இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Thursday, August 19, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 5

காட்சி - 11

ரியாலிட்டி ஷோவின் உண்மையான நோக்கத்தைப் போராளிகள் விளக்குகிறார்கள்

அனந்தன் : உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒருவர் தீ வைத்துக் கொல்லப்படுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்யப் போகிறோம். தீக்குளித்த காலம் மலையேறிவிட்டது. இனி தீ வைப்பு காலம்.

(கடத்திக் கொண்டு வரப்பட்டவர்கள் பயத்தில் உறைந்துபோய் அமர்ந்திருக்கிறார்கள்).

அனந்தன் : நீல அலைகள் வந்து உரசும் இலங்கையின் வெண்மணல் கடலோரங்களில் கேட்கும் கதறல்களைப் போலவே இங்கு நீங்கள் கேட்கப் போகும் கதறலும் நிஜமானவை. கோயில் பிரகாரங்களிலும் பள்ளிக்கூடச் சுவர்களிலும் சிதறிய ரத்தத்தைப் போலவே இங்கு சிந்தப்படும் ரத்தமும் நிஜமானவை. இது நீங்கள் பார்க்கத் தவறிய நெடுந்தொடரின் சில காட்சிகள். படிக்கத் தவறிய நாவலின் சில பக்கங்கள். கேட்கத் தவறிய பாடலின் சில வரிகள். இவற்றை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். படித்திருக்க வேண்டும். கேட்டிருக்க வேண்டும். ஆனால், நீங்களோ கலை இரவுக் கொண்டாட்டங்களிலும் திரைப்பட இசை நாடா வெளியீட்டு விழாக்களிலும் மூழ்கிக் கிடந்தீர்கள். அங்கே மருத்துவமனைகளில் குண்டுகள் வீசப்பட்டபோது நீங்கள் மானாட மயிலாட என்று கூத்தடித்தீர்கள். கருத்தடை மாத்திரைகள் வலுக்காட்டாயமாக திணிக்கப்பட்டு எம் இனப் பெண்கள் கற்பழிக்கப்பட்டபோது ஊரறிந்த வேசிகளின் இல்லாத கற்பைக் காப்பாற்ற தெருவில் இறங்கிக் கொடி பிடித்தீர்கள்.

அரசியல்வாதிகள், காவல் துறையினர், நீதிமான்கள், பத்திரிகையாளர்கள், திரைப்படத்துறையினர் என அனைவருக்கும் எல்லாமும் தெரிந்திருந்தன. ஆனால், அவர்கள் தமக்கு சாதகமான உண்மைகளை மட்டும் முன்வைத்தனர். பொய்யை விட அபாயமானது அரை உண்மை. இன்று உங்கள் முன்னால் முழு உண்மை முதன் முதலாக வைக்கப்பட இருக்கிறது. அதற்காகத்தான் இலங்கை பிரச்னையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு பிரதிநிதிகளையும் உங்கள் முன் அழைத்து வந்திருக்கிறோம்.ஒவ்வொருவரும் திரைமறைவில் நடந்த விஷயங்கள் பற்றியும் பிரச்னையின் மூல காரணம் பற்றியும் பேசுவார்கள். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பொதுவாக ஒருவரைக் கைது செய்வதானால், அவர் செய்த குற்றத்தை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறையைத்தான் சார்ந்தது. ஆனால், இந்த பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்படியோ கைது செய்யப்பட்டவர் தான் தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபித்தாக வேண்டும். அதே விதிதான் இங்கும் அமல்படுத்தப்படப் போகிறது. இங்கு இருக்கும் அனைவரும் அவர்களை ஏன் தீ வைத்துக் கொல்லக்கூடாது என்ற காரணத்தை அவர்களே முன்வைத்தாக வேண்டும். யார் உண்மையை பெருமளவுக்கு மறைத்திருக்கிறர்கள்… யார் மிகப் பெரிய குற்றவாளி என்பதை மக்கள் ஆன்லைன், எஸ்.எம்.எஸ். மூலம் தீர்மானிக்கவேண்டும். யார் குற்றவாளி என்று சர்வதேச சமூகம் தீர்ப்பளிக்கிறதோ அவரை மற்றவர்கள் உங்கள் கண் முன்பாக தீ வைத்துக் கொல்வார்கள். இதுதான் நிகழ்ச்சியின் வடிவம்.

