இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Monday, July 26, 2010

போபால் - 5

13, ஜூன், 1997…

உப்ஹார் திரையரங்கம், டில்லி…

பார்க்கிங் மையத்தில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் வெடித்து சிதறியது

விதிகளை மீறி அதன் அருகிலேயே கட்டப்பட்ட பார்க்கிங் ஏரியாவில் தீ பரவியது

18 கார்கள் இருக்க வேண்டிய இடத்தில் அடைக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை 36

தீயை எளிதில் அணைத்துவிடலாம் என்று உரிமையாளர்கள் அலட்சியம்

முடியாமல் போய் தீயணைப்பு பிரிவுக்கு அரை மணி நேரம் கழித்தே தகவல்

மாலை நேர போக்குவரத்து நெரிசலால் தீயணைப்பு வண்டிகள் வந்து சேர தாமதம்

திரையரங்கில் இருந்தவர்கள் பதற்றம்

நெரிசலில் மூச்சுத் திணறியே பலர் மரணம்.

வெளியே செல்லும் வழிக்கான அறிவிப்புப் பலகையில் மின்சாரம் இல்லாததால் கூட்டத்தினருக்குக் குழப்பம்

எக்ஸாஸ்ட் ஃபேன் இடைவெளியில் காட்போர்ட் வைத்து அடைத்திருந்ததால் மூச்சு முட்டி பலர் இறந்தனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 59.

தலைநகரில் மேட்டுக்குடித் திரையரங்கில் மூச்சு முட்டி, தீயில் கருகி இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு தலா ஒவ்வொருவருக்கும் சுமார் 20 லட்சம்.

போபாலில் ஃபேக்டரியைத் தொட்டடுத்த சேரியில் இறந்தவருக்கு நஷ்ட ஈடு சுமார் ரூ 25,000.

இறந்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே..!

திரையரங்க உரிமையாளருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை (அது பின்னர் ஒன்றாகக் குறைக்கப்பட்டது). ஆஆஆயிரம் உரூபாய்கள் அபராதம்.

திரையரங்கக் காவலாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை. டிக்கெட் கிழித்துக் கொடுத்தவரை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாருக்குள்ளே நல்ல நாடு… எங்கள் பாரத நாடு...! பாரதியின் பாடல் கம்பீரமாக ஒலிக்கிறது.

பிரேக் முடிந்து ஷோ ஆரம்பம்.

ஆண் : வெல் கம் டு த ஒன் அண்ட் ஒன்லி நம்பர் ஒன் துடப்பக் கட்டையின் நம்பர் ஒன் கேம் ஷோ. நம்மளோட அடுத்த கண்டெஸ்டண்ட் கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் ஸ்டூடியோவுக்கு வர முடியலை. ஆனா போன்லயே தான் பார்த்ததை சொல்லப் போறாரு. சம்பவம் நடந்த போது போபாலுக்கு பக்கத்து ரயில்வே ஸ்டேஷன்ல ஸ்டேஷன் மாஸ்டரா இருந்தாரு. ஓ.கே. ஓவர் டு ஸ்டேஷன் மாஸ்டர்.

ஹலோ வணக்கம் சார்.

வணக்கம்.

எங்க நிகழ்ச்சியில பங்கெடுக்க சம்மதிச்சதுக்கு ரொம்ப நன்றி சார்.

ப்ளெஷர் ஈஸ் மைன். என்னால நேர்ல வரமுடியலை. அதுக்கு என்னை மொதல்ல மன்னிக்கணும்.

பரவாயில்லை சார். அதனால என்ன..? நீங்க உங்க நேரத்தை ஒதுக்கு பேச சம்மதிச்சதே பெரிய விஷயம் இல்லையா..?

நல்லது. இதோட ஒரு வீடியோ காப்பி தருவீங்க இல்லியா..?

நிச்சயமா. அப்பறம் நீங்க பேசறது சரியா கேட்க மாட்டேங்குது. மைக்கை வாய்க்கு பக்கத்துல வெச்சுக்கோங்க.

ஓ.கே. இப்ப சரியா கேக்குதா..?

ஆமா சார். நல்லா கேட்குது. ஆனா ரொம்ப பக்கத்துலயும் கொண்டு போயிடாதீங்க.

ஓ.கே. இப்ப சரியா கேக்குதா..?

