இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Thursday, July 29, 2010

குறும்படம் - 4

ஒரு பசுமாடு மேய்ச்சல் நிலத்தில் இறந்து போகிறது. அதை எடுத்துக் கொண்டுபோக தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தகவல் போகிறது. சேரியில் இருக்கும் அனைத்து ஆண்களும் உற்சாகமாக போகிறார்கள். மாலைக்கு மேல்தான் தகவல் வந்தது என்பதால் அறுத்து எடுத்துக் கொண்டு வருவதற்குள் நள்ளிரவாகிவிடுகிறது. ஒரு மேல்சாதிக்காரன் ஆண் துணையின்றி இருக்கும் ஒரு சேரி பெண்ணிடம் தகாதமுறையில் நடந்து கொள்ள முயலுகிறார். எதேச்சையாக மாட்டுக் கறியைக் கொண்டுவர பாத்திரத்தை எடுக்க வந்த அந்தப் பெண்ணின் கணவன் அதைப் பார்த்துவிடவே சண்டை மூளுகிறது. உன் பொண்டாட்டிதான் என்னையை வரச் சொன்னா என்று அவள் மேல் பழியைப் போடுகிறான் அந்த மேல்சாதிக்காரன். அந்தப் பெண்ணுக்கு அதைக் கேட்டதும் கோபம் தலைக்கேறவே மேல்சாதிக்காரனை இருவருமாகச் சேர்ந்து அடித்துத் துரத்திவிடுகிறார்கள்.




மறுநாள் பஞ்சாயத்துக் கூட்டி இதுக்கு ஒரு முடிவு கட்டணுமென்று கணவன் சொல்கிறார். ஑நாளைக்கு என்ன ஆனாலும் அந்த மேல் சாதிக்காரரின் வயலில் தான் வேலைக்குப் போய் ஆகணும்... அவுகளைப் பகைச்சுக்கிட்டு இந்த ஊருல நம்மளால வாழ்ந்துட முடியாது... விஷயத்தைப் பெரிசு படுத்தாம இத்தோட விட்டுடு஑ என்கிறாள் அந்தப் பெண். ஆனால் அந்த மேல்சாதிக்காரனோ தன்னை அடித்தவர்களைப் பழிவாங்க முடிவு செய்கிறான். வீட்டில் உள்ள சில பொருட்களை ஒளித்துவைத்துவிட்டு திருட்டுப் பழியை அந்தப் பெண்ணின் கணவனின் மீது போடுகிறான். பஞ்சாயத்துக் கூடி அந்தப் பெண்ணின் கணவனுக்கு அபராதம் விதிக்கிறது. அவர் கட்டமுடியாது என்று மறுக்கிறார். அவர்களை ஊரில் இருந்து விலக்கி வைத்துவிடுகிறார்கள்.



நாட்கள் கழிகின்றன. அந்தப் பெண்ணின் தந்தை இறந்துவிடுகிறார். அந்த ஊரில் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் நல்ல விசேஷமானாலும் சரி அல்லாதவைகளானாலும் சரி மேல்சாதிகாரர்களின் மொய்ப்பணம் வாங்கின் கொண்டுதான் ஆரம்பிக்கவேண்டும். இறந்து போனவரின் உடல் நடுவீதியில் கிடத்தப்பட்டிருக்க அந்தப் பெண்ணும் அவளது கணவனும் மேல்சாதியினரிடம் போய் விஷயத்தைச் சொல்லி உடலை எடுக்க அனுமதி கேட்கிறார்கள். பஞ்சாயத்து விதித்த அபராதப் பணத்தைக் கட்டினாத்தான் பொணத்தை எடுக்கவிடுவோம் என்று கறாராகச் சொல்லிவிடுகிறார்கள் மேல்சாதிக்காரர்கள். தங்களிடம் இப்போது அவ்வளவு பணம் இல்லை... ரெண்டு மூணு மாசத்துல உழைச்சுக் கொடுத்திடறோம் என்கிறார்கள் அந்தப் பெண்ணும் அவளது கணவனும். அப்போ அதுக்கு அப்பறம் உடலை எரிச்சாப் போதும் சொல்லிச் சிரிக்கிறார்கள் மேல்சாதியினர்.





பிற தாழ்த்தப்பட்டவர்களும் மேல்சாதிக்காரர்களிடம் கெஞ்சிக் கேட்கிறர்கள். இறுதியில், மேல்சாதிகாரர்கள் அத்தனை பேர் கால்லயும் விழுந்து மன்னிப்புக் கேளு. அப்பத்தான் பொணத்தை எடுக்க விடுவோம் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொன்னபடியே ஒவ்வொருவரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்கள் அந்தப் பெண்ணும் அவளது கணவனும். அப்போது அவர்களை ஒரு கரம் தடுக்கிறது. நிமிர்ந்து பார்த்தால் அது ஒரு பாதிரியார். இதற்கு முன்னால் பல தடவை அவர் அந்த ஊருக்கு பிரச்சாரத்திற்கு வந்தபோது அந்த ஊர் மக்கள் அனைவரும் கூடி அவரை அவமதித்து துரத்திவிட்டிருகிறார்கள். அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு அவர்களுக்கு ஒரு துன்பம் என்றதும் உதவ அவர் முன்வந்திருந்தது தாழ்த்தபட்டவர்களிடையே அவர் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்துகிறது. அவர் காலில் விழும்ந்து கிடக்கும் அந்தப் பெண்ணையும் அவளது கணவனையும் எழுந்து நிற்க வைக்கிறார். அன்போடு அணைத்துக் கொள்கிறார். இனி நீங்க யார் கால்லயும் விழத் தேவை இல்லை. வாங்க... நாம போய் இறந்த உடலை அடக்கம் பண்ணப்போவோம். யார் தடுக்கறாங்கன்னு பார்த்துடலாம் என்று சொல்லி புறப்படுகிறார். பாதிரியாருடன் வந்த நாலைந்து பேர் இறந்த உடலைத் தூக்கிக்கொள்கின்றனர். பாதிரியார் முன்னால் நடக்க தாழ்த்தப்பட்டவர்கள் அவர் பின்னால் கம்பீரமாக நடக்க ஆரம்பிக்கிறார்கள்.

No comments:

Post a Comment