வேறு எந்த சேனலுக்கும் தாவி விடாதீர்கள் என்றெல்லாம் நாங்கள் கேட்கப் போவதில்லை. அப்படிப் போகவேண்டும் என்று நீங்கள் விரும்பினாலும் அது உங்களால் முடியாது. ஏனென்றால், இந்தத் தொலைகாட்சி சேனலை மட்டுமல்ல வேறு எந்தத் தொலைக்கட்சியிலும் வேறு எதுவும் பார்க்க முடியாதபடி எல்லாவற்றையும் செயலிழக்கச் செய்துவிட்டிருக்கிறோம். நீங்கள் இதைப் பார்த்தாக வேண்டும். இதுவரை நீங்கள் பார்க்கத் தவறியதற்கான பரிகாரமாக நீங்கள் இதை மட்டுமே பார்த்தாக வேண்டும்.

காட்சி - 12

ஒட்டு மொத்த உலகின் கவனமும் இந்த நிகழ்ச்சி மீது குவிகிறது. கடத்தப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது தரப்பை முன் வைக்கிறார்கள் (முதலில் ஐ.நா. செயலர்)

ஐ.நா. செயலர் : இந்தப் பிரச்னையில் எங்களை எதற்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் என்று உண்மையிலேயே தெரியவில்லை. தயவு செய்து எங்கள் மீதான குற்றச்சாட்டை முதலில் சொல்லுங்கள்.

அனந்தன் : இலங்கையில் கண் முன்னே ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியபோது, ஆயிரம் ஆண்டுகள் கழித்து உருகப் போகும் பனிப் பாறைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டுவந்ததற்கு… மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மீது கொத்து குண்டுகள் வீசப்பட்டபோது மவுனமாக அதைப் பார்த்து ரசித்து வந்ததற்கு. பின் வாசல் வழியே பேரழிவு ஆயுதங்களை விற்றுவிட்டு முன் வாசல் வழியே உலர் உணவுப் பொட்டலங்களை அனுப்பிக் கொண்டிருந்ததற்கு. ஆக்ஸிஜன் குழாய் பொருத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு நோயாளியின் மூச்சு முட்டல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததற்கு… இன்னும் சொல்லப்போனால், அந்த ஆக்ஸிஜன் சிலிண்டரின் வால்வை ரகசியமாக மூடிய குற்றத்துக்கும் சேர்த்து உங்களை கூண்டில் ஏற்றி விசாரிக்க விரும்புகிறோம்.

ஐ.நா. செயலர் : விசித்திரமாக இருக்கிறது இந்த வழக்கு. ஊரின் எங்கோ ஒரு மூலையில் தவறு நடந்தால் நீதி கேட்டு முறையிட வேண்டிய ஒரு நபர்தான் நீதிபதி. அவரிடம் நடந்ததை ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னால், நடுநிலையாக அவர் ஒரு தீர்ப்பைச் சொல்லுவார். ஒரு நீதிபதியால் இவ்வளவுதான் முடியும். அந்த தீர்ப்பை அமல்படுத்தும் அதிகாரம் கூட அவருக்குக் கிடையாது. அப்படிப்பட்ட நிலையில், நீதிபதி ஒருவரைப் பார்த்து ஊரின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் பிரச்னைக்கு நீதான் காரணம் என்று குற்றம் சுமத்துவதுபோல் இருக்கிறது நீங்கள் செய்வது.

உண்மையில் ஒரு நாட்டின் இறையாண்மை இன்னொரு நாட்டினால் பாதிப்புக்கு உள்ளானால்தான் ஐ.நா.சபை தலையிட்டுத் தீர்த்துவைக்க முடியும். உள்நாட்டுக் கலவரத்தை அல்லது சம்பந்தப்பட்ட இரு நாடுகள் ஒரு பிரச்னையை பொது அரங்கில் விவாதிக்கத் தயாராக இல்லையென்றால் எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது.