கேக்குது. இதே பொஸிஷன்லயே வெச்சு பேசுங்க.

சரி விஷயத்துக்கு வர்றேன்.

போபாலுக்கு பக்கத்துல இதராசின்னு ஒரு ஸ்டேஷன் அங்கதான் நான் ஸ்டேஷன் மாஸ்டரா இருந்தேன். அன்னிக்கு எனக்கு நைட் டூட்டி. நைட் டிரெய்ன் எல்லாம் போனதும் கொஞ்சம் லேசா கண்ணசந்தேன். நாலரை அஞ்சு மணிக்கு மறுபடியும் முழிச்சிட்டேன். அப்பத்தான் நிறைய டிரெயின் வரும். எல்லா நாளையும் போல்தான் அந்த நாளும் விடிஞ்சது. ரயில்களின் சார்ட்டைப் பார்த்தேன். மும்பை நோக்கிப் போக வேண்டிய தென் பகுதி ரயில்களிடமிருந்து சரியான சிக்னல்கள் வந்திட்டிருந்துச்சு. மேற்கில் சூரத்நோக்கிப் போய்க் கொண்டிருந்த ரயில்களில் இருந்து சிக்னல்கள் சரியாகக் கிடைத்தன. கிழக்கே நாக்பூர் நோக்கிப் போய்க்கொண்டிருந்த ரயில்களும் சரியாகவே போய்க் கொண்டிருந்தன. ஆனால், போபாலில் இருந்து வரும் சிக்னல் மட்டும் கிடைக்கவில்லை. பெர்மூடா முக்கோணம் போல் போபால் நோக்கிப் போன ரயில்கள் எல்லாம் மாயமாக மறைந்து கொண்டிருந்தன. அப்போது செல்போன் வசதி இருந்திருக்கவில்லை. தொலைபேசி வசதி கூட பெருமளவுக்குக் கிடையாது. மோர்ஸ் கோட் தான். கட் கடா கட்டுன்னு தந்தி அடிச்சு கேட்டேன். அவங்களுக்கும் மொதல்ல ஒண்ணுமே தெரியலை. ஊரே தூக்கத்தில் அமிழ்ந்துவிட்டதுபோல் இருந்திருக்கிறது. அதன் பிறகுதான் விஷ வாயு கசிஞ்ச விவரம் தெரிந்திருக்கிறது. எல்லாரும் மயங்கி விழுந்துட்டாங்க. உயிரோட இருந்தவங்க கூட்டம் கூட்டமா ஊரைவிட்டு ஓடிட்டிருக்காங்கன்னு செய்தி கிடைச்சது.

இவ்வளவு களேபரம் நடந்தபோதும் ரயில்வே ஆளுங்க ஓடலியா..?

அதெப்படி ஓடுவாங்க. ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க தம்பி. இந்த உலகத்துலயே மிகவும் சின்சியரான ஆட்கள் யாருன்னா அது இந்திய ரயில்வேக்காரங்கதான். ஒரு நகரத்தைக் காலி பண்றதுன்னா கடைசியா வெளியேறறது அவங்கதான். சீனா இந்தியா மீது படையெடுத்தப்போ தேஜ்பூர் ஊரே காலியாகிடிச்சு. எல்லாரையும் அனுப்பிட்டு கடைசி ஆளா அந்த ஊரை விட்டு வெளியேறினது யார் தெரியுமா... ஸ்டேஷன் மாஸ்டர்தான். அந்த அளவுக்குஎங்க வேலை மிகவும் முக்கியமானது.

அதனால செய்தி கேள்விப்பட்டதும் நாங்கள் மருந்துகளையும் பிற பொருட்களையும் எடுத்துக்கிட்டு வேனில் புறப்பட்டோம். எங்களுக்கு எதிரே ஒட்டுமொத்த போபாலும் காலி செய்து காரிலும், வேனிலும், வண்டிகளிலும் நடந்தும் வெளியேறிக் கொண்டிருந்தது. போபால் ரயில்வே ஸ்டேஷனில் கண்ட காட்சியை மறக்கவே முடியாது. எங்கு பார்த்தாலும் மரண ஓலம். கண்கள் பிதுங்கி, ரத்த வாந்தி எடுத்து, அடக்க முடியாத அளவுக்கு இருமியபடி மூச்சு விட முடியாமல் ஒவ்வொருவரும் செத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் மலையாளி.. இன்னொரு பக்கம் குஜராத்தி... இன்னொரு பக்கம் பெங்காளி என ஒட்டு மொத்த இந்தியாவே அங்க மரண வேதனையில துடிச்சிட்டிருந்துச்சு. ரயில்வே ஊழியர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.

