஆகிக்கொண்டிருக்கிறது. சூரியனின் கதிர்கள் பட்டு கடல் நீர் ஆவியாகி மேகமாகி, குளிர்ந்து காற்றில் மிதந்து, மலைகளில் பொழிந்து நன்னீர் ஆறாக மாறுவதுபோல், அந்த ஒற்றைக் கண்ணீர் துளி கடலில் இருந்து மேலெழ வேண்டும். உலகம் முழுவதற்குமான படிப்பினையின் கரு மேகமாக அது சூல் கொள்ள வேண்டும். சரித்திரத்தின் காற்றில் மிதந்தபடி அலையும் அது நம் மன சாட்சியின் மலைகளால் தடுக்கப்பட்டு சகோதரத்துவத்தின் முடிவற்ற துளிகளைப் பொழிய வேண்டும். அலட்சியத்தின் தரிசு மண்டிக் கிடக்கும் மண்ணில் மனிதாபிமானத்தின் மழை பெய்தாக வேண்டும். அராஜகத்தின் பாறையைப் பிளந்து தன்மானம் தன் தளிரிலைகளை உயிர்ப்பித்தாக வேண்டும்.

(தொடரும்)