அனந்தன் : நாட்டின் ஒரு பிரிவு மக்கள் இன்னொரு பிரிவினரால் அடக்கி ஒடுக்கப்பட்டால் நீங்கள் எதுவுமே செய்ய மாட்டீர்களா..? உலகம் முழுவதிலும் அமைதி என்பதுதானே ஐ.நா. கொடியில் இடம்பெற்றுள்ள ஆலிவ் இலைகள் சொல்லும் செய்தி…

ஐ.நா. செயலர் : ஆமாம்.

அனந்தன் : அதர்மம் எங்கு தலை தூக்கினாலும் ஐ.நா. அவதாரம் எடுத்து அதை அழிப்பதுதானே முறை.

ஐ.நா. செயலர் : அதுவும் உண்மைதான்.

அனந்தன் : இதில் இறையாண்மை குறித்த கேள்வி எங்கு வருகிறது. ஒரு மனிதன் மனிதனாக நடந்து கொள்ளும் வரைதானே அவனுக்கு அதற்கான மரியாதை கொடுக்க முடியும். அவன் தவறு செய்து குற்றவாளியாகிவிட்டால் மனிதனுக்கான மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையே… ஒரு அரசு தன் மக்களை அமைதியாக வாழ வழி செய்து தரும்போதுதான் அதற்கு இறையாண்மை இருக்கும். அது தன் கடமையில் இருந்து தவறிவிட்டால் அதைத் திருத்த வேண்டியது ஐ.நா.வின் பொறுப்பு தானே.

ஐ.நா. செயலர் : கோட்பாட்டு அளவில் இது என்னவோ உண்மைதான். ஆனால், நடைமுறையில் அது அவ்வளவு எளிதல்ல. ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் குடும்பத் தலைவனுக்குத்தான் கட்டுப்பட்டவர்கள். அவர்தான் அவர்களுக்கான நல்லது கெட்டதைப் பார்த்துச் செய்து தரவேண்டும். பஞ்சாயத்துத் தலைவருக்கு குடும்பத்தலைவரைவிட அதிகாரம் உண்டுதான். ஆனால், குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் சம்மதம் இல்லாமல் குடும்ப விஷயத்தில் தலையிட முடியாது. ஒரு நாட்டில் நடக்கும் சிறுபான்மை, பெரும்பான்மை சண்டை என்பது குடும்பத்தில் நடக்கும் கணவன் மனைவி சண்டையைப் போன்றது. தான் சரியாக மதிக்கப்படவில்லை என்று நினைக்கும் மனைவிக்கு பிரிந்து செல்ல உரிமையும் உண்டு. பிரியவிடாமல் தடுத்து தக்க வைக்கும் அதிகாரம் கணவனுக்கு உண்டு. இருவர் பக்கத்திலுமே அவரவருக்கான நியாயங்கள், தர்மங்கள் இருக்கும். இந்தக் குடும்பத் தகராறில் ஒரு பஞ்சாயத்து தலைவரால் என்னதான் செய்ய முடியும். சண்டை போடாம சேர்ந்து வாழுங்க என்று அறிவுரை சொல்ல மட்டுமே முடியும். அதைத்தான் செய்தோம்.

சமமா நடத்தப்படலைன்னு நினைக்கற ஒரு பிரிவினருக்கு தங்களோட அடையாளத்தை தக்க வெச்சுக்கவும் யார் தங்களை ஆளணும்னு தீர்மானிக்கற உரிமையும் நிச்சயம் உண்டு. அதே மாதிரி ஒரு தேசத்துக்கு அதனோட இறையாண்மை மற்றும் ஒற்றுமையை எப்பாடுபட்டாவது கட்டிக் காப்பாத்தற உரிமையும் உண்டு. இலங்கை விஷயத்துல யார் பக்கம் சரின்னு எங்களுக்கே ஒண்ணுமே புரியலையே… ரொம்பவும் குழம்பித்தான் இருக்கோம். ரெண்டு பிரிவினரும் ஆயுதத்தைக் கீழ போடுங்க. சேர்ந்து வாழுங்கன்னுதான் சொன்னோம். அந்த நம்பிக்கைலதான் நல்லெண்ணக் குழுக்களை அனுப்பினோம். காயம் பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தோம். அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க ஏற்பாடு செய்தோம். போர் நிறுத்தம் ஏற்பட மத்தியஸ்தம் செய்து பார்த்தோம்.