டிக்கெட் கவுன்டரில் கேஷியர் டிக்கெட் கொடுப்பது போன்ற போஸிலேயே இறந்து கிடந்தார். பணப்பெட்டி அருகே திறந்து கிடந்தது. ரூபாய் நோட்டுகள் வீசிய மெல்லிய தென்றல் காற்றில் நடுங்கிக் கொண்டிருந்தன. சிக்னல் கிடைக்காததால் வெளியில் நிறுத்தப்பட்ட ரயிலின் டிரைவர் அனுமதிக் கைகாட்டியைப் பார்த்தபடியே இறந்து கிடந்தார். புகை மூட்டத்துக்குள் சிவப்பு விளக்கு வராதீர்கள் வராதீர்கள் என்று மவுனமாகக் கதறிக் கொண்டிருந்தது. அதையும் மீறி நிலையத்துக்குள் ஏதோ ஒரு ரயில் வந்துவிட்டது. அந்த ரயிலில் இருந்தவர்கள் அப்படியே தூக்கத்திலேயே இறந்து போயிருந்தனர். டி.டி.ஆர். அடுத்த ஷிஃப்டில் வருபவரிடம் சாவியையும் ரிஸர்வேஷன் சார்ட்டையும் ஒப்படைத்துவிட்டு, என் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு சீக்கிரம் கிடைக்க வழி செய்யுங்கள் என்று சொல்லியபடியே உயிரை விட்டிருந்தார்.

உங்களுக்கு எதுவும் ஆகலையா..?

நாங்கள் போனபோது விஷ வாயு கலைந்துவிட்டி போயிருந்தது. ஈசல்கள் விளக்கை மொய்ப்பதுபோல் மக்கள் மருத்துவமனையை மொய்த்தனர். ஆடைக்குள் பொதிந்தபடி கொண்டு வந்த குழந்தைகள் ஏற்கெனவே இறந்துவிட்டதை நம்ப மறுத்து மருத்துவரின் மேஜையில் கிடத்தினர். உண்மை தெரிந்திருந்தும் மருத்துவர்கள் நெஞ்சில் கை வைத்து அழுத்தி உயிர் கொடுக்க முயன்றனர். வாசல் வரை வந்துவிட்ட உண்மையை வீட்டுக்குள் வரவிடாமல் எவ்வளவு நேரத்துக்குத்தான் தள்ளிப் போட முடியும். இறந்த உடலில் இருந்து வெளியேறிய நச்சுக் காற்றைச் சுவாசித்தே சில மருத்துவர்களுக்கு மயக்கம் வந்துவிட்டது. அடுத்தடுத்த நாட்களில் நகரமே பிணக்காடாக ஆகிவிட்டது. விழுந்து கிடந்தவர்களையெல்லாம் அள்ளிக் கொண்டுபோய் ஒரு குழியில் போட்டார்கள். இந்துவா முஸ்லீமா என்றெல்லாம் கூடப் பார்க்க நேரமில்லை. குழி வெட்டி முடிந்திருந்தால் அதில் போட்டு மூடினர். இல்லையென்றால் ஒன்றாகச் சேர்த்து வைத்து எரித்தனர். உயிர் இருக்கிறதா.. இறந்துவிட்டார்களா என்று கூடப் பார்க்கவில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் இப்படித்தான் பிணக்குவியலின் உச்சியில் மயங்கிய நிலையில் இருந்திருக்கிறார். அவரையும் புதைக்க எடுத்துச் சென்றுவிட்டார்கள். முழிப்பு வந்து எழுந்து பார்த்தால் பிணக்குவியலின் மேல் படுக்க வைத்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சநேரம் மயங்கியே இருந்திருந்தால் குழியில் போட்டு மூடியிருப்பார்கள். அலறி அடுத்துக் கொண்டு எழுந்திருக்கிறார்.

அவரை வரச் சொல்லியிருக்கலாமே…செத்துப் பிழைத்த அனுபவம் பிரமாதமாக இருந்திருக்குமே.

சொல்லியிருக்கலாம்தான். ஆனால், அவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டாரே..?

என்னது… அந்த மரணக் குழி வரை போய் உயிர் தப்பியவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டாரா..?

ஆமாம். அந்த சம்பவத்துக்குப் பிறகு நடந்த விஷயங்கள் அவரை கோபப்பட வைத்தன. உரிய நிவாரணம் தராமல் அலைக்கழிக்கப்பட்டது, நம் அரசியல்வாதிகளின் மவுனம், அதிகாரிகளின் அலட்சியம் போன்றவை அவரை வருந்த வைத்தன. இதையெல்லாம் எடுத்துச் சொல்லி ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.

ஓ… இது இன்னும் ட்ரமாட்டிக்காக இருக்கிறதே.

இது என்ன பிரமாதம். விதவைகள் காலனி என்ற ஒன்று உருவாக்கப்பட்டது தெரியுமா..?

என்ன சொல்கிறீர்கள்?

இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்களின் மனைவிகள் வாழ்வதற்கென்றே தனியாக ஒரு கிராமமே கட்டிக் கொடுக்கப்பட்டது. அதற்கு விதவைகள் காலனி என்று பெயரும் சூட்டப்பட்டது. அந்த இரவு ஒரு கொடுங்கனவின் ஆரம்பம் மட்டும் தான். பொதுவாகக் கனவுகள் தூங்கும்போதுதான் வரும். பயங்கரமாக இருந்தால் முழித்துக் கொண்டு அதில் இருந்து தப்பிவிட முடியும். ஆனால், விழித்தபடியே காண நேர்ந்த கனவு இது. மேலும் இதில் தூங்கித் தப்பிக்கவும் முடியாது.

விபத்து நடந்த மறுநாள் நீங்கள் போபாலில் இருந்திருக்க வேண்டும். ஹிரோஷிமா நாகசாகியில் வீசப்பட்ட அணு குண்டுகளைப் போன்ற ஒரு பயங்கரம். கையெட்டும் தூரத்தில் எல்லாம் பிணங்கள். கண்ணெட்டும் தூரமெல்லாம் எரியும் சிதைகள். கோழிகள், ஆடுகள், மாடுகள், காகங்கள் என அந்தப் பிரதேசத்தில் இருந்த அனைத்து ஜீவராசிகளும் இறந்துவிட்டிருந்தன. மரங்களில் இருந்த அத்தனை இலைகளும் உதிர்ந்துவிட்டன. முன் பனிக் காலத்தின் நடுவில் உலகில் முதன் முறையாக இலையுதிர்காலம் வந்தது. நர்மதை நதியின் கரையோரத்தில் பெரும் பள்ளங்கள் வெட்டப்பட்டன. லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட உடல்களை அப்படியே குழியில் கொட்டி மண்ணைப் போட்டு மூடினார்கள். இறந்தவர்களின் அடையாளமாக சிறு கன்று ஒன்றை நட்டார்கள். வேதனையின் கிளைகளை நாலா புறமும் பரப்பி அது இன்று மாபெரும் விருட்சமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. கைவிடப்பட்ட பூமியில், இரவிலும் பகலிலும் நில்லாமல் வீசும் கொடுங்காற்றில், அது தன் ஆயிரமாயிரம் நாவுகளால் யாராலும் கேட்கப்படாத, யாராலும் கேட்க முடியாத ஒரு துயரக் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

கூட்டம் சிறிது நேரம் மவுனமாக இருக்கிறது. ஸ்பீக்கரில் க்ளாப்ஸ் பிட் போடப்பட்டதும். அனைவரும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.

ஆண்டர்சன் மைக்கை வாங்கி : ரொம்பவும் அழகா சொன்னீங்க. இதுமாதிரியான ஒரு வருணனைக்கு என்னோட பங்களிப்பும் ஒரு காரணமா இருந்திருக்கு அப்படிங்கறதை நினைக்கும்போது பெருமையா இருக்கு. இது போன்ற தருணங்கள்தான் நம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தருகின்றன. வெல்டன் ஸ்டேஷன் மாஸ்டர். கீப் இட் அப்.

சிங்ஜி (பணிவாக) : அது உங்க கையிலதான் இருக்கு. வி டேன்ஸ் டு யுவர் ட்யூன் மாஸ்டர். எங்களுடைய நடனம் அருமையாக இருக்கிறது என்றால் அதன் முழு பெருமையும் இசை அமைத்த உங்களுக்கே சேரும்.