அனந்தன் : கூடவே ஆயுதங்களையும் அது வாங்கத் தேவையான பணத்தையும் இரு தரப்புக்கும் அனுப்பியும் வந்தீர்கள். அல்லவா..?

ஐ.நா. செயலர் (புருவத்தை நெரித்தபடி) : என்ன சொல்கிறீர்கள்..? ஆயுத விற்பனைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அனந்தன் : ஆயுதங்களை விற்கும் நாடுகளுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்ல முடியுமா உங்களால்.

ஐ.நா. செயலர் : அது என்னவோ முடியாதுதான்.

அனந்தன் : அப்படியானால், ஆயுதங்களை விற்று அழிவை ஏற்படுத்தும் நாடுகளுக்கு ஆதரவும் தருவீர்கள். அவர்கள் ஆயுதங்கள் விற்ற காசில் இருந்து உங்களுக்குப் போடும் பிச்சையை எடுத்துக் கொண்டு அந்த ஆயுதத்தால் அழியும் மக்களுக்கு நிவாரணமும் செய்வீர்கள் இல்லையா..? சாராயம் குடித்து அழிபவரின் குழந்தைகளுக்கு சாராயக் கடை அதிபரிடம் பிச்சை எடுத்து நோட்டு புத்தகம் வாங்கித் தருவீர்கள். இல்லையா..?

ஐ.நா. செயலர் : அப்படியில்லை நண்பரே… வளர்ந்த நாடுகள் ஆயுதங்கள் உற்பத்தி செய்வதால்தான் வளரும் நாடுகளில் சண்டைகள் நடக்கின்றன என்பது வேடிக்கையான வாதம். எந்தவொரு இடத்திலுமே ஆயுதங்கள் கிடைக்கின்றன என்பதால் சண்டை மூளுவதில்லை. சண்டை மூள்வதனால்தான் ஆயுதங்கள் தேடிப் பெறப்படுகின்றன. மேற்கு நாடுகள் ஆயுதங்கள் உற்பத்தி செய்யாவிட்டாலும் வளரும் நாடுகளில் சண்டைகள் நடந்து கொண்டுதான் இருக்கும். ஏ.கே.47-ம் போபார்ஸும் இல்லையென்றால் ஈட்டியையும் கத்தியையும் எடுத்து வெட்டிக் கொண்டு மடிவார்கள்.

வளரும் நாடுகளில் சண்டை நடப்பதற்கான காரணங்கள் எத்தனையோ இருக்கின்றன. இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்தத் தெரியாமல் இருப்பது, அதிக மக்கள் தொகை, சொந்த மக்களின் நலனில் அக்கறை அற்ற அரசியல்வாதிகள், தலைவர்கள், வர்த்தகர்கள், சமூகத்தின் சீர்கேடுகளைத் தட்டிக் கேட்காமல் அதிகாரத்துக்கு அடியாளாகப் பணிபுரியும் அறிவுஜீவிகள் மற்றும் ஊடக வர்க்கம், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல் இவைதான் பிரச்னைக்கு மூலகாரணம். இதனால்தான் அந்த நாடுகளில் வாழ்பவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுகின்றன. அதை பிரிவினை சக்திகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இப்படியாகத்தான் வளரும் நாடுகளில் அழிவுகள் ஏற்படுகின்றன. என்ன… இப்போது வளர்ந்த நாடுகள் ஆயுத உற்பத்தியிலும் முன்னணியில் இருப்பதால் வளரும் நாடுகள் அவர்களிடமிருந்து ரெடிமேட் துப்பாக்கி, பீரங்கிகளை வாங்கி சுட்டுக் கொண்டு மடிகிறார்கள். இல்லையென்றால், நிதானமாக தங்கள் விஞ்ஞானிகள் தயாரித்துத் தரும் சுதேசித் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டு சாவார்கள். நான் தெரியாமல்தான் கேட்கிறேன், மேற்கு நாடுகள் ஆயுதங்கள் தருகின்றன என்றால் வளரும் நாடுகள் ஏன் அதை வாங்குகின்றன என்ற ஒரு எளிய கேள்வியும் இருக்கத்தானே செய்கிறது.