ஆண் அறிவிப்பாளர் : தாட்ஸ் இட். நிலவின் ஒளி சூரியனிடமிருந்து பெறப்பட்டதன்றோ. அழகாகச் சொன்னீர்கள். என் வாழ்க்கையிலேயே இது போன்ற ஒரு நிகழ்ச்சியை நான் நடத்தியதில்லை. இனியும் நடத்த முடியும் என்று தோன்றவில்லை. ஓ.கே. அந்த சந்தோஷத்தோட நாம் ஒரு சின்ன பிரேக் எடுத்துப்போம்.



ஹலோ நான் தென்காசியில இருந்து டக்ளஸ் பேசறேன்.

சொல்லுங்க டக்ளஸ் சார். எப்படி இருக்கீங்க..?

நான் நல்லா இருக்கேன் சார்..?

ஊர்ல நல்லா மழையெல்லாம் பெய்யுதா..?

பெய்யுதுங்க. இது டி.வி.ஸ்டேஷன் தானுங்களா..?

ஆமா... என்ன சந்தேகம்..?

டி.வி. வால்யூமைக் கொறைங்கன்னு சொல்லவே இல்லையே..?

நீங்க ஏற்கெனவே குறைச்சுதான வெச்சிருக்கீங்க.

இருந்தாலும் நீங்க அதெயெல்லாம் சும்மா சொல்லணும். அப்பத்தான டி.வி. ப்ரோக்ராம்ல இருந்து பேசறாங்கன்னு எங்களுக்குத் தெரியும்.

ஓஹோ. அப்படியா அது சரி. வந்த விஷயத்தை சட்டு புட்டுன்னு சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க. காத்து வரட்டும்.

அதாவதுங்க, கடவுள்தானுங்க எல்லாத்துக்கும் காரணம். மன்மோகன் சிங்ஜி ஒரு விஷயம் சொன்னாரு, மேடம் சொல்றாங்க… நான் பண்றேன் அப்படின்னு. ஆனா அது பாதி உண்மைதாங்க. நம்ம தலைவர் நெத்தியடி மாதிரி அப்பவே சொல்லிட்டாருங்க.

உங்க தலைவரா..?

யாருங்க அது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களா..?

சேச்சே... அவர் என்னோட தெய்வங்க.

தெய்வமா..? பெரியாரின் பாசறையில் பிறந்த அவரை தெய்வம்னு சொல்றீங்களே..?

ஆமா. அதுல என்ன தப்பு. அவர் தெய்வத்தைத்தான் கும்பிடக் கூடாதுன்னு சொல்லியிருக்காது. அவரைக் கும்பிடக் கூடாதுன்னு சொல்லலியே.

பின்னிட்டீங்க போங்க.

அவர் சொல்ல வர்றது என்னன்னா கண் முன்னால நான் நடமாடும் தெய்வமா இருக்கும்போது கல்லை ஏன் கும்பிடுகிறாய்..? பக்தா... உன் பகுத்தறிவைப் பயன்படுத்து. அப்படின்னு சொல்லாம சொல்றாருங்க.

கரெக்டா சொன்னீங்க. இதுவரை எங்களுக்குப் புரியாமப் போச்சே. சரி அவரு தெய்வம். உங்களோட தலைவர் யாரு.

அவரு ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரிங்க.

கூட்டம் புரிந்து கொண்டு விசிலடித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறது.

அவர் தெளிவா சொன்னாருங்க… ஆண்டவன் சொல்றான்… இந்த ஆண்டர்சன் பண்றான் அப்படின்னு.

அருணாச்சலம் செய்யறான் அப்படின்னுதான தலைவர் சொன்னாரு.

அது சரிதாங்க. அருணாச்சலம் அப்படிங்கறது இந்த உலகத்துல இருக்கற எல்லா உயிர்களையும் குறிக்கக்கூடிய சொல்லுங்க. இந்த உலகத்துல யார் எது செஞ்சாலும் அதுக்கு அந்த ஆண்டவன் தாங்க காரணம்.

ரொம்ப அருமையாச் சொன்னீங்க. இதெல்லாம் எப்படி..? தனியா ரூம்போட்டு யோசிப்பீங்களோ.

எல்லாம் கடவுள் கொடுக்கறதுதாங்க.