அனந்தன் : இப்படி விட்டேத்தியாக நீங்கள் பேசுவீர்கள் என்று எதிர்பார்க்கவேயில்லை. நீங்கள் உலக மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இப்படி வலியவர்களுக்கு வெண் சாமரம் வீசக்கூடியவர் என்பது தெரியாமல் போய்விட்டது.

ஐ.நா. செயலர் : அப்படியில்லை…ஒருவர் தவறுகளையெல்லாம் தான் செய்துவிட்டு மற்றவர் மேல் பழியைப் போட்டால் எப்படி நியாயம். தீதும் நன்றும் பிறர் தர வாரா மை டியர் ஃப்ரெண்ட்.

அனந்தன் : ஆனால், நீங்கள் இதே அளவுகோலை எல்லா இடங்களிலும் கடைப்பிடிப்பதில்லையே.

ஐ.நா. செயலர் : எதன் அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள். ஐ.நா. மாளிகையின் முன்னால் சம உயரத்தில் பறக்கவிடப்பட்டிருக்கும் தேசக் கொடிகள் சமத்துவத்தை அல்லவா எடுத்துக்காட்டுகின்றன.

அனந்தன் : ஆனால், கொசோவாவில் இது போன்ற ஒரு பிரச்னை ஏற்பட்டபோது நீங்கள் தலையிட்டு சுய ஆட்சி உருவாக்கிக் கொடுத்தீர்களே… அதை எந்த அடிப்படையில் செய்தீர்கள். அல்பேனியர்களுக்கு ஒரு நியாயம். ஆசியர்களுக்கு ஒரு நியாயமா..? போஸ்னியா, கிழக்கு தைமூர், இரான் இராக், குவைத் என எத்தனை இடங்களில் தலையிட்டிருக்கிறீர்கள். அவ்வளவு ஏன்… இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டு கேவலம் இரண்டாயிரத்து சொச்சம் பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து தீவிரவாதிகளை மட்டுமல்ல அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளையும் அழிப்போம் என்று களத்தில் இறங்கி தாக்குதல் நடத்தி வருகிறீர்களே… இலங்கையில் அதைவிட நூறு மடங்கு அவலங்கள் நடந்த பிறகும் இறையாண்மை, குடும்பத் தலைவர் என்று கதையளந்து கொண்டிருக்கிறீர்களே… அமெரிக்காவில் கேவலம் வெறும் இரண்டு கட்டடங்கள் மட்டுமே இடிந்து விழுந்தன. இங்கோ ஒரு தேசமே நொறுங்கிக் கிடக்கிறதே..? ஐ.நா. என்பது உலக நாடுகளின் பிரதிநிதியா..? அல்லது அமெரிக்காவின் அடியாளா..?

உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். .. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் யாரும் ஆயுதங்கள் கொடுக்கக்கூடாது என்று தடுத்திருக்க வேண்டும். பண உதவிகள் செய்வதை நிறுத்தி இருக்க வேண்டும். ஐ.நாவின் சர்வதேச அமைதிப் படையை அனுப்பி இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தை மூலம் ஒரு தீர்வுக்கு வர கட்டாயப்படுத்தி இருக்க வேண்டும். அதைச் செய்யாதவகையில் இந்த அழிவுகளுக்கெல்லாம் நீங்கள்தானே காரணகர்த்தாவாகிறீர்கள். ஒரு குடும்பத்துக்குள் வாய் வார்த்தையாக சண்டை நடந்தால் உங்களால் தலையிட முடியாதுதான். வெட்டிக் கொண்டும் குத்திக் கொண்டும் மடிந்தால் தலையிட்டுத்தானே ஆகவேண்டும். கணவன் மனைவியைக் கொன்றால் அது குடும்பப் பிரச்னை என்று சொல்லி வேடிக்கை பார்ப்பது கொடூரம் அல்லவா..? ஒரு இனப் படுகொலையைத் தடுக்கும் அதிகாரம், கடமை உங்களுக்கு இல்லையா..?

ஐ.நா. செயலர் : முதலில் நான் ஒரு விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன். ஐ.நா. என்பது நீங்கள் நினைப்பதுபோல் சர்வ வல்லமை கொண்ட ஒரு அமைப்பு அல்ல. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாடுகளும் சேர்ந்து உருவான ஒரு அமைப்பு. அதன் அதிகாரம் என்பது பெயரளவிலான ஒன்றுதான். காஷ்மீரிலும் தனி நாடு கேட்டு சண்டை நடந்துவருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் சண்டை நடைபெற்று வருகிறது. சீனாவுக்கும் திபெத்துக்கும் இடையில் சண்டை நடக்கிறது. இப்படியாக உலகின் பல இடங்களில் இத்தகைய பிரச்னைகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எல்லா இடங்களிலும் எங்களால் தலையிட முடிவதில்லை. எது பெரிய அளவுக்கு அச்சுறுத்தலாக வளரும் என்ற பயம் இருக்கிறதோ அதை மட்டுமே முன்னுரிமை கொடுத்து தீர்க்க முடியும். மற்றபடி ஒவ்வொரு நாட்டு மக்களின் நலனையும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள்தான் கவனிக்க வேண்டும். வழிகாட்டிகளால் வழியைக் காட்டத்தான் முடியும். போய்ச் சேரும் இடத்தை வாகனத்தை ஓட்டுபவர்தான் தீர்மானிக்கிறார். ஒருவகையில் ஐ.நா. என்பது கடவுளைப் போன்றது. தவறுகளை அதனால் தடுக்க முடியாது.

இன்னொரு விஷயம் சொல்கிறேன், உலக மக்கள் தொகை என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்கிறேன். சுமார் 600 கோடிக்கும் மேல். இலங்கையின் மக்கள் தொகை வெறும் 2 கோடிதான். அதிலும் இந்தப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். உலக மக்கள் தொகையோடு இலங்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் 0.001 சதவிகிதம் தான் வரும். உலக மக்கள் தொகையை ஒற்றை மானுட உடலாகக் கற்பனை செய்து கொண்டால் ஒரு லட்சம் பேரின் மரணம் என்பது கணுக்காலில் முட் செடி உராய்ந்து ஏற்படும் லேசான கீறல் போன்றது. அவ்வளவுதான். அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டுமோ அதைத்தான் தந்திருக்கிறோம். அதே சமயம் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தகர்ப்பு என்பது முற்றிலும் வேறானது. அது அதே முள் கண்ணில் தைப்பதைப் போன்றது. கணுக்காலுக்கும் கண்ணுக்குமான வித்தியாசம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அடுத்ததாக, இலங்கையில் நடப்பது இனப் படுகொலை அல்ல. இனப்படுகொலை என்றால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இன்னொரு பிரிவினரால் முற்றாகக் கொல்லப்படுவதுதான். இலங்கையில் தனி நாடு கேட்ட புலிகளின் கட்டுப்பாட்டில் எத்தனை தமிழர்கள் இருந்தார்களோ அவர்களைவிட அதிக அளவுக்குத் தமிழர்கள், சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் மிகவும் அமைதியாக, சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என பல பிரிவினர் ஆரம்பத்திலிருந்தே சிங்களர்களுடன் இணக்கமாகத்தான் வாழ்ந்துவருகிறார்கள். எனவே, இது இனப்படுகொலை அல்ல. ஒரு தேசத்தை துண்டாக்க விரும்பும் தீவிரவாதிகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வழிக்குக் கொண்டுவர முயன்று வருகிறது.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. பொதுவாக ஒரு வீட்டில் பிரச்னை என்றால் அண்டை வீட்டில் இருப்பவர் அதில் தலையிட்டு தீர்த்து வைப்பது நல்ல பலன் தரும். எல்லா பிரச்னையையும் ஆலமரத்தடிக்குக் கொண்டுவருவது நல்லதல்ல. அந்த வகையில் இந்தப் பிரச்னையை இந்தியாவிடமே ஒப்படைத்திருந்தால் அல்லது இந்தியா உரிய கவனம் செலுத்தியிருந்தால் இவ்வளவு பிரச்னை வந்திருக்கவே செய்யாது.