ரொம்ப நல்லதுங்க. தொடர்ந்து நிகழ்ச்சியைப் பாருங்க. போன் பண்ணுங்க.

ஓ.கே. வியூவர்ஸ்… எல்லா பிரச்னைக்கும் காரணம் கடவுள்தான் அப்படிங்கற ரொம்பவும் தெளிவான ஆணித்தரமான பதிலை ஒருத்தர் சொல்லியிருக்காரு. நான் நினைக்கறேன், இவருக்குத்தான் இந்தப் பரிசு போகும்னு.

அப்போது பார்வையாளர் வரிசையில் இருந்து ஒருவர் கையை உயர்த்துகிறார். அறிவிப்பாளர் அவர் அருகில் செல்கிறார்.

பார்வையாளர் : கடவுள்தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொன்னாருங்க. அதை என்னால ஏத்துக்க முடியலை.

ஏன்?

இந்தக் கடவுள் அப்படிங்கறவரு இருக்காரா இல்லையான்னே மொதல்ல தெரியாது. அப்படியே இருந்தாலும் இந்த உலகத்துல நடக்கற எல்லாத்துக்குமே அவர்தான் காரணம்னு சொல்றதுனால அவரை நாம ஆட்டத்துல சேத்துக்கக் கூடாது. இந்தக் குறிப்பிட்ட சம்பவத்துக்கு யார் காரணம் அப்படிங்கறதைப் பார்க்கணும்.

கரெக்டா சொன்னீங்க.

ஆண்டர்சன் ஐயா சொன்ன மாதிரி இது ஒரு டீம் எஃபர்ட்டு அப்படிங்கறது ஓரளவுக்குத்தான் சரிங்க. அது அவங்களுக்குள்ள இருக்கற ஒத்துமையையும் நட்பையும் பாசத்தையும் விசுவாசத்தையும் காட்டுதுங்க. ஆனா, எனக்கு என்ன தோணுதுன்னா... இந்த எல்லா பிரச்னைக்கும் அவங்க மூணு பேரும் ஓரளவுக்குத்தாங்க காரணம்.

யார் முழுக் காரணம்னு நினைக்கறீங்க.

இவங்க மூணு பேருமே ஒருவகையில வில்லு, அம்பு, நாண் மாதிரித்தான். மூணுமே ரொம்ப முக்கியமானதுதான். எந்த ஒண்ணு இல்லாம போனாலும் எதுவும் நடந்திருக்காதுதான். ஆனா வில்லும் நாணும் அம்பும் மட்டும் இருந்தாப் போதுமாங்க..?

அருமையான கேள்வி. பாயிண்டைப் பிடிச்சீட்டிங்களே..?

அங்கதான் நிக்கறான் இந்த சந்திரன்.

பிரமாதம். பிரமாதம்.

வில்லை எடுத்து நாணேற்றி அம்பை வெச்சு குறி பார்த்து அடிக்க ஒரு கை வேணும் இல்லையா..? அந்தக் கைதானுங்க எல்லாத்துக்கும் காரணம். அந்தக் கை மாதிரி முக்கியமானது யார் தெரியுமா..?

(சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் ): சொல்லுங்க சொல்லுங்க. கடவுளும் இல்லைன்னு சொல்லிட்டீங்க. யார் காரணம் யார் காரணம்..?

அந்த நபர் சிறிது இடைவெளி விடுகிறார். கூட்டத்தினரை பெருமிதத்துடன் பார்க்கிறார். ஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்ச்சியும் ஆர்வமும் பதற்றமும் கலந்து கட்டி நிற்கிறது. ஆண்டர்சனும் மன்மோகன் சிங் ஜியும், அத்வானிஜியும் கைகளைப் பிசைந்தபடி நிற்கிறார்கள்.

ஆண்டர்சன் மெதுவாக சிங்ஜி பக்கம் திரும்பி : நாம காரணம் இல்லைன்னா யாரைச் சொல்லப் போறாரு. மக்கள்தான் காரணம்னு சொல்லப் போறாரா..?

சிங்ஜி : அப்படித்தான் இருக்கும். அத்வானிஜி நீங்க என்ன நினைக்கறீங்க..?

அத்வானிஜி : கரெக்டா சொன்னீங்க. மக்கள்தான் காரணம்னு சொல்லப் போறாருன்னு நினைக்கறேன்.

எல்லாரும் அந்த பார்வையாளரை ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.