அனந்தன் : இந்தியா மட்டும் என்ன செய்திருக்க முடியும்..?

ஐ.நா. செயலர் : இந்தியா வல்லரசுக் கனவுகளுடன் இருக்கும் ஒரு தேசம். இலங்கை என்பது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மதராஸ் பிரஸிடென்ஸியின் கீழ் இருந்திருக்கிறது. அந்த அளவுக்கு இலங்கை என்பது இந்தியாவின் இன்னொரு மாநிலம் போன்ற ஒரு நாடுதான். கலாசாரரீதியாகவும் பெரும் தொடர்பு இருக்கிறது. இந்தியாவில் பிறந்த புத்தர் தோற்றுவித்த மதம்தான் இலங்கையில் பெருமளவில் பின்பற்றப்படுகிறது. இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இந்தியாவிலும் பெருமளவில் இருக்கின்றனர். இவ்வளவு உறவுகள் கொண்ட இந்தியா தன் வல்லரசுக் கனவுக்கு விடப்பட்ட முதல் சவாலாக, வாய்ப்பாக இதைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். இலங்கை பிரச்னையில் தலையிட்டு அந்த பிரச்னையை சுமுகமாகத் தீர்த்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லையே… காந்தி தேசம் தன் காலடியில் நடந்த வன்முறையைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டதே. இது தவறில்லையா..?

இன்னும் சொல்லப் போனால், அது சும்மா இருக்கவில்லை. அதுதான் பிரச்னைக்குக் காரணமே. முதலில் போராளிகளுக்கு பணமும் ஆயுதப் பயிற்சியும் கொடுத்தது. அதன் பிறகு சிங்கள அரசுக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது ஒரு துர்பாக்கியமான சம்பவம்தான். ஆனால், அதற்காக, இப்படிச் செயல்பட்டிருக்கக்கூடாது. இலங்கை அரசு சீனா மற்றும் பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் வாங்க ஆரம்பித்ததும் இந்தியாவும் அலறி அடித்துக் கொண்டு ஆயுதங்களை சிங்கள அரசுக்குக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்தியா மட்டும் இந்தப் பிரச்னையில் இன்னும் கொஞ்சம் நிதானமாக அதிக அக்கறையோடு செயல்பட்டிருந்தால் பிரச்னை எளிதாகத் தீர்ந்திருக்கும்.

அனந்தன் : என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஐ.நா. செயலர் : இலங்கை அரசுடனும் புலிகளுடனும் தமிழகத் தலைவர்களை அனுப்பி பேசச் சொல்லியிருக்க வேண்டும். பிரச்னை எதுவானாலும் அப்பாவி மக்களுக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்று செயல்பட்டிருக்க வேண்டும். விவாகரத்து… அல்லது கணவனுக்கு அடங்கி வாழு என்ற அறிவுரை… எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகத் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். 1980களின் பிற்பகுதியில் அமைதிப்படையைக் களமிறக்கியவர்கள் பிரச்னையை சுமுகமாகத் தீர்த்த பிறகுதான் வெளியேறி இருக்க வேண்டும். பாதியில் விட்டுவிட்டுச் சென்றது மிகப் பெரிய தவறு. அதன் பிறகு, மதில் மேல் பூனையாக கடைசிவரை இருந்துவிட்டது. அதுதான் எல்லா பிரச்னைக்கும் காரணமாக அமைந்துவிட்டது.

அனந்தன் : அப்படியானால், உங்கள் மேல் எந்தத் தவறும் இல்லையா..?

ஐ.நா. செயலர் : எமது கரங்களில் ரத்தக் கறைகள் படிந்ததில்லை. இனி ஒருபோதும் படியவும் போவதில்லை… இதோ பாருங்கள் இப்போது கூட இலங்கைக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் கோப்பில் கையெழுத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.

(தொடரும்)

No comments:

Post a Comment