இந்த எல்லா சம்பவத்துக்கும் யார் காரணம் தெரியுமா..?

ஆண்டர்சன் ச்ஸ்பென்ஸ் தாங்க முடியாமல் : மக்கள்தான காரணம்

அந்த நபர் : இல்லை.

ஆண்டர்சனும் சிங்ஜியும் அத்வானிஜியும் அதிர்ச்சியில் உறைகிறார்கள்: என்ன… மக்களும் இல்லையா..?

அப்போ..? யார்தான் காரணம்..? யார்தான் காரணம் என்ற கேள்வி அரங்கம் முழுவதும் எதிரொலிக்கிறது.

அந்த நபர் அனைவரையும் சாந்தப்படுத்துகிறார் : அமைதி அமைதி… சொல்லத்தான போறேன்.

கூட்டத்தில் ஊசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு அமைதி நிலவுகிறது. அந்த நபர் தொண்டைய லேசாகக் கனைத்துக் கொள்கிறார். புன்முறூவல் பூக்கிறார்.

எல்லாத்துக்கும் பூச்சிதாங்க காரணம்…

கூட்டம் ஒரு கணம் அதிர்சியில் உறைகிறது. மறுகணம் அந்த மாபெரும் கண்டுபிடிப்பைக் கேட்டதும் உற்சாகத்தில் ஆர்ப்பரிக்கிறது.

பூச்சியா..? என்று ஆனந்த அதிர்ச்சியில் ஒவ்வொருவரும் உற்சாகத்தில் பக்கத்தில் இருப்பவருடன் பேசிக் கொள்கிறார்கள்.

ஆமாங்க. அது வந்து பயிரை அழிச்சதுனாலதான விஞ்ஞானிங்க பூச்சிக் கொல்லி மருந்தைக் கண்டுபிடிச்சாங்க. அதனாலதான அமெரிக்க வியாபாரிங்க அதை நம்ம ஊர்ல தயாரிக்க ஆரம்பிச்சாங்க. அதனாலதான இவ்வளவும் நடந்தது. அதனால பூச்சிதாங்க எல்லாத்துக்கும் காரணம்.

ஆஹா… என்ன ஒரு அபாரமான கண்டுபிடிப்பு.

மற்ற பார்வையாளர்கள் அவரைச் சுற்றி நின்று கைதட்டி வாழ்த்துகிறார்கள். சிலர் அவரைத் தோளில் தூக்கிக் கொள்கிறார்கள். நிலையத்தினர் அவசர அவசரமாக பூச்சி போல் ஒரு உடையைக் கொண்டு வருகிறார்கள். அதை அணிந்து கொண்டு அந்த பார்வையாளர் உற்சாகத்தில் கையை உயர்த்திக் காட்டுகிறார்.

அனைவரும் அவரைச் சுற்றி நின்று ஆடிப்பாடுகின்றனர்.

இந்தப் பூச்சி போதுமா..?

இன்னும் கொஞ்சம் வேணுமா..?

அ… இந்தா… ஆ… இந்தா…

லாங் லிவ் பூச்சி...

கடவுளைக் கண்டவனும் இல்லை...

பூச்சியை வென்றவனும் இல்லை..!

ஆண்டர்சன் ரசித்து சிரித்து கை தட்டி உற்சாகப்படுத்துகிறார். ஆண் அறிவிப்பாளர் ஆண்டர்சனை அரங்கின் மையப் பகுதிக்கு வந்து ஆடும்படிக் கேட்டுக் கொள்கிறார். ஆனால், ஆண்டர்சனுக்கு இந்திய பாரம்பரிய டப்பாங்குத்து ஆட வரவில்லை. திணறுகிறார். ஆதர்ணிய அத்வானிஜியும் மானினிய மன்மோகன் சிங்ஜியும் ஆடிக் காட்டுகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஆண்டர்சனும் இந்தப் பூச்சி போதுமா… இன்னும் கொஞ்சம் வேணுமா என்று குத்தாட்டம் போடுகிறார். அரங்கம் அதிர்கிறது. மன்மோகன் சிங் ஜி, வீ வாண்ட் என்று உரக்கக் கூவுகிறர். கூட்டம் போபால்… என்று பதிலுக்குக் கூவுகிறது. கம் பேக் என்று அத்வானிஜி முழங்குகிறார். யூனியன் கார்பைடு என்று கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.




No comments:

Post a